"ஒரு பெரிய மனுஷன் செய்யற காரியமா இது.." ஹோட்டலில் டிரம்ப் செய்த சம்பவம்.. செம கடுப்பான மக்கள்
வாஷிங்டன்: சர்ச்சைக்குப் பெயர்போன முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப், இப்போது செய்த மற்றொரு காரியம் சர்ச்சையாகியுள்ளது. இதை நெட்டிசன்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் ஒட்டுமொத்தமாகச் சர்ச்சையின் நாயகனாக உருவெடுத்தவர் டிரம்ப். இவர் அமெரிக்க அதிபராக இருந்த காலத்திலேயே வரிசையாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். குறிப்பாக கொரோனா வைரசை மிக மோசமாகக் கையாண்டார்.

இது மட்டுமின்றி அவர் பல மோசமான புகார்களில் சிக்கியவர். கடந்த 2020இல் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோல்வியடைந்த போதிலும், அதைக் கடைசி வரை ஒப்புக் கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்துள்ளதாகத் தொடர்ந்து கூறி வந்தார்.
அப்போது அமெரிக்க நாடாளுமன்றத்திலேயே தனது ஆதரவாளர்களை முற்றுகையிட வைத்து கலவரம் செய்யக் காரணமாக இருந்தார். இதில் சிலர் உயிரிழக்கவும் செய்தனர். இது அமெரிக்க ஜனநாயகத்தின் கருப்பு நாளாகக் கருதப்படுகிறது. இது மட்டுமின்றி சமீபத்தில் ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் தொடர்ந்து வழக்கில் டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜராகவும் வேண்டி இருந்தது.
இதற்கிடையே அவர் மற்றொரு சர்ச்சையில் சிக்கினார். அதாவது 2021இல் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பிறகும் கூட, அமெரிக்காவின் அணுசக்தி ரகசியங்கள், ராணுவத் திட்டங்கள் குறித்த ஆவணங்களை வைத்திருந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டி இருந்தது.
இப்படி வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கிய அவர் இப்போது மற்றொரு விஷயத்தில் மாட்டியுள்ளார். அதாவது சீக்ரெட் ஆவணங்களை வைத்திருந்தது தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான பிறகு, லிட்டில் ஹவானாவில் உள்ள கியூபா உணவகத்திற்குச் சாப்பிடச் சென்றுள்ளார். அங்கே திடீரென டிரம்ப் வந்ததால் அனைவரும் உற்சாகமடைந்தனர். முன்னாள் அதிபரைப் பார்த்து அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
அப்போது டிரம்ப் "Food for everyone" எனக் கத்தியுள்ளார். அதாவது அங்குள்ளவர்களின் பில் பணத்தைத் தான் ஏற்பதாக அறிவித்துள்ளார். இதைக் கேட்டதும், அங்கிருந்த அனைவரும் உற்சாகமடைந்தனர். தங்கள் இஷ்டத்திற்கு விரும்பிய அனைத்தையும் சாப்பிட்டுள்ளனர். இருப்பினும், அங்குள்ள சிலருக்கு டிரம்ப் வார்த்தையில் நம்பிக்கை இல்லை.
ஏனென்றால் கடந்த காலங்களில் பல நேரங்களில் டிரம்ப் இதுபோல சொல்லிவிட்டு, காசு தராமலேயே சத்தமில்லாமல் அங்கிருந்து சென்றுள்ளார். இருப்பினும், அடுத்தாண்டு அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், அதில் டிரம்பும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்த நேரத்தில் இப்படி பில் கொடுக்காமல் செல்வது அவரது பிரசாரத்தைப் பாதிக்கும் என்பதால் டிரம்ப் நிச்சயம் பில்லை கொடுத்துவிடுவார் என்றே பலரும் நினைத்துள்ளனர்.
ஆனால், டிரம்ப் இதை வேறு மாதிரி கையாண்டுள்ளார். அதாவது அந்த உணவகத்தில் டிரம்ப் 10 நிமிடங்களுக்கு மேல் இருக்கவில்லையாம். இலவச உணவு என அறிவித்த 10 நிமிடத்தில் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். டிரம்ப் என்ன சொன்னார் என அங்கிருந்த அனைவருக்கும் தெரியும் முன்பே, அவர் அங்கிருந்து கிளம்பிவிட்டார். குறுகிய நேரத்தில் அங்குள்ள யாராலும் உணவை ஆர்டர் செய்யவோ அதற்கான பில்லை சமர்ப்பிக்கவோ முடியவில்லையாம்.
அதேநேரம் டிரம்ப் அந்த உணவகத்தில் எந்தவொரு உணவையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒரு பப்லிசிட்டிகாகவே டிரம்ப் அங்கே வந்து சென்றுள்ளார். அன்றைய தினம் அவர் தனது தனிப்பட்ட விமானத்தில் தான் உணவு உட்கொண்டாராம். இது குறித்த செய்தி இணையத்தில் டிரெண்டானது. இருப்பினும், இது குறித்துச் சம்மந்தப்பட்ட உணவகம் அல்லது டிரம்ப் எதுவும் கூறவில்லை.
இருப்பினும், ட்விட்டரில் மட்டும் இது டிரெண்டிங் ஆனது.. நெட்டிசன்கள் பலரும் டிரம்பின் செயலை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பலரும் பெரிய மனுஷன் செய்ற காரியமா இது என்ற ரேஞ்சிலேயே பதிவிட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications