50% வரி சீக்கிரமே ரத்து? இறுதியாகும் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம்.. வெளியான மிக முக்கிய தகவல்
வாஷிங்டன்: இந்தியா அமெரிக்கா இடையே கடந்த சில காலமாகவே வர்த்தக மோதல் நிலவி வருகிறது. இந்தச் சூழலில் டிரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியிருக்கும் கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக மோதல் விரைவில் முடிவுக்கு வரும் என்பது போல அவர் குறிப்பிட்டுள்ளார். அது மட்டும் நடந்தால் அமெரிக்க வரி பிரச்சினை முடிவுக்கு வரும்!
ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாகச் சொல்லியே டிரம்ப் இந்தியா மீது 50% வரி விதித்தார். இது இரு நாட்டு உறவையும் வர்த்தகத்தையும் கடுமையாகப் பாதிப்பதாக இருந்தது. அதேநேரம் இந்த இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் இறுதியாகாதது கூட வரிக்கு ஒரு காரணம் எனச் சொல்லப்பட்டது.

முக்கியம்
இந்தச் சூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறியுள்ள கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா பேச்சுவார்த்தைக்குத் தயாராகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார். இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கக் குழு டெல்லிக்கு வந்துள்ள நிலையில், நவரோ தனது டோனை மாற்றியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இந்தியா பேச்சுவார்த்தைக்கு ரெடியாகிவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி நல்லிணக்கமான, ஆக்கப்பூர்வமான தகவலைப் பகிர்ந்தார். அதற்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிலளித்தார். அதேநேரம் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.. பேச்சுவார்த்தை எப்படிப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
டிரம்ப்
டிரம்ப் வரி விதித்தது முதலே இந்தியா குறித்து சர்ச்சை கருத்துகளை டிரம்ப் தரப்பு கூறி வந்தது. இந்தச் சூழலில் கடந்த வாரம், வர்த்தகத் தடைகளை நீக்குவதற்கான பேச்சுவார்த்தைகளை இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து நடத்தி வருவதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். ட்ரூத் சோஷியலில் அவர், "வரும் வாரங்களில் எனது நல்ல நண்பர் பிரதமர் மோடியுடன் பேசுவதற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இரு நாடுகளுக்கும் நல்ல முடிவை எட்டுவதில் எந்தச் சிரமமும் இருக்காது என்று நான் உறுதியாக நம்புகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
பிரதமர் மோடி
இதற்குப் பதிலளித்த பிரதமர் மோடி, "இந்தியா-அமெரிக்கா கூட்டணி மூலம் மிகப் பெரிய நல்லது நடக்கும். வர்த்தகப் பேச்சுவார்த்தை அதற்கு வழிவகுக்கும் என்று நான் நம்புகிறேன்" என்றார். மேலும், அதிபர் ட்ரம்ப்புடன் பேசுவதற்கு தானும் ஆவலாக இருப்பதாகவும் இரு நாட்டு மக்களுக்கும் ஒரு சிறந்த, வளமான எதிர்காலத்தை இணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
பின்னணி
இந்தியா அமெரிக்கா இடையே இதுவரை ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை ஆகஸ்ட் 25- 29 வரை நடைபெறவிருந்த நிலையில், இந்தியா மீதான அமெரிக்க வரியால் அது ஒத்திவைக்கப்பட்டது. இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கத் தலைமை வர்த்தக வல்லுநர் பிரெண்டன் லிஞ்ச் டெல்லிக்கு வந்துள்ளார். இந்தச் சூழலில் தான் நவரோ இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருக்கிறது. டிரம்ப்பின் வரியால் இந்த வர்த்தகம் ஆபத்தில் தள்ளப்பட்டது. வரி காரணமாக இரு நாட்டு வர்த்தகம் 40% வரை பாதிக்கப்படலாம் எனச் சொல்லப்பட்டது. இதனால் இந்தியாவுக்கே மிகப் பெரிய சிக்கலாக இருக்கும்.












Click it and Unblock the Notifications