கண்கள் சிவந்த டிரம்ப்.. அமெரிக்க ராணுவ தளபதி அதிரடியாக நீக்கம்! ஈரான் போரில் தடுமாறுவது தான் காரணம்?
வாஷிங்டன்: ஈரான் உடனான போரை வெற்றிகரமாக முடிக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. இதனால் டிரம்ப் கடும் கோபத்தில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் பதவியிலிருந்து விலகி உடனடியாக ஓய்வுபெற வேண்டும் என டிரம்ப் தரப்பு பிரஷர் போட்டு அவரை ஓய்வு பெற வைத்துள்ளது.
வளைகுடாவில் ஈரான் மீது அமெரிக்கா கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில் தாக்குதல்களை ஆரம்பித்தது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது தாக்குதல்களை நடத்தி வருகிறது. முதலில் இந்த மோதல் மிக விரைவிலேயே முடிவுக்கு வந்துவிடும் எனப் பலரும் நினைத்தனர். ஆனால், போர் நீண்டு கொண்டே போகிறது.

டிரம்ப் கோபம்
என்ன தான் ஈரான் ராணுவத்தை அழித்துவிட்டோம்.. அமெரிக்கா வெல்லப் போகிறது என டிரம்ப் மீண்டும் மீண்டும் சொன்னாலும் கூட ஈரானை பலத்தை முழுமையாக முடக்க அமெரிக்காவால் முடியவில்லை என்பதே உண்மை. இதன் காரணமாகவே ஈரான் தொடர்ச்சியாகத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் டிரம்ப் கடும் கோபத்தில் இருக்கிறாராம்.
அறிவுறுத்தல்
இதற்கிடையே அமெரிக்க ராணுவத் தளபதி ஜெனரல் ரேண்டி ஜார்ஜ் பதவியிலிருந்து விலகி உடனடியாக ஓய்வு பெறப் பாதுகாப்பு அமைச்சர் பீட் ஹெக்ஸெத் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் சூழலுக்கு மத்தியில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஜார்ஜுக்குப் பதிலாக, ராணுவத்தின் துணைத் தளபதியாக இருக்கும் ஜெனரல் கிறிஸ்டோபர் லாநெவ் அமெரிக்க ராணுவத்தின் புதிய தளபதியாகப் பொறுப்பேற்பார்.
என்ன காரணம்
இந்த அதிரடி உத்தரவுக்கான காரணத்தை பென்டகன் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இருப்பினும், அதிபர் டிரம்ப்பின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப அமெரிக்க ராணுவத்தைச் செயல்படுத்தும் ஒருவரைத் தளபதியாகக் கொண்டு வரவே ரேண்ட் ஜார்ஜ் ஓய்வு பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று வியாழக்கிழமையே ஹெக்ஸெத் ஜார்ஜை தொடர்புகொண்டு உடனடியாக ஓய்வு பெற கோரிக்கை வலியுறுத்தப்பட்டதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரிடமும் பென்டகன் தரப்பில் காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லையாம்.
அமெரிக்க ராணுவத்தின் 41வது தளபதி என்ற பதவியில் இருந்து ஜார்ஜ் உடனடியாக ஓய்வு பெறுவார் என்பதை பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஷான் பார்னெல் உறுதிப்படுத்தினார்.
பரபரக்கும் பென்டகன்
ஜார்ஜின் நீக்கம், பென்டகன் தலைமையகத்தில் உள்ள குழப்பங்களை மேலும் அதிகரித்துள்ளது. கடந்த பிப்ரவரியில் தான் இதேபோல பல முக்கிய நபர்களை டிரம்ப் தூக்கினார். அப்போது கடற்படையின் உயர் அதிகாரி அட்மிரல் லிசா ஃபிரான்செட்டி மற்றும் விமானப்படையின் இரண்டாம் நிலை தலைவர் ஜெனரல் ஜிம் சில்ஃபே உள்ளிட்ட பல உயர் ராணுவத் தலைவர்கள் நீக்கப்பட்டனர். அப்போதைய கூட்டுப் படைகளின் தளபதி ஜெனரல் சார்லஸ் கியூ பிரவுனையும் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதவி நீக்கம் செய்தார். அப்போது ஜார்ஜ் தப்பியிருந்த நிலையில், இப்போது அவரையும் டிரம்ப் தூக்கிவிட்டார்.
அடுத்து என்ன!
இதற்கிடையே எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல், தேசிய உளவுத்துறை இயக்குநர் துல்சி கப்பார்ட், ராணுவ அமைச்சர் டேனியல் டிரிஸ்கோல் மற்றும் தொழிலாளர் அமைச்சர் லோரி சாவேஸ்-டெரிமர் ஆகியோரும் ட்ரம்ப் அரசில் இருந்து வெளியேறலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் செயல்பாடுகளில் டிரம்ப் கோபமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இருப்பினும், இவர்கள் விவகாரத்தில் டிரம்ப் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லையாம். அவர் என்ன முடிவை எடுக்கிறார் என்பதைப் பொறுத்தே இவர்கள் தங்கள் பதவிகளைத் தக்க வைப்பார்களா என்பது தெரிய வரும்.












Click it and Unblock the Notifications