விரைவில் இந்தியாவுக்கு வாங்க.. சவுதி பட்டத்து இளவரசருக்கு பிரதமர் மோடி அழைப்பு கடிதம்
வாஷிங்டன்: சவுதி அரேபியாவின் தேசிய தினம் வருகிற 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் விரைவில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளுமாறு சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கு அழைப்பும் விடுத்துள்ளார்.
இந்திய வெளியுறவு அமைச்சரான பிறகு முதன்முறையாக சவுதி அரேபியாவுக்கு ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
இந்த சுற்றுப்பயணத்தில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
உலகின் விலை உயர்ந்த சொகுசு பங்களாவில் தங்கிய சவுதி இளவரசர்! அப்படி என்ன ஸ்பெஷல்?
பிரதமர் மோடி கடிதம்
ஜெட்டா நகரில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இரு தரப்பு விஷயங்கள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் விரிவாக ஆலோசனை செய்தனர். இந்த சந்திப்பின் போது முகம்மது பின் சல்மானுக்கு இந்திய பிரதமர் மோடி எழுதிய கடிதத்தையும் வழங்கினார். அதில், சவுதி அரேபியாவின் தேசிய தினத்தையொட்டி வாழ்த்துக்களை தெரிவித்து இருந்த பிரதமர் மோடி, விரைவில் இந்தியாவுக்கு வருமாறும் அழைப்பு விடுத்து இருந்ததாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருதரப்பு உறவுகள்
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை சவுதி அரேபியாவின் தலைநகரில் ரியாத்தில் அந்நாட்டு வெளியுறவு துறை அமைச்சரை ஜெய்சங்கர் சந்தித்து பேசியிருந்தார். அப்போது தற்போதைய உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு
மேலும் G-20 உள்பட பல்வேறு நாடுகள் அங்கம் வகிக்கும் அமைப்புகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஒப்புக்கொண்டது. இதேபோல் உணவு பாதுகாப்பு, சுகாதாரம், பாராமெடிக்கல், பாதுகாப்பு, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தலாம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்திய தூதரகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது சவுதி அரேஎபிய சுற்றுப்பயணத்தின் போது, அங்குள்ள செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடாக ஆவதற்கு அனைத்து தகுதிகளையும் கொண்ட நாடு இந்தியா என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலும், ஐநா சபையும் உலக மாற்றங்களுக்கு ஏற்ப மாற வேண்டும் என்றும் கூறியிருந்தார். சவுதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் இதற்கு முன்பாக கடந்த 2019- ஆம் ஆண்டு பிப்ரவரி இந்தியாவுக்கு வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.