அமெரிக்காவில் இருந்து பல நூறு இந்தியர்கள் வெளியேற்றம்.. அதிபர் தேர்தல் வேற நெருங்குதே.. என்ன காரணம்?
வாஷிங்டன்: தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த இந்தியர்களை அமெரிக்கா தனி விமானம் மூலம் நாடு கடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த நடவடிக்கை பேசுபொருள் ஆகியுள்ளது. அதேநேரம் இது இந்திய அரசின் ஒத்துழைப்பு உடனேயே செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் நல்லுறவே பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இதனால் வேலை மற்றும் படிப்பிற்காக இந்தியர்கள் அமெரிக்காவுக்குச் செல்வது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

குறிப்பாக ஐடி துறையில் வேலை செய்ய இந்தியர்கள் அதிகம் அமெரிக்கா செல்கிறார்கள். அமெரிக்க மக்கள்தொகையில் இப்போது கணிசமான அளவுக்கு இந்தியர்கள் உள்ளனர்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள்: இவர்கள் எல்லாம் முறையான விதிகளைப் பின்பற்றி அமெரிக்காவில் குடியேறியவர்கள். ஆனால், முறைகேடாக அமெரிக்காவில் குடியேறுவதும் அதிகரித்தே வருகிறது. கல்லூரியில் படிக்கச் செல்வதாகச் சொல்லி மாணவர் விசா வாங்கி அமெரிக்கா சென்று அங்குச் சிலர் வேலை செய்கிறார்கள். மறுபுறம் அண்டை நாடுகளில் இருந்து ஆபத்தான முறையில் சட்ட விரோதமாகவும் பலரும் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள்.
இதுபோல சட்டவிரோதமாக அமெரிக்காவுள் நுழைவோரைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு படியாக அங்குச் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த இந்தியர்கள் இப்போது தனி விமானம் மூலம் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்திய அரசின் ஒத்துழைப்பு உடனேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் கடந்த அக். 22ம் தேதி அவர்கள் இந்தியா அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடவடிக்கை தொடரும்: இது தொடர்பாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் தங்கும் இந்தியர்கள் நாடு கடத்தப்படுவார்கள். புலம்பெயர்ந்து அமெரிக்கா வருவோர் கடத்தல்காரர்களின் பொய்களை நம்பக கூடாது. அவர்கள் பொய்களில் விழக்கூடாது. அமெரிக்கா தனது சட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்தும். சட்டத்திற்குப் புறம்பாக நுழைவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அமெரிக்காவுக்குள் நுழைய சட்டப்பூர்வமான வழிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவோரைத் தடுக்க கடந்த ஜூன் மாதம் முதல் புதிய விதி அமலுக்கு வந்தது. அதன் பிறகு அமெரிக்காவின் தென்மேற்கு எல்லை வழியாகச் சட்டவிரோதமாக உள்ளே நுழைந்தோரின் எண்ணிக்கை 55 சதவீதம் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
1.60 லட்சம் பேர்: நடப்பு நிதியாண்டில் இதுவரை, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 145 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1.60 லட்சம் பேர் திருப்ப அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுபோல திரும்ப அனுப்பப்படும் போது சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு உரியத் தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக அமெரிக்காவில் நுழைவோரைத் தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கை தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் கொலம்பியா, ஈக்வடார், பெரு, எகிப்து, மொரிட்டானியா, செனகல், உஸ்பெகிஸ்தான், சீனா மற்றும் இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக இருப்பது கண்டறியப்பட்டு, அவர்கள் திரும்ப அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எச்சரிக்கை: அமெரிக்காவில் வேலைவாய்ப்பு, ஊதியம் அதிகம் கிடைக்கும் என்பதால் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்கா செல்ல விரும்புவார்கள். அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில மோசடி கும்பல் பணத்தை வாங்கிவிட்டு, இதுபோல தவறான வழிகளில் நாட்டில் நுழைய உதவுவார்கள். அவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று அந்நாட்டு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications