இதென்ன நம்மூர் அரசியல் மாதிரி இருக்கு! தனக்கு தானே சிலை வைத்துக்கொண்ட டிரம்ப்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது துப்பாக்கிச் சூட்டில் இருந்து நூலிழையில் தப்பித்தார். இந்த சம்பவம் தத்ரூபமாக சிலையாக வடிவமைக்கப்பட்டு, அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருக்கிறது. நம்மூரில்தான் சிலை அரசியல் ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்த்தால், அமெரிக்காவிலும் இதே பாணியை அரசியல்வாதிகள் கையில் எடுத்திருப்பது பேசு பொருளாகியுள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பென்சில்வேனியாவின் பட்லர் நகரில் அந்த சம்பவம் நடந்தது. அதிபர் தேர்தலில் போட்டியிட்டிருந்த டிரம்ப், தேர்தல் பிரசாரத்திற்காக இங்கு வந்திருந்தார்.

திறந்த மேடையில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களுக்கு மத்தியில் அவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு சலசலப்பு. டிரம்ப்புக்கு நேர் எதிரே பின்னால் அமர்ந்திருந்தவர்கள் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்திருக்கிறது. டிரம்புக்கு இந்த விஷயம் தெரியவில்லை. அவர் பேசிக்கொண்டே இருந்தார்.
அடுத்த இரண்டு நொடிகளில், காதில் ஏதே உரசியதை உணர்ந்த அவர் கையை வைத்து பார்த்தார். ரத்தம் வடிந்திருக்கிறது. உடனே பாதுகாப்புக்கு நின்றிருந்த அதிகாரிகள் அனைவரும் அவரை சுற்றிக்கொண்டனர். அவர் தன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது என்பதை உணர்ந்துக்கொண்டார். இருப்பினும் FIGHT..FIGHT.. FIGHT என மூன்று முறை முழக்கமிட்டார். அவரை பார்த்த ஆதரவாளர்களும் ஆக்ரோஷமாக அதே முழக்கத்தை எதிரொலித்தனர்.
பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் தேடி கண்டுபிடிக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் மிகவும் பாதுகாப்பு மிக்க நபராக இருக்கும் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூட்டை நடத்தியது யார்? அவருக்கு பின்னால் யாரேனும் இருக்கிறார்களா? என்கிற கோணத்தில் விசாரணை தொடங்கியது. மறுபுறம் தேர்தலில் இவர் வெற்றி வாகை சூடினார்.
இந்நிலையில், அதிபர் மாளிகையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தும் ஓவல் அலுவலகத்தில் துப்பாக்கிச்சூடு சம்பவம் சிலையாக வடிவமைக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கிறது. சிலையில் டிரம்ப் மட்டுமல்லாது அவரது உயிரை பாதுகாக்க முயன்ற மூன்று ரகசிய சேவை அதிகாரிகளும் இருக்கின்றனர். சிலை மட்டுமல்ல, அதே தாக்குதல் நிகழ்வை சித்தரிக்கும் ஒரு ஓவியமும் வெள்ளை மாளிகையில் வைக்கப்பட்டுள்ளது. ஓவியத்தில், டிரம்பின் முகத்தில் இரத்தத் துளிகள், பின்னணியில் அமெரிக்க கொடி உள்ளது.
நம்மூரில்தான் சிலை அரசியல் அதிகம். முக்கிய நகரங்களில் தெருக்களை இணைக்கும் ஜங்ஷனில் ஒரு சிலையாவது இருக்கும். ஆனால் பொது இடங்களில் சிலைகளை நிறுவ இப்போது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்காவில் தற்போது சிலை அரசியல் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இன்று ஓவல் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கும் சிலை நாளை, பொதுவெளியில் முக்கிய இடத்தில் வைக்கப்படலாம் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
துப்பாக்கிச்சூடு-தேர்தல்வெற்றி-சிலை.. இதைபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே? உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் சொல்லுங்கள்.












Click it and Unblock the Notifications