"கோஹினூர் வைரத்தை இந்தியாவிடமே கொடுங்க!" பிரிட்டன் மன்னரிடம் இந்தியாவுக்காக பேசும் நியூயார்க் மேயர்
வாஷிங்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் இப்போது அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே மன்னர் சார்லஸை பார்க்கும்போது இந்தியாவுக்குச் சொந்தமான 'கோஹினூர்' வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கே தர வலியுறுத்துவேன் என்று நியூயார்க் மேயர் சோஹ்ரன் மம்தானி கூறியது உலக அரங்கில் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
அமெரிக்காவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், அங்குப் பல முக்கிய தலைவர்களைச் சந்தித்து வருகிறார். அதன்படி அவர் நியூயார்க் நகர மேயர் சோஹ்ரன் மம்தானியை விரைவில் சந்திப்பார் எனத் தெரிகிறது. இந்தச் சந்திப்பிற்கு முன்னதாக மம்தானி சொன்ன சில கருத்துகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மம்தானி
அதாவது அவர் கூறுகையில், "மன்னரைத் தனியாகச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தால், கோஹினூர் வைரத்தை இந்தியாவிடமே திரும்ப ஒப்படைக்குமாறு அவரிடம் வலியுறுத்துவேன்" என மம்தானி கூறியதுதான் அந்த 'ஹாட்' டாபிக்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சோஹ்ரன் மம்தானி, தற்போது நியூயார்க் நகர மேயராகப் பொறுப்பு வகிக்கிறார். மன்னர் சார்லஸின் இந்த பயணத்தில் அவர் இரட்டை கோபுர தாக்குதலில் உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். இந்த நிகழ்வில் தான் மன்னர் சார்லஸ்- மம்தானி சந்திப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கோஹினூர் வைரம்
இந்த நிகழ்வுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது தான் மம்தானி இந்த கருத்துகளைக் கூறினார். கோஹினூர் வைரம் அதிகாரப்பூர்வமான நிகழ்ச்சி நிரலில் இல்லை என்றாலும், ஒரு தனிப்பட்ட உரையாடலில் இந்த வரலாற்றுச் சிக்கலை எழுப்பத் தான் தயார் என்று அவர் வெளிப்படையாக அறிவித்தார். மம்தானியின் இந்த கருத்துகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ரத்தம் தோய்ந்த வரலாறு
105.6 காரட் எடை கொண்ட இந்த வைரம், ஆந்திராவின் கொல்லூர் சுரங்கத்தில் கண்டெடுக்கப்பட்டது. இது வெறும் விலையுயர்ந்த கல் மட்டுமல்ல; இந்தியாவின் சிதைக்கப்பட்ட வரலாற்றின் அடையாளம். 1849ஆம் ஆண்டு லாகூர் உடன்படிக்கையின் மூலம், அப்போதைய சிறுவனாக இருந்த மகாராஜா துலீப் சிங்கிடமிருந்து பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் இந்த வைரத்தைக் கட்டாயப்படுத்திப் பறித்தது.
இந்த வைரத்தில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதாவது இந்த வைரம் ஆண்களுக்குத் துரதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. இந்தியாவில் எந்த மன்னர்கள் எல்லாம் இந்த வைர கிரீடத்தை அணிந்தார்களோ அவர்களின் சாம்ராஜ்ஜியம் எல்லாமே சரிந்துள்ளது. இதன் காரணமாகவே பிரிட்டிஷார் மன்னர்களுக்குப் பதிலாகப் பிரிட்டன் ராணியின் கிரீடத்தில் பதிக்கப்பட்டது.
வலியுறுத்தல்
முகலாய மன்னர்கள், பாரசீக ஷாக்கள் மற்றும் ஆப்கானிய அமீர்களின் கைகளைக் கடந்து கடைசியாகப் பிரிட்டிஷார் வசம் இது சென்றடைந்தது. இது காலனித்துவச் சுரண்டலின் அடையாளம் என்றும், வற்புறுத்தலின் பேரில் பறிக்கப்பட்ட நமது நாட்டின் சொத்து என்றும் இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், வைரத்தைத் திரும்பத் தர வேண்டும் என்ற குரல்களும் நீண்ட காலமாக இருக்கும் நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மம்தானியும் அதே கருத்தைக் கூறியிருக்கிறார்.
கோஹினூர் வைரம் என்பது இந்தியாவின் வரலாற்றோடு கலந்த ஒரு விஷயம். 19ஆம் நூற்றாண்டு உடன்படிக்கையைச் சுட்டிக்காட்டிப் பிரிட்டன் இன்னும் பிடிவாதம் பிடித்தாலும், காலனித்துவக் கால அநீதிகள் ஒவ்வொன்றாகச் சரிசெய்யப்பட வேண்டிய நேரம் இது என்ற குரல்களும் எழவே செய்கிறது.














Click it and Unblock the Notifications