கண்கள் சிவந்த டிரம்ப்.. "கிறிஸ்தவர்களை தாக்கினால் சும்மா இருக்க மாட்டேன்.." அமெரிக்கா குண்டு மழை
வாஷிங்டன்: இரவோடு இரவாக அமெரிக்கா திடீரென நைஜீரியா மீது தாக்குதலை நடத்தியுள்ளது. அங்குக் கிறிஸ்துவர்களைக் குறிவைத்து ஐஎஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா படைகள் ஐஎஸ் தீவிரவாதிகள் பதுங்கி இருந்த பல்வேறு இடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதலை நடத்தியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகில் எங்குப் போர் ஆரம்பித்தாலும் அதைத் தடுக்கிறேன் எனச் சொல்பவர் டிரம்ப். மத்தியக் கிழக்கு பதற்றம் தொடங்கிப் பல மோதல்களை முடிவுக்குக் கொண்டு வர அவர் முயன்றுள்ளார். அப்படியிருக்கும் போது அமெரிக்காவே திடீரென இப்போது ஒரு நாட்டின் மீது தாக்குதலை ஆரம்பித்துள்ளது. நைஜீரியா மீது அமெரிக்கப் படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

நைஜீரியா
நைஜீரியாவில் வசிக்கும் கிறிஸ்தவர்களைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வந்தது. அந்த மோசமான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் இப்போது தாக்குதலை ஆரம்பித்துள்ளன. இந்த தாக்குதலை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி செய்துள்ளார். நைஜீரியாவில் உள்ள ஐஎஸ் படைகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக அவர் தெரிவித்தார்.
வடமேற்கு நைஜீரியாவில் செயல்பட்டு வந்த ஐஎஸ் பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக டிரம்ப் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும், கூறுகையில், "முப்படைகளின் தளபதியாக எனது உத்தரவின் கீழ், வடமேற்கு நைஜீரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை நோக்கிச் சக்திவாய்ந்த மற்றும் தீவிரமான தாக்குதல்களை அமெரிக்கா தொடங்கியுள்ளது. இந்தப் பயங்கரவாதிகள் அங்குள்ள மக்கள், குறிப்பாக அப்பாவி கிறிஸ்தவர்களை, குறிவைத்துக் கொன்று வருகிறார்கள்.
அமெரிக்கா தாக்குதல்
பல ஆண்டுகள், ஏன் பல நூற்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது. இது தொடர்பாக ஏற்கனவே பல முறை நான் எச்சரித்தேன். பயங்கரவாத தாக்குதல்களை நிறுத்தும்படி தொடர்ந்து வலியுறுத்தினேன்.. கிறிஸ்தவர்களைப் படுகொலை செய்வதை நிறுத்தவில்லை என்றால், அவர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என ஏற்கனவே எச்சரித்திருந்தேன். நேற்றிரவு அது நடந்துவிட்டது.
பல்வேறு இடங்களில் அமெரிக்க ராணுவம் துல்லியமான தாக்குதல்களை நடத்தியது. அமெரிக்காவால் மட்டுமே இத்தகைய துல்லியமான தாக்குதல்களை நடத்த முடியும். எனது தலைமையின் கீழ், அமெரிக்கா ஒருபோதும் தீவிர இஸ்லாமியப் பயங்கரவாதத்தை அனுமதிக்காது. இறைவனின் ஆசீர்வாதம் எப்போதும் அமெரிக்காவுக்கு இருக்கும். தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உட்பட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பிரச்சனை என்ன
நைஜீரியாவில் பல ஆண்டுகளாக ஐ.எஸ். ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.. குறிப்பாக நாட்டின் வடக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இந்த அச்சுறுத்தல் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக, அமெரிக்கா சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்தின் கீழ் நைஜீரியாவைக் கவலைக்குரிய நாடாக அறிவித்திருந்தது. கிறிஸ்தவர்கள் மீதான துன்புறுத்தல் குறித்த புகார்கள் அதிகரித்த நிலையில், ராணுவ நடவடிக்கைக்கான திட்டங்களைத் தொடங்க அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்கு டிரம்ப் கடந்த நவம்பரிலேயே உத்தரவிட்டிருந்தார். மேலும், இதனால் அமெரிக்க வெளியுறவுத்துறை விசா கட்டுப்பாடுகளையும் அறிவித்திருந்தது.
மறுப்பு
நைஜீரியாவில் தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துவிட்டதை அந்நாட்டின் அதிபர் போலா டினுபு கூட ஒப்புக்கொண்டுள்ளார். தீவிரவாதிகளை ஒழிக்கத் தனது அரசு தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேநேரம் தீவிரவாதிகள் கிறிஸ்தவர்களை மட்டும் குறிவைப்பதாக எழும் புகார்களை அவர் திட்டவட்டமாக மறுத்தார். முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இரு தரப்பையுமே தீவிரவாதிகள் தாக்குவதாகவும் அதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications