குவாட் உச்சி மாநாடு: ஆஸ்திரேலியா, ஜப்பான் பிரதமர்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
வாஷிங்டன்: குவாட் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, ஆஸ்திரேலியாவின் பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் சுஹா ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.
அமெரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து குவாட் அமைப்பை உருவாக்கி உள்ளன. சர்வதேச அரங்கில் சீனாவுக்கு எதிரான யுக்தியாக இந்த குவாட் அமைப்பு செயல்பட்டு வருகிறது.

இதன் உச்சி மாநாடு இன்று நியூயார்க் நகரில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி 4 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் 5 முன்னணி நிறுவனங்களின் செயல் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது இந்தியாவில் அந்நிறுவனங்கள் முதலீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அமெரிக்க துணை அதிபரான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார்.

முன்னதாக பிரதமர் மோடி, கமலா ஹாரிஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதில் கொரோனா 2-வது அலையின் போது இந்தியாவுக்கு அமெரிக்கா உதவி செய்ததற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்திருந்தார். மேலும் இந்தியா கொரோனா தடுப்பூசிகளை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு கமலா ஹாரிஸ் பாராட்டு தெரிவித்தார். இந்த சந்திப்பின் போது கமலா ஹாரிஸை இந்தியாவுக்கு வருகை தருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான பொருளாதாரம் மற்றும் ராணுவ உறவுகளை வலுப்படுத்துவது பற்றி இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், குவாட் உச்சி மாநாடு, இந்தோ - பசிபிக் பிராந்திய உறவுகள், ஆப்கானிஸ்தான் விவகாரம் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுஹாவையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இந்தோ-பசிபிக் பிராந்திய வளர்ச்சி, டிஜிட்டல் பொருளாதாரம் உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications