வீட்டுக்கு போகணும்.. பொண்டாட்டி திட்டுவா.. மாட்டிக்குவேன்.. ஆளை விடுங்க.. போலீஸிடம் கெஞ்சிய நபர்!
மனைவிக்கு பயந்து படு ஸ்பீடாக வண்டியை ஓட்டி வந்த நபர் கைதாகி விடுதலையானார்
வாஷிங்டன்: புளோரிடா நகர வீதி ஒன்றில் படு வேகமாக வண்டி ஓட்டி வந்த நபரை மடக்கிப் பிடித்தனர் போலீஸார். ஏன் இப்படி வேகம் என்று அவரிடம் விசாரித்தபோது கிடைத்த தகவல் இருக்கே.. போலீஸாரே சிரித்து விட்டனராம்.
புளோரிடாவைச் சேர்ந்தவர் ஜான் இயர்ல் பிக்கார்ட். 52 வயதான இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு படு வேகமாக கார் ஓட்டி வந்துள்ளார். மணிக்கு 88 கிலோமீட்டர் போக வேண்டிய சாலையில் அவர் 144 கிலோமீட்டர் வேகத்தில் விரட்டிக் கொண்டு வந்ததால் போலீஸார் அவரை எச்சரித்து மடக்கிப் பிடித்து நிறுத்தினர்.

போலீஸாரிடம் பதட்டமாக பேசினார் ஜான். அவரை ஆசுவாசப்படுத்திய போலீஸார், ஏன் இவ்வளவு வேகம் என்று விசாரித்துள்ளனர். அதற்கு அவர் "நான் சீக்கிரம் வீட்டில் இருக்க வேண்டும். நான் என் பொண்டாட்டியை ஏமாற்றி விட்டேன். நான் வீட்டுக்குப் போகாவிட்டால் அவர் என்னை கண்டுபிடித்து விடுவார். என் குட்டு வெளிப்பட்டு விடும்" என்று கூறியுள்ளார்.
இதைக் கேட்ட போலீஸார் சிரித்துள்ளனர். பின்னர் அவரது காரை பரிசோதித்தனர். அப்போது கார் சீட்டில் அவரது டி சர்ட்டில் கொக்கைன் போதைப் பொருள் இருந்தது. இதைப் பறிமுதல் செய்த போலீஸார் அவர் மீது வேகமாக கார் ஓட்டி வந்தது, போதைப் பொருளை சட்ட விரோதமாக வைத்திருந்தது என இரு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டுக்குக் கொண்டு போய் ஆஜர்படுத்தி பிறகு விடுதலை செய்தனர். அது சரி, ஜான் பொண்டாட்டிக்கு அப்படி என்ன துரோகம் செய்தார், என்ன சொல்லி ஏமாற்றினார் என்ற விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை!
பொண்டாட்டிக்குப் பயந்து வண்டியை வேகமாக ஓட்டிய ஜான் ஏதாவது விபத்தை ஏற்படுத்தியிருந்தால் என்னாகியிருக்கும்.. !












Click it and Unblock the Notifications