அமெரிக்காவில் 96000 இந்தியர்கள் கைது! சட்டவிரோதமாக நுழைய முயன்றதால் பகீர்! குஜராத்திகள்தான் அதிகமாம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்ற குற்றச்சாட்டில் 96 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் இருந்து பல லட்சம் பேர் வெளிநாடுகளுக்குச் சென்று செட்டிலாவதை வாடிக்கையாகவே கொண்டுள்ளனர். அதிலும் குறிப்பாக அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.

இந்தியாவில் இருக்கும் ஐடி ஊழியர்கள் அமெரிக்காவுக்குத் தேவை என்பதே இதற்குக் காரணமாகும். அமெரிக்காவில் உள்ள பல டாப் டெக் நிறுவனங்களில் இந்தியர்களைத் தலைமை பொறுப்பில் இருப்பது இதற்கு ஒரு உதாரணம்.
சட்ட விரோதம்: அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவரின் எண்ணிக்கையில் இந்தியர்கள் கணிசமாக இருக்கவே செய்கிறார்கள். இவை எல்லாம் சட்டப்பூர்வமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வோர் ஆகும். அதேநேரம் சட்ட விரோதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பலர் நுழைய முயல்கிறார்கள். அது குறித்து ஒரு பகீர் தகவல்தான் இப்போது வெளியாகியுள்ளது.
இதற்கிடையே சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைய முயன்றதாகக் கூறி 96,917 இந்தியர்கள் கைது செய்யப்பட்டதாக அமெரிக்க கஸ்டம்ஸ் மற்றும் எல்லா பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த அக். 2022 மற்றும் செப்டம்பர் 2023 வரை ஒரே ஆண்டில் இப்படி 96 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை அமெரிக்கா கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
97 ஆயிரம் இந்தியர்கள்: ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் தெற்கு எல்லை வழியாகப் பல ஆயிரம் பேர் சட்ட விரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்கிறார்கள். இங்கே பல ஆபத்துகள் சூழ்ந்து இருக்கும் நிலையில், இதில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழக்கிறார்கள். இந்த ரூட்டிலும் அமெரிக்காவின் வடக்கு எல்லை வழியாகும் ஓராண்டில் மட்டும் 97 ஆயிரம் இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றுள்ளனர்.
அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்ட இந்த 96,917 இந்தியர்களில் 30,010 பேர் கனடா எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர். அதேபோல 41,770 பேர் மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் சட்டவிரோதமாக நுழைந்ததாக அமெரிக்காவில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
5 மடங்கு அதிகரிப்பு: கடந்த 2019-2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைய முயலும் இந்தியர்களின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளது. 2019-2020 ஆண்டில் 19,883 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு அந்த எண்ணிக்கை 96 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது சட்டவிரோதமாக நுழைய முயன்று சிக்கியவர்கள் மட்டுமே. உண்மையாக அமெரிக்காவிற்குள் நுழைய முயல்வோரின் எண்ணிக்கை இதை விடப் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றே அதிகாரிகள் கூறுகின்றனர். எல்லையில் 10 பேர் நுழைய முயன்றால் அதில் ஒருவர் மட்டும் பிடிபடுவதாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர். இப்படி சட்டவிரோதமாக முயல்வோரில் பெரும்பாலானோர் குஜராத் மற்றும் பஞ்சாப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.
குழந்தைகள்: அமெரிக்க கஸ்டம்ஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.. குழந்தைகள், குடும்ப உறுப்பினர்களுடன் வரும் குழந்தைகள், குழந்தைகள் இல்லாமல் வரும் குடும்பங்கள், முதியவர்கள் என்று கைது செய்யப்பட்டோர் நான்கு பிரிவுகளாக இருக்கிறார்கள். சுமார் 730 குழந்தைகளும் அமெரிக்காவில் சட்ட விரோதமாக நுழைய முயன்றதாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications