மனித உரிமைகள் மீறல்.. சீனாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம்.. வாக்கெடுப்பில் பங்கேற்காத இந்தியா
வாஷிங்டன்: உய்குர் இன முஸ்லீம் மக்களுக்கு எதிராக மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சீனாவுக்கு எதிராக ஐநாவில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தில் பங்கேற்காமல் இந்தியா புறக்கணிப்பு செய்துள்ளது.
சீனாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது ஜின் ஜியாங் மாகாணம்.
இயற்கை வளம் நிறைந்த இந்த மாகாணத்தில் 20 ஆம் நூற்றாண்டில் சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்ட ஜின் ஜியாங் மாகாணத்தை 1949 ஆம் ஆண்டு முதல் சீனா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

மக்களின் விருப்பத்தை மீறி
இந்த மாகாணத்தில் உய்குர் இனத்தை சேர்ந்த முஸ்லீம்கள் சுமார் 1.2 கோடி பேர் வசிக்கின்றனர். இவர்களுக்கு எதிராக சீனா கடும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மறு கல்வி முகாம்கள் என்ற பெயரில் அங்குள்ள மக்களின் விருப்பத்தை மீறி சட்டவிரோதமாக ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டவர்களை தடுப்புக்காவலில் வைத்திருப்பதாக சீனா மீது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

மனித உரிமை மீறல்களில் சீனா
சீன ராணுவத்தை எதிர்த்து உய்குர் இன மக்கள் போராட்டத்தை முன்னெடுப்பதால் இந்த அடக்குமுறைகள் கையாளப்படுவதாக சொல்லப்படுகிறது. இதுபோக, உய்குர் இன மக்கள் பெரும்பான்மையாக இருப்பதை குறைக்கும் வகையில், ஹன் இன மக்களை அதிக அளவில் ஜின் ஜியாங் மாகாணத்தில் குடியமர்த்துவதாக கூறப்படுகிறது. இப்படி தொடர்ந்து மனித உரிமை மீறல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சீனா மறுப்பு
இதுபோக கடந்த மாதம் ஐநா மனித உரிமை ஆணையம் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பரபரப்பு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தது. அதில், மறுகல்வி முகாம்கள் என்ற பெயரில் உய்குர் முஸ்லீம்கள் சித்ரவதை செய்யப்படுவதாகவும் உடல் உறுப்புகள் திருடப்படுகிறது, இளம் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்று பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தது. ஆனால், இதை சீனா திட்டவட்டமாக நிராகரித்து விட்டது.

விவாதம் நடத்தக்கோரும் தீர்மானம்
இந்த நிலையில், ஜின் ஜியாங் மாகாணத்தில் உள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐநா மனித உரிமை கவுன்சிலில் வரைவு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஜின் ஜியாங் மாகாணத்தில் காணப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விவாதம் நடத்தக்கோரும் இந்த தீர்மானத்தை கனடா, டென்மார்க், பின்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே, ஸ்வீடன், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அடங்கிய கூட்டமைப்பு கொண்டு வந்தது.

இந்தியா புறக்கணிப்பு
47 உறுப்பினர்களை கொண்ட இந்த கவுன்சிலில், தீர்மானத்திற்கு ஆதரவாக 17 உறுப்பினர்களூம் எதிர்ப்பு தெரிவித்து 19 நாடுகளும் வாக்களித்தன. இதனால், தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. இந்தியா, பிரேசில், மெக்சிகோ, உக்ரைன் உள்ளிட்ட 11 நாடுகள் தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் நிராகரித்தன.