விவசாய சட்டங்கள் நல்லதுதான்... ஆனால் இணைய சேவை முடக்கப்பட்டது தப்பு... அமெரிக்கா கருத்து
வாஷிங்டன்: டெல்லியில் விவசாயிகள் போராடும் இடங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டதற்குக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது.
மத்திய அரசின் விவசாயிகள் போராட்டம் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாகக் குடியரசு தின டிராக்டர் பேரணிக்கு பின், தலைநகரில் விவசாயிகள் போராடும் இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் போராட்டம் நடைபெறும் இடங்களில் இணையச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், காசிப்பூர் உள்ளிட்ட டெல்லி எல்லைகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தடுப்புகள், முள்வேலிகள் என டெல்லி போலீஸ் பாதுகாப்பைப் பல மடங்கு அதிகரித்துள்ளனர்.

அமெரிக்கா கவலை
இந்நிலையில், விவசாய போராட்டங்களில் இணையச் சேவை முடக்கப்பட்டதற்குக் கவலை தெரிவித்துள்ள அமெரிக்க அரசு, பேச்சுவார்த்தை மூலமே பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது குறித்து அமெரிக்க உள் துறை செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், "இணையச் சேவை உள்ளிட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ளும் சேவைகளை தடையின்றி வழங்குவது கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படை. இதுதான் ஜனநாயகத்தின் தனிச்சிறப்பாகும்" என்றார்.

நடவடிக்கைக்கு வரவேற்பு
மேலும், அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களே ஒவ்வொரு ஜனநாயகத்தின் தனிச் சிறப்பாகும் என்றும் இந்தியாவின் உச்ச நீதிமன்றமே இதைத்தான் குறிப்பிடுவதாகவும் அவர் தெரிவித்தார். அதேநேரம் இந்தியாவின் சந்தைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் அதிக தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமெரிக்கா வரவேற்பதாகவும் அவர் கூறினார்.

பிரபலங்கள் கருத்து
முன்னதாக, ஹாலிவுட் நடிகை ரிஹான்னா, மியா கலிஃபா, பருவ நிலை போராளி கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இதுபோன்ற விஷயங்களில் கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மையாக என்ன நடந்தது என்பதை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெளியுறவு துறை
மேலும், பரபரப்பான சமூக வலைத்தளங்களில் இதுபோன்ற பிரச்னைகள் குறித்து பிரபலங்கள் கூறும் கருத்துகள் துல்லியமானதாகவும் பொறுப்பானதாகவும் கூறியிருந்தது. ஏற்கனவே இது இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்றும் இதில் வெளிநாட்டவர்கள் கருத்து தெரிவிக்க தேவையில்லை என்றும் சச்சின் ட்வீட் செய்திருந்தார். அதேபோல விராட்கோலி, நடிகர் அக்ஷய்குமார், அஜய் தேவ்கான் உள்ளிட்டோரும் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது












Click it and Unblock the Notifications