அமைதிக்கான நோபல் பரிசு... டிரம்ப் மருமகன் பெயர் பரிந்துரை
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மருமகனான ஜாரெட் குஷ்னெரின் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மேற்கு ஆசியாவில் அரபு நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான உறவை சீரமைத்து, Abraham Accords ஒப்பந்தம் ஏற்பட செய்ததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் மருமகனும், வெள்ளை மாளிகையின் மூத்த ஆலோசகருமான ஜாரெட்டிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு சட்டக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியரான இவர், டிரம்பின் முக்கிய வழக்கறிஞர்களில் ஒருவர் ஆவார். 25 ஆண்டுகளாக மத்திய கிழக்கு பகுதிகளில் பதற்றத்தை ஏற்படுத்திய விவகாரத்திற்கு நான்கே மாதங்களில் ஒப்பந்தம் ஏற்படச் செய்தவர் ஜாரெட்.
ஒருவேளை 2021 ம் ஆண்டிற்கான அமைதி நோபல் பரிசுக்கு ஜாரெட்டின் பெயர் தேர்வு செய்யப்பட்டால், இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவருக்கு இந்த பரிசு வழங்கப்படும். ஜாரெட் மட்டுமின்றி, அவரது உதவியாளரான அவி பெர்கோவிட்சின் பெயரும் நோபல் அமைதி பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் பதவியில் இருந்த போது எட்டப்பட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிற்கான ஆயுதத் தொகுப்பு உட்பட அனைத்து தேசிய பாதுகாப்பு ஒப்பந்தங்களையும், தற்போது அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோ பைடனின் நிர்வாகம் மதிப்பாய்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொராக்கோ ஒப்பந்தம் குறித்து சட்டமியற்றுபவர்களிடமிருந்து சில புகார்கள் வந்துள்ளன.
டிரம்ப் பதவி விலகிய சில நாட்களிலேயே அவரது நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்த 2 பேரின் பெயர்கள் நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்பி உள்ளது. கடந்த ஆண்டு நோபல் பரிசுக்கு டிரம்ப்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்க தகவல்.












Click it and Unblock the Notifications