பிரேசிலுக்கு 50% வரி.. இந்தா புடிச்சுக்கோ! டிரம்ப் சொல்லும் காரணத்தை கேட்டா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப், தொட்டதுக்கெல்லாம் வரியை போட்டு வருகிறார். குறிப்பாக, இன்று பிரேசிலுக்கு 50% கூடுதல் வரியை விதித்திருக்கிறார். இதற்காக அவர் சொல்லியிருக்கும் காரணம் சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.
பிரேசிலின் தற்போதைய அதிபராக சில்வா இருக்கிறார். இதற்கு முன்னர் நடந்த அதிபர் தேர்தலில் அப்போது அதிபராக இருந்த வலதுசாரியாளர் போல்சனாரோ, தேர்தலில் மோசடி செய்து, ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறார். இது தொடர்பாக அவர் மீது வழக்கு இருக்கிறது. இந்த வழக்கு விசாரணை தீவிரமடைந்திருக்கும் நிலையில், அவருக்கு வெள்ளை அங்கி அணிவித்து, தூய்மைப்படுத்தும் வேலையில் டிரம்ப் இறங்கியிருக்கிறார்.

ஆம், அவர் மிகவும் நியாயமானவர், புனிதமானவர். எனவே, அவர் மீதான விசாரணையை கைவிட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பிரேசில் அரசு, டிரம்பின் பேச்சை கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளவில்லை. எனவே தனது பேச்சை கேட்காத பிரேசிலுக்கு 50% கூடுதல் வரியை போட்டிருக்கிறார்.
டிரம்ப் இப்படி அக்கப்போர் செய்வது இது முதல்முறை கிடையாது. இதற்கு முன்னர் தனது ஆதர்ச தோழனான, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் ஜாமீன் கோரி ஆஜராகியிருந்தார். இவர் அமெரிக்க அதிபரா? அவசர கால வழக்கறிஞரா? என்று தெரியாத அளவுக்கு தற்போது இறங்கி வந்திருக்கிறார்.
ஆனால் விவரமறிந்தவர்கள், பிரேசிலுக்கு விதிக்கப்பட்ட வரியை போல்சனாரோவுடன் தொடர்புபடுத்தி பார்க்கவில்லை. பிரிக்ஸ் மாநாட்டில் பிரேசில் எடுத்து வரும் முன் முயற்சிகள் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை. எனவேதான், பிரேசிலுக்கு எதிராக வரியை டிரம்ப் போட்டிருக்கிறார் என்று சொல்கிறார்கள். அதாவது, அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக சில முயற்சிகளை பிரேசில் எடுத்து வருகிறது. டாலரில் வர்த்தகம் செய்யாமல் தனது சொந்த கரன்சியில் வர்த்தகம் செய்ய முன் வந்திருக்கிறது.
மட்டுமல்லாது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள அனைத்து நாடுகளும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனால், ஏற்கெனவே டிரம்ப் பிரேசில் மீது ஒரு கண் வைத்திருந்தார். தற்போது சரியான நேரம் பார்த்து பழிவாங்கியுள்ளார் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது ஈரான், பாலஸ்தீனம் மீதான தாக்குதல்களையும் பிரிக்ஸ் நாடுகள் கண்டித்திருக்கின்றன. வரி விஷயத்தில் அமெரிக்காவின் பெயரை குறிப்பிடாமல் பிரிக்ஸ் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது எல்லாம் பிரேசிலில் நடந்த மாநாட்டில் நடந்த விஷயங்கள். எனவே தனக்கு எதிரான நடவடிக்களுக்கு எப்படி இடம் கொடுக்கலாம் என்கிற கோபமும் பிரேசில் மீது அமெரிக்காவுக்கு இருந்து வந்தது. இதன் தொடர்ச்சியாகத்தான் டிரம்ப் வரியை விதித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications