அமெரிக்க ஜிம்மில் இந்தியருக்கு கத்திக்குத்து.. நொடிகளில் நடந்த விபரீதம்! தென்னிந்தியாவை சேர்ந்தவராம்
வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வந்த 24 வயது மாணவர் ஒருவர் மீது கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், இது குறித்து அமெரிக்கா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது.
படிப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அங்கு வசிக்கும் வெளிநாட்டவரில் இந்தியர்கள் கணிசமாக இருக்கவே செய்கிறார்கள்.

அதிலும் படிப்பிற்காக அமெரிக்காவுக்குச் செல்வோரின் எண்ணிக்கை சமீப காலமாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அப்படி அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் ஒருவர் மீது மோசமான தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
கத்தி குத்து: வருண் ராஜ் என்ற 24 வயது இந்திய மாணவர் ஜிம்மில் இருந்த போது ஒருவர் அவரை கத்தியால் சரமாரியாகக் குத்தியுள்ளார். அமெரிக்காவின் இந்தியானாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. வருண் ராஜ் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவரான இவரை ஜோர்டான் ஆண்ட்ரேட் என்பவர் கத்தியால் குத்தியுள்ளார்.
இது சம்பவம் குறித்து விவரம் அறிந்தவர்கள் கூறுகையில், "மூன்று நாட்களாக வருண் சிகிச்சை பெற்று வருகிறார். இன்னுமே கூட அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் தான் இருக்கிறது. அவருக்குக் கடுமையான நரம்பியல் குறைபாடு இருக்கிறது. இதனால் அவருக்கு நிரந்தரமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருக்கிறது. மேலும், பார்வை இழப்பு மற்றும் இடது பக்க உடல் பலவீனமாகப் போவது உள்ளிட்ட ஆபத்துகளும் இருக்கிறது" என்றார்.
தீவிர விசாரணை: இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தாக்குதல் நடத்திய ஜோர்டான் ஆண்ட்ரேட், 24, கைது செய்யப்பட்டார். அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அவர் ஏன் இதுபோன்ற மூர்க்கத்தனமான தாக்குதலில் ஈடுபட்டார் என்று தெரியவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்தச் சம்பவத்திற்கு அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. வருண் முழுமையாகக் குணமடைய வேண்டும் என்றும் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
யார் இந்த மாணவர்: இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை கூறுகையில், "இந்தியப் பட்டதாரி மாணவர் வருண் ராஜ் மீதான கொடூரமான தாக்குதல் செய்திகளால் நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். அவர் விரைவில் குணமடைய வேண்டும். இந்த வழக்கு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
வருண் ராஜ் தெலுங்கானாவைச் சேர்ந்தவர் ஆவர். வருண் ராஜ் அமெரிக்காவில் எம்எஸ் படித்து வந்தார். கடந்த 2022 ஆகஸ்ட் மாதம் முதல் வருண் ராஜ் அமெரிக்காவில் படித்து வந்துள்ளார். அடுத்த ஆண்டு தனது படிப்பை முடித்த பிறகு, இந்தியா திரும்ப இருந்தார். அதற்குள் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.
வருண் ராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது பெற்றோர் விரைவில் அமெரிக்காவுக்குச் செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக விசா உள்ளிட்ட நடவடிக்கையில் அவர்கள் இறங்கியுள்ளனர். அமெரிக்காவில் இந்தியர் மீது நடத்தப்பட்ட இந்த மோசமான தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications