அதிகாலையில் குலுங்கிய பிலிப்பைன்ஸ்.. சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. அச்சத்தில் உறைந்துபோன மக்கள்
பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று அதிகாலை 2 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
வாஷிங்டன்: பிலிப்பைன்சில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் உறைந்தனர்.
பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவானது.
உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் கடிடங்கள் குலுங்கியதால் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

சக்திவாய்ந்த நிலநடுக்கம்
பிலிப்பைன்சின் மாஸ்பேட் தீவில் உள்ள மியாகா என்ற இடத்தில் 11 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுமார் 1 மணி நேரம் கழித்து பின் அதிர்வுகள் ஏற்பட்டன. இதனால், மக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டது. அதிகாலை நேரத்திலும் பல இடங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அச்சத்தில் வீதிகளில் நிற்கும் காட்சிகள் அங்குள்ள சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

தூங்கிக் கொண்டு இருந்த போது
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதாக தற்போது வரை எந்த தகவலும் இல்லை. நிலநடுக்கம் குறித்து மாஸ்பேட் மாகாண போலீஸ் தலைவர் ரால்லி அல்பனா கூறுகையில், ''மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நன்கு தூங்கிக் கொண்டு இருந்த போது திடீரென வீடுகள் குலுங்கியதால் திடுக்கிட்டு எழுந்தேன். நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் எதுவும் தற்போது வரை கிடைக்கவில்லை" என்றார்.

ஆய்வு செய்ய இருக்கிறோம்
அதேபோல், உசோன் நகர போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், "நிலநடுக்கம் காரணமாக மக்கள் பல இடங்களிலும் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளிலும் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பின் அதிர்வுகளும் உணரப்பட்டது. எனினும், கட்டிடங்கள் எதுவும் சேதம் அடைந்தது போல் தெரியவில்லை. இருந்தாலும் பள்ளிக்கட்டிடங்கள் உள்ளிட்ட பொது கட்டிடங்களை ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகே கட்டிடத்தில் விரிசல் எதுவும் ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து தெரிய வரும்" என்று தெரிவித்தனர்.

கல்வி நிலையங்களுக்கு விடுமுறை
மாஸ்பேட் நகரில் அடுத்தடுத்து பின் அதிவுர்வுகள் உணரப்படுவதால் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தவரை நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படக்கூடிய பசிபிக் ரிங்க் ஆப் பயர் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், அந்த நாட்டில் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலான நிலநடுக்கங்கள் மிதமான மற்றும் லேசான அளவில்தான் ஏற்படுகிறது என்றாலும் சில நேரங்களிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களும் ஏற்படுகின்றன.

பல இடங்களில் விரிசல்கள்
இதற்கு முன்பாக கடந்த அக்டோபர் மாதம் பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான அந்த நிலநடுக்கம் அப்ரா மாகாணத்தில் உள்ள மலைப்பகுதி நகரமான டோலோரெஸ் பகுதியில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் சிலர் காயம் அடைந்தனர். மேலும் கட்டிடங்களும் சேதம் அடைந்தன. மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கியிருந்தன. அதேபோல், கடந்த ஆண்டு ஜூலை மாதம் அப்ரா மாகாணத்தில் 7.0 என்ற அளவில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன. 11 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications