"டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை" - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்து உள்ளது.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றது முதல் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அவர் வர்த்தகப் போரில் இறங்கி இருக்கிறார். இதுவரை இல்லாத அளவுக்கு பல்வேறு நாடுகளுக்கு அதிக வரிகளை விதித்து உள்ளார் டிரம்ப். குறிப்பாக இந்திய பொருட்கள் மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

60க்கும் மேற்பட்ட நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான வரிகளை விதித்துள்ளார். ஜூலை 31 அன்று 60க்கும் மேற்பட்ட நாடுகள் மீது புதிய வரிகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார் டிரம்ப். அமெரிக்கா ஆரம்பத்தில் இந்தியா மீது 25 சதவீத வரிகளை விதித்தது. பின்னர் அதை 50 சதவீதமாக உயர்த்தியது. ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதன் மூலம் உக்ரைன் போரை இந்தியா தூண்டுவதாக குறிப்பிட்டு அதிக வரி விதித்தார் டிரம்ப்.
இந்நிலையில், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம், அவசரகால அதிகாரங்களின் கீழ்
அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று தீர்ப்பளித்து உள்ளது. டிரம்ப் வரி விதிப்புகளை நீக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட தேசிய அவசரநிலைக்கு பதிலளிக்கும் விதமாக பல நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிபருக்கு சட்டம் குறிப்பிடத்தக்க அதிகாரத்தை வழங்குகிறது. ஆனால் இந்த நடவடிக்கைகளில் எதுவும் வெளிப்படையாக வரிகள் விதிக்கும் அதிகாரத்தை உள்ளடக்கவில்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறியதாகவும் நீதிமன்றத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு, வரிகளை விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு அல்ல, காங்கிரஸ் சபைக்குத்தான் வழங்குகிறது. இது காங்கிரஸ் சபைக்கு வழங்கப்பட்ட ஒரு முக்கிய அதிகாரம் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தனது இந்த தீர்ப்பை அக்டோபர் 14 ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது. டிரம்ப் நிர்வாகம் உச்ச நீதிமன்றத்தில் மறுபரிசீலனை கோருவதற்கு அவகாசம் அளித்து உள்ளது.












Click it and Unblock the Notifications