அமெரிக்க தகவல் தொழில்நுட்ப துறையில் 'எமர்ஜென்சி'.. ட்ரம்ப் அதிரடி.. சீனாவுக்கு குறி?
வாஷிங்டன்: அமெரிக்க தொழில்நுட்ப துறையில் அதிபர் ட்ரம்ப் அவரச நிலையை பிரகடனப்படுத்தி உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பொருளாதாத்துறையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இரு நாடுகளும் போட்டி போட்டுக்கொண்டு இறக்குமதி வரியை உயர்த்தி வருகின்றன.
இதற்கான பதற்றமே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார்.

ஹுவாய் நிறுவனம்
சீனாவை சேர்ந்த பன்னாட்டு தொலைதொடர்பு நிறுவனமான ஹுவாய், ஈரான் மீது தாங்கள் விதித்த தடைகளை மீறி அந்நாட்டுடன் வர்த்தகம் வைத்ததோடு, மறைமுகமாக நிதியுதவி அளித்து வருவதாகவும் அமெரிக்கா குற்றம் சாட்டியது.

சந்தேகம்
இந்த விவகாரம் தொடர்பாக ஹுவாய் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி மெங் வாங்சோ கடந்த ஆண்டு கனடாவில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் ஹூவாய் நிறுவனம் தயாரிக்கும் மென்பொருட்களை பயன்படுத்தி, சீனா பிறநாடுகளில் உளவு பார்த்து வருவதாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சந்தேகம் எழுப்பி வந்தன.

எமர்ஜென்சி பிரகடனம்
அத்துடன் ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி செல்போன் ‘நெட்வொர்க்' சேவை ஆராய்ச்சிக்கும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில், அமெரிக்காவின் தகவல் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட அறிவுசார் விவகாரங்கள் திருடப்படுவதையும், உளவு பார்க்கப்படுவதையும் தடுக்கும் வகையில், தகவல் தொழில்நுட்ப துறையில் அவசர நிலையை பிரகடனம் செய்து, அதிபர் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சீனாவுக்கு குறி?
இதற்கான உத்தரவில் எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்தின் பெயரும் குறிப்பிடபடவில்லை. இருப்பினும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை குறிவைத்துத்தான் இந்த உத்தரவை அதிபர் ட்ரம்ப்பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

பாதிப்பு பாதுகாப்பு
தகவல் தொழில்நுட்பத்துறையில் அதிகரித்து வரும் பாதிப்பு மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நெருக்கடி நிலையால் வெளிநாட்டு தொலைதொடர்பு நிறுவனங்கள், அமெரிக்க நிறுவனங்களை பயன்படுத்திக்கொள்வது தடுக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications