மீட்டிங் நடக்கும்போதே.. திடீரென புதினுக்கு பறந்த கால்.. டிரம்ப் செயலால் ஸ்டன் ஆன ஐரோப்பிய தலைவர்கள்
வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா மோதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று சர்வதேச தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பேச்சுவார்த்தை நடக்கும்போதே திடீரென புதினுக்கு தொலைப்பேசி மூலம் அழைத்து டிரம்ப் பேசியிருக்கிறார். வழக்கமாகச் சர்வதேச தலைவர்களுடனான ஆலோசனைக்கு இடையே இதுபோல நடக்காது. இதனால் டிரம்பின் இந்தச் செயல் பேசுபொருளாகியுள்ளது.
உக்ரைன் போர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வர பல தலைவர்கள் முயன்றும் இதுவரை பலனில்லை. ஆனால், டிரம்ப் தற்போது எடுத்து வரும் நடவடிக்கைகளுக்குப் பலன் கிடைப்பது போலவே தெரிகிறது. டிரம்ப் தரப்பு இது தொடர்பாகத் தீவிரமாக இறங்கி, பலகட்ட ஆலோசனைகளை நடத்தி வருகிறது. கடந்த வாரம் தான் அவர் புதினை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

திடீரெனப் பறந்த கால்
அதைத் தொடர்ந்து டிரம்ப் நேற்று திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற இந்த உயர்மட்ட மீட்டிங்கிற்கு நடுவே நடந்த சம்பவம் தான் இப்போது கவனம் பெற்றுள்ளது. அதாவது ஆலோசனை நடக்கும்போதே இடையில் புதினுக்கு டிரம்ப் தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்தார். இந்தச் சம்பவம், டிரம்பின் கணிக்க முடியாத ஸ்டைலையே காட்டுவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஸ்டன் ஆன தலைவர்கள்
திங்கட்கிழமை நடந்த இந்தச் சந்திப்பில் இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியும் கலந்து கொண்டனர். முதலில் ஐரோப்பிய தலைவர்கள் உடனான ஆலோசனை முடிந்த பிறகே புதினிடம் பேசவுள்ளதாக டிரம்ப் கூறியிருக்கிறார். ஆனால், திடீரென மீட்டிங்கிற்கு நடுவிலேயே புதினுக்கு டிரம்ப் போன் செய்து பேசியிருக்கிறார்.
ஜெர்மனி நாட்டை சேர்ந்த நாளேடு இது தொடர்பான செய்தியை வெளியிட்டுள்ளது. பொதுவாகச் சர்வதேச தலைவர்கள் உடனான சந்திப்பில் இதுபோல நடக்காது என்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஐரோப்பியத் தலைவர் ஒருவரும் தெரிவித்துள்ளார்.
என்ன நடக்கிறது
அதேநேரம் ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பியத் தலைவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இன்னும் முடியவில்லை. அது மீண்டும் தொடரும் என்றே தெரிகிறது. ரஷ்யா உக்ரைன் மோதல் முடிவுக்கு வரும்போது உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்கள் தரப்பட வேண்டும் என ஐரோப்பிய நாடுகள் அழுத்தம் கொடுத்தன. மறுபுறம் ஜெலன்ஸ்கியும் அமைதி ஒப்பந்தத்திற்காக எந்தவொரு பிராந்தியத்தையும் விட்ட தர முடியாது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். இதுபோல சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் கூட இந்த ஆலோசனை வெற்றிகரமாகவே முடிந்துள்ளது.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுலவர, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி- டிரம்ப் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. கடந்த ஒரு வாரமாக நடக்கும் இதுபோன்ற விஷயங்கள் சர்வதேச மோதல் விரைவில் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது என்பதையே காட்டுவதாக இருக்கிறது.
முடிவெடுக்க வேண்டியது யார்?
கடந்த வெள்ளிக்கிழமை தான் அலாஸ்காவில் புதினை டிரம்ப் நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். அதைத் தொடர்ந்து ஐரோப்பிய தலைவர்களையும் டிரம்ப் சந்தித்துள்ளார். இப்போது மோதலை முடிவுக்குக் கொண்டு வர சரியான முடிவை எடுக்கும் பொறுப்பு ஜெலன்ஸ்கியிடம் உள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இப்படி இதுவரை நடந்த எல்லாமே கிட்டத்தட்ட பாசிட்டிவாக இருந்துள்ளது.












Click it and Unblock the Notifications