ஈரான் மீது அணு ஆயுத தாக்குதலுக்கு ரெடியாகிறதா அமெரிக்கா? வெள்ளை மாளிகை சொன்ன மேட்டர்!
வாஷிங்டன்: ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் முழு நாகரிகமும் அழியும் என டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியது, அணு ஆயுதத் தாக்குதல் குறித்த அச்சங்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரம் வெள்ளை மாளிகை தரப்பில், இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்திருக்கிறது.
ஈரானின் முக்கிய எண்ணெய் மையமான கார்க் தீவை அமெரிக்க இராணுவம் தாக்கிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பதிவில், "ஒரு முழு நாகரிகமும் இன்றிரவு அழியும், மீண்டும் உயிர்பெறாது. நான் அதை விரும்பவில்லை, ஆனால் அது நடக்கும்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு பின்னர், உலகம் முழுவதும் ஈரான் மீது எந்த மாதிரியான தாக்குதல் நடத்தப்படும் என்பது குறித்த அச்சம் இருந்தது. துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ், இது குறித்து கூறுகையில் ஈரானிடம் சரியான முடிவு இல்லையெனில் டிரம்ப் இதுவரை பயன்படுத்தாத கருவிகளை உபயோகிக்கலாம் என்றார். "எங்களிடம் இதுவரை பயன்படுத்த முடிவு செய்யாத கருவிகள் உள்ளன என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி அவற்றை பயன்படுத்த முடிவு செய்யலாம், ஈரானியர்கள் தங்கள் நடத்தையை மாற்றிக்கொள்ளவில்லை என்றால் அதை அவர் செய்வார்" என்று எச்சரித்தார்.
டிரம்ப்பின் தற்போதைய மற்றும் முன்னாள் ஆலோசகர்கள் மத்தியில், ஈரான் மீது அணு ஆயுதத் தாக்குதலுக்கு அதிபர் உத்தரவிடலாம் என்ற அச்சங்கள் அதிகரிப்பதாக 'தி கார்டியன்' தெரிவித்தது.
இந்த அச்சுறுத்தல்கள் குறித்து பிரித்தானிய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஓவன் ஜோன்ஸ் X தளத்தில், "டொனால்ட் டிரம்ப் ஈரான் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த அச்சுறுத்துகிறார். ஒரு பேரழிவைத் தவிர்க்க அவர் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார்.
இதுவரை பயன்படுத்தப்படாத ஆயுதங்கள் பற்றி வேன்ஸ் பேசியிருந்தது, அணு ஆயுதங்களை பற்றிதான் என்று பலரும் விமர்சித்திருந்தனர். ஒரே இரவில் ஒரு நாட்டை அழிப்பது அணு ஆயுதங்களால் மட்டுமே சாத்தியம் என்றும் பேசப்பட்டது.
இப்படி இருக்கையில், ஜே.டி. வேன்ஸின் கருத்துகள், அணு ஆயுதத் தாக்குதல் பற்றியது கிடையாது என்று வெள்ளை மாளிகை மறுப்பு தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications