ட்விஸ்ட்! அவர் நிரபராதிதான்.. காலிஸ்தானியை கொல்ல முயன்ற வழக்கில் இந்தியரை விடுவித்த அமெரிக்க கோர்ட்
வாஷிங்டன்: அமெரிக்க மண்ணில் காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல முயன்றதாக இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்கு விசாரணை அமெரிக்காவில் நடந்த நிலையில், அவர் எந்தவொரு குற்றத்தையும் செய்யவில்லை என்றும் அவர் நிரபராதி என்றும் அந்நாட்டு நீதிமன்றம் இப்போது தீர்ப்பளித்துள்ளது.
நமது நாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் பஞ்சாபைத் தனியாக காலிஸ்தான் என்ற நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினைவாதிகள் சிலர் வலியுறுத்தி வருகின்றனர். நமது நாட்டில் இந்த பிரிவினைவாத இயக்கங்களுக்கு முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், பல வெளிநாடுகளில் இந்த பிரிவினை அமைப்புகளுக்குத் தடை இல்லை. இதனால் வெளிநாடுகளில் இதுபோன்ற பிரிவினைவாத இயக்கங்கள் வெளிப்படையாகவே இயங்கி வருகின்றன. மேலும், சில பிரிவினைவாதிகள் வெளிநாடுகளில் இருந்தபடியே இந்தியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் உள்ளன.
பிரிவினைவாதி: அப்படி கனடாவில் உள்ள காலிஸ்தான் பிரிவினைவாதி தான் குர்பத்வந்த் சிங் பன்னு. இவருக்குக் கனடா மட்டுமின்றி அமெரிக்காவிலும் குடியுரிமை இருக்கிறது. இவர் அங்கிருந்தபடியே இந்தியாவில் பல வன்முறைகளைத் திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே புகார்கள் உள்ளன. இதற்கிடையே அமெரிக்க மண்ணில் இருந்த போது குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதி செய்ததாக இந்திய உயர் அதிகாரி ஒருவர் முயன்றதாகவும் அந்த முயற்சியை அமெரிக்கா முறியடித்ததாகவும் அந்நாட்டு அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரபர குற்றச்சாட்டை முன்வைத்தது.
சர்வதேச அளவில் இந்தச் சம்பவம் மிகப் பெரிய பேசுபொருள் ஆனது. இந்த விவகாரம் தொடர்பாக நிகில் குப்தா என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். 52 வயதான நிகில் குப்தா செக் குடியரசில் வைத்து கடந்தாண்டு கைது செய்யப்பட்டு இருந்தார். அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்றுக் கடந்த வெள்ளிக்கிழமை அவர் செக் குடியரசில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார்.
நிரபராதி: இதையடுத்து அவர் நியூயார்க்கில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு வழக்கு விசாரணை நடந்த நிலையில், அவர் எந்த குற்றமும் செய்யவில்லை.. அவர் நிரபராதி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக அவரது வழக்கறிஞர் ஜெஃப்ரி சாப்ரோவ் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் அவர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், அவர் உடனடியாக ரிலீஸ் செய்யப்படுவாரா அல்லது செக் குடியரசு நாட்டிற்கு மீண்டும் நாடு கடத்தப்படுவாரா என்பது விரைவில் தெரிய வரும்.
வழக்கறிஞர் சொல்வது என்ன: இது தொடர்பாக நிகில் குப்தா வழக்கறிஞர் மேலும் கூறுகையில், "இது இரு நாடுகளுக்கும் இடையேயான ஒரு சிக்கலான விஷயம்.. இப்போதே ஒரு முடிவை எடுக்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறோம்.. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும். எவ்வளவு அழுத்தம் வந்தாலும் அதற்கெல்லாம் அடிபணியக் கூடாது" என்றார்.
நிகில் குப்தா இந்திய அதிகாரி ஒருவரின் அறிவுரைப்படியே காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொலை செய்யத் திட்டமிட்டார் என்பதே அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டாகும். இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு தனியாக விசாரணைக் குழுவையும் அமைத்துள்ளது.
பின்னணி: அந்த காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல நிகில் குப்தா கூலிப்படையை அணுகியதாகவும் இதற்காக முன்பணமாக 15,000 டாலர்கள் அவர் கொடுத்ததாகவும் அமெரிக்கா குற்றச்சாட்டுகிறது. இதற்குப் பின்னணியில் இருக்கும் இந்திய உயர் அதிகாரி யார் என்ற தகவலை அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
அதேநேரம் கடந்த ஏப்ரல் மாதம் இது தொடர்பாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் இந்தியாவின் ரா பிரிவில் பணிபுரியும் அதிகாரி விக்ரம் யாதவ் என்பவர் இதன் பின்னணியில் இருப்பதாகவும் இதற்கு அப்போதைய ரா தலைவர் சமந்த் கோயல் அனுமதி அளித்ததாகவும் கூறப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த செய்தியையும் இந்திய வெளியுறவுத் துறை திட்டவட்டமாக நிராகரித்தது.












Click it and Unblock the Notifications