டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்... டிரம்பிற்கு ஆதரவாக களமிறங்கும் குடியரசு கட்சி எம்பிகள்
வாஷிங்டன்: டிரம்ப் மீதான பதவி நீக்க விசாரணை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், டிரம்பிற்கு எதிராகக் குரல் கொடுத்துவந்த எம்பிகள் பலரும் பதவி நீக்க தீர்மானத்திற்கு எதிராகவே வாக்களிப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் அதிபராக இருந்த டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். இருப்பினும், தனது தோல்வியைக் கடைசி வரை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டினார்.
மேலும், இது தொடர்பாக முதலில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், அங்கும் அவருக்குச் சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. இதையடுத்து தேர்தல் அலுவலர்களை மிரட்டுவது, தனக்குச் சாதகமான ஆட்கள் மூலம் பைடன் வெற்றியைத் தள்ளி வைக்க முயல்வது எனத் தொடர்ந்து பல முயற்சிகளையும் எடுத்தார். இருப்பினும், எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்
இந்நிலையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் - கமலா ஹாரிஸ் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, வெளியே போராடிக் கொண்டிருந்த டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று, நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். அதில் இரண்டு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். உலகிலேயே மிகப் பழைய ஜனநாயக நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் இது கறுப்பு நாளாகக் கருதப்படுகிறது.

டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம்
இந்த வன்முறை டிரம்பின் தூண்டுதலாலேயே நடைபெற்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். கடந்த ஜனவரி 13ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் குடியரசு கட்சியைச் சேர்ந்த சில எம்பிகளும் டிரம்பிற்கு எதிராக வாக்களித்தனர். டிரம்ப் தற்போது அதிபர் பதவியில் இல்லை என்பதால் பதவிநீக்க தீர்மானம் மேல் சபையில் விசாரணை செய்யப்படாமலேயே போகலாம் என்று தகவல் பரவியது. இருப்பினும், மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட சிலர் இதில் உறுதியாக உள்ளனர்.

நிறைவேறுமா?
மேல் சபையில் இந்த இந்த தீர்மானத்தின் மீதான விசாரணை வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் மேல் சபையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் வெற்றி பெற, 67 எம்பிகளின் ஆதரவு தேவை. தற்போது ஜனநாயகக் கட்சியிடம் 50 எம்பிகளே உள்ளனர். குடியரசு கட்சியின் 17 எம்பிகள் டிரம்பிற்கு எதிராக வாக்களித்தால் மட்டுமே இந்த தீர்மானம் நிறைவேற்ற முடியும். இருப்பினும், டிரம்ப் மீது எம்பிகள் பலரும் கோபமாக உள்ளதால், அவருக்கு எதிராகப் பலர் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

டிரம்பிற்கு ஆதரவாகத் தீர்மானம்
இந்நிலையில், டிரம்ப் மீதான பதவி விசாரணை கொண்டு வந்துள்ளது, அமெரிக்க அரசியலமைப்பிற்கு எதிரானது என்றும் இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி குடியரசு கட்சியின் ராண்ட் பால் என்பவர் முன்மொழிந்தார். இந்தத் தீர்மானம் 55-45 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் டிரம்ப் மீதான விசாரணை தொடங்கவுள்ளது உறுதியாகியுள்ளது.

தோல்வி ஆனாலும் வெற்றி
இருப்பினும், இது தங்களுக்குக் கிடைத்த வெற்றி என்று குடியரசு கட்சியின் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாகக் குடியரசு கட்சியின் ராண்ட் பால் கூறுகையில், "இன்னும் டிரம்பிற்கு ஆதரவாகவே 45 எம்பிகள் வாக்களித்துள்ளனர். டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானம் வெற்றிபெற 67 பேர் ஆதரவு தேவை. ஆனால் அது அவர்களுக்குக் கிடைக்காது. இந்தப் பதவி நீக்கத் தீர்மானம் இப்போதே தோல்வியடைந்துவிட்டது" என்றார். டிரம்பிற்கு எதிராக குரலெழுப்பிய பலரும்கூட, இதில் டிரம்பிற்கு ஆதரவாகவே வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications