சுனிதா வில்லியம்ஸ் இப்போது பூமிக்கு திரும்பமாட்டார்.. அதிர்ச்சி முடிவை அறிவித்தது நாசா!
வாஷிங்டன்: கடந்த ஜூன் மாதம் போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பறந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்ட 2 நாசா விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் பூமிக்குத் திரும்புவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. சுனிதா வில்லியம்ஸ் விரைவில் பூமிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இந்த அறிவிப்பு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் 5 ஆம் தேதி போயிங்கின் புதிய ஸ்டார்லைனரில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் சோதனை பயணமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவர்கள் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.

8 நாள் பயணமாக சர்வதேச விண்வெளி நிலையம் சென்ற அவர்கள் தற்போது 80 நாட்கள் கடந்தும் பூமிக்கு திரும்ப முடியாமல் அங்கு சிக்கி உள்ளனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவது எப்போது என பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ஆனால், விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோர் விண்வெளியில் சிக்கவில்லை என்று நாசா தெரிவித்தது. எக்ஸ்பெடிஷன் 71 குழுவினருடன் புட்ச் மற்றும் சுனிதா பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் ஸ்டார்லைனர் சோதனை மற்றும் தொழில்நுட்ப பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அவசரநிலை ஏற்பட்டால், இருவரும் ஸ்டார்லைனரில் பூமி திரும்புவார்கள் என்று கூறியுள்ளது.

நாசா இதுதொடர்பான முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. “விண்வெளிப் பயணம் மிகவும் ஆபத்தானது. அது பாதுகாப்பான விண்கலனாக இருந்தாலும் தற்போது அதில் பூமிக்கு திரும்புவதில் ஆபத்து உள்ளது. அதுவும் சோதனை அடிப்படையிலான பயணம் பாதுகாப்பானது அல்ல. அதனால் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் சர்வதேச விண்வெளி மையத்தில் தங்க வைப்பது என முடிவு செய்துள்ளோம்.
சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? இன்று முக்கிய அப்டேட்டை வெளியிடுகிறது நாசா!
விண்வெளி வீரர்களான புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இல்லாமல் போயிங்கின் ஸ்டார்லைனர் காப்ஸ்யூல் பூமிக்கு திரும்பும். அதுதான் பாதுகாப்பான வழியாக இருக்கும். விண்வெளி வீரர்களின் ஒரு வார கால சோதனை விமானம் சுமார் 8 மாதங்களுக்கு நீட்டிக்கப்படும்.
வில்மோர் மற்றும் வில்லியம்ஸ் ஆகியோர் எக்ஸ்பெடிஷன் 71/72 குழுவினரின் ஒரு பகுதியாக பிப்ரவரி 2025 வரை தங்கள் பணியை முறையாகத் தொடர்வார்கள். அவர்கள் SpaceX Crew-9 பணிக்கு ஒதுக்கப்பட்ட மற்ற இரண்டு குழு உறுப்பினர்களுடன் 2025 பிப்ரவரியில் ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவார்கள்.
க்ரூ டிராகனின் நான்கு விண்வெளி வீரர் இருக்கைகளில் இரண்டு வில்மோர் மற்றும் வில்லியம்ஸுக்காக காலியாக வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications