இந்தியர்கள் வேலைக்கு வேண்டாம்.. வன்மத்தை கக்கிய டிரம்பின் நண்பர்.. யார் இந்த அமெரிக்க சிஇஓ?
வாஷிங்டன்: ‛‛இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்துங்கள். அவர்கள் நம்மை அடிமைகள் போல் நடத்துகிறார்கள்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவரும், DOGE பிரிவின் முன்னாள் நிர்வாகியும் முதலீட்டு நிறுவனமான அசோியாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜேம்ஸ் ஃபிஷ்பாக் வன்மத்தை கக்குகிறார்.
அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக எச்1 பி விசா மூலமாக அமெரிக்காவில் அதிகமாக இந்தியர்கள் தான் பணியாற்றி வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டை சேர்ந்தவர்கள் திறமை தான். இருப்பினும் கூட இந்தியர்கள் அமெரிக்கர்களின் வேலை வாய்ப்புகளை பறிப்பதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் நினைக்கிறார்.

இதனால் எச்1 பி விசாவுக்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இதனால் அமெரிக்கா சென்று இந்தியர்கள் வேலை செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. இது நம் நாட்டை சேர்ந்தவர்களுக்கு பிரச்சனையாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் அமெரிக்காவின் பிரபல தொழிலதிபர் இந்தியர்களுக்கு எதிராக வன்மத்தை கக்கி உள்ளார். அவரது பெயர் ஜேம்ஸ் ஃபிஷ்பாக்.
இந்த ஜேம்ஸ் ஃபிஷ்பாக் முதலீட்டு நிறுவனமான அசோரியாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். அதுமட்டுமின்றி டொனால்ட் டிரம்புக்கு நெருக்கமானவர்களில் ஒருவராக உள்ளார். எலான் மஸ்க் தலைமையில் செயல்பட்டு வந்த DOGE பிரிவின் நிர்வாகியாகவும் செயல்பட்டுள்ளார். இந்நிலையில் தான் ஜேம்ஸ் ஃபிஷ்பாக் கூறியுள்ளதாவது:
அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும். அவர்கள் எங்களை அடிமைப்போல் நடத்துகிறார்கள். அமெரிக்காவில் உள்ள பணிகளுக்கு தகுதியான அமெரிக்கர்கள் இல்லை என்று கூறிவிட்டு எச் 1பி விசா மூலமாக இந்தியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். உண்மையில் எச் 1பி விசா மூலம் அமெரிக்கர்களின் பணிகளை வெளிநாட்டினர் திருடி விடுகின்றனர். இதனால் அமெரிக்காவில் உள்ள பணிகளை அமெரிக்கர்களுக்கு தான் வழங்க வேண்டும்.
குறிப்பாக எச்1 பி விசா என்பது புளோரிடாவில் உள்ள அமெரிக்கர்களை பாதிக்கிறது. இங்குள்ள நிறுவனங்கள் திறமையான தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறது. இதற்காக இந்தியர்களை அழைத்து வருகிறது. அதனை நிறுத்த வேண்டும்.ஏனென்றால் FSU, UF, FAU மற்றும் UCF போன்ற பல்கலைக்கழகங்களில் படித்த அமெரிக்கர்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களை பணியமர்த்த வேண்டும். இவர்கள் திறமையானவர்களாகவும், அமெரிக்காவை நேசிக்ககூடியவர்களாகவும் உள்ளனர்.
மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தங்களின் பணியிடங்களுக்கு அமெரிக்கர்கள் யாரும் விண்ணப்பம் செய்யவில்லை என்று கூறுகின்றன. ஆனால் காலிப்பணியிடங்கள் பற்றி செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடுவது இல்லை. இதன்மூலமாக தான் வெளிநாட்டில் இருந்து ஆட்களை கொண்டு வந்து வேலைக்கு நியமனம் செய்யப்படுகின்றனர். இத்தகைய செயலால் தகுதிவாய்ந்த அமெரிக்கருக்கு வேலை, சம்பளம், மரியாதை கிடைக்காமல் போகிறது. இது வெட்கக்கேடானது. எச்1 பி விசாவை முழுவதுமாக அகற்ற வேண்டிய நேரம் இது.
இந்தியர்களும் சீன மக்களும் தாங்கள் சிறந்தவர்கள் என்று நினைக்கிறார்கள், ஆனால் அவர்கள் சுரண்டப்படுகிறார்கள். இருப்பினும் அவர்கள் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. ஏனென்றால் அவர்கள் எங்கள் சொந்த நாட்டில் அடிமைகளைப் போல் நடத்தப்படுகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
தற்போது இந்தியர்களுக்கு எதிராக விஷத்தை கக்கி உள்ள இந்த ஜேம்ஸ் ஃபிஷ்பாக் எச் 1பி விசா திட்டத்தை நீண்ட காலமாக விமர்சனம் செய்து வருகிறார். மேலும் DOGE பிரிவின் தலைமை பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகி டொனால்ட் டிரம்ப் மீது விமர்சனம் செய்தார். அப்போது ஜேம்ஸ் ஃபிஷ்பாக் டிரம்புக்கு ஆதரவாக இருந்தார். உண்மைக்கு புறம்பாக டிரம்ப் மீது எலான் மஸ்க் குற்றம்சாட்டுவதாக கூறினார். பிறகு தனது பொறுப்பை ராஜினாமா செய்தார்.












Click it and Unblock the Notifications