ஆறிய புண்ணை கிளறி விட்ட ட்ரம்ப்.. இந்தியாவுக்கு தலைவலி! கார், எலக்ட்ரானிக்ஸ்க்கு தான் பெரிய ஆப்பு!
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு உலக வர்த்தகத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, டொனால்டு ட்ரம்ப் அறிவித்த 15 சதவீத கூடுதல் வரி, இந்தியா உட்பட அனைத்து நாடுகளின் ஏற்றுமதிக்கும் புதிய தலைவலியாகப் பார்க்கப்படுகிறது. 10ல் இருந்த வரி, 15ஆக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அதனால் என்னென்ன? தாக்கம் ஏற்படும் என்பது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம்..
உலகளாவிய வர்த்தக சமநிலையை மீட்டெடுக்கும் பெயரில், ட்ரம்ப் நிர்வாகம் கடந்த ஆண்டில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் திட்டத்தை அறிவித்தது. இதை எதிர்த்து அமெரிக்க சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களும் சில மாநில அரசுகளும் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கில், அமெரிக்க உச்ச நீதிமன்றம் பெரும்பான்மை தீர்ப்பின் அடிப்படையில் ட்ரம்ப் அறிவித்த வரி நடைமுறையை செல்லாது என அறிவித்தது. இந்த தீர்ப்புக்குப் பிறகு, இந்தியா உட்பட அனைத்து நாடுகளுக்கும் பழைய வரி நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்தது.

அதன் படி, இந்தியப் பொருட்களுக்கு 3.5 சதவீத அடிப்படை வரி மட்டுமே விதிக்கப்பட வேண்டிய சூழல் உருவானது. ஆனால், இந்த நிலைமை நீடிக்க விடாமல், அதிபர் டிரம்ப் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். ஆரம்பத்தில் 10 சதவீதமாக அறிவிக்கப்பட்ட இந்த உலகளாவிய இறக்குமதி வரி பின்னர் 15 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதன் விளைவாக இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்படும் மொத்த வரி 18.5 சதவீதமாக உயர்கிறது.
முன்பு நடைமுறையில் இருந்த 3.5 சதவீத அடிப்படை வரிக்கு மேலாக 15 சதவீத கூடுதல் வரி சேர்க்கப்பட்டதே இந்த உயர்வுக்கு காரணம். அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்களின் தகவலின்படி இந்த புதிய வரி பிப்ரவரி 24 முதல் அமலுக்கு வருகிறது. இதற்கு முன்பு இந்தியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட வரி பல கட்டங்களாக உயர்ந்திருந்தது. ஒரு கட்டத்தில் 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டதுடன், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதாக குற்றச்சாட்டு முன்வைத்து மேலும் 25 சதவீதம் வரி சேர்க்கப்பட்டது. இதனால் இந்தியப் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீதம் வரி விதிக்கப்பட்ட நிலையும் உருவாகியிருந்தது.
பின்னர் இரு நாடுகளின் தலைவர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தைக்கு பின் அந்த வரி 18 சதவீதமாக குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. புதிய உலகளாவிய 15 சதவீத வரி நடைமுறைக்கு வந்ததன் பின்னர், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தகவல் தொழில்நுட்ப சேவைகள், மருந்துகள் மற்றும் ஆடைத் துறைகள் கூடுதல் செலவுசுமையை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு உலகளவில் கார் மற்றும் மின்னணு பொருட்களின் விலையையும் உயர்த்தக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்க அரசு இந்த நடவடிக்கையை உள்நாட்டு பொருளாதாரத்தை பாதுகாக்கும் முயற்சியாக விளக்குகிறது. அதே நேரத்தில், சர்வதேச வர்த்தக அமைப்புகள் மற்றும் பல நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. உலக வர்த்தகத்தில் பதற்றம் அதிகரிக்கும் அபாயமும் சுட்டிக்காட்டப்படுகிறது. சட்ட ரீதியாக இந்த கூடுதல் வரி தற்காலிகமாக மட்டுமே அமலில் இருக்கும். அவசர பொருளாதார அதிகார சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட இந்த உத்தரவு 150 நாட்கள் வரை செல்லுபடியாகும்.
அதன் பிறகு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கிடைத்தால்தான் இது நீடிக்கும்; இல்லையெனில் உத்தரவு காலாவதியாகும். மொத்தத்தில், புதிய வரி உயர்வு இந்தியா-அமெரிக்கா வர்த்தக உறவுகளில் புதிய சிக்கலை உருவாக்கியுள்ளது. வரி உயர்வின் நீண்டகால விளைவுகள் மற்றும் நாடுகள் எடுக்கும் எதிர் நடவடிக்கைகள் உலக வர்த்தகத்தின் அடுத்த கட்டத்தை தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications