53 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் தொலைத்த பர்ஸ்... மீண்டும் உரிய நபரிடம் ஒப்படைப்பு
வாஷிங்டன்: 53 ஆண்டுகளுக்கு முன், அண்டார்டிக்காவில் பால் கிரிஷாம் என்ற கடற்படை வீரர் தொலைத்த பர்ஸ் மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான் டியாகோ பகுதியைச் சேர்ந்தவர் பால் கிரிஷாம். 91 வயதாகும் இவரது வீட்டிற்கு, கடந்த சில நாட்களுக்கு முன், சிலர் வந்துள்ளனர். பால் கிரிஷாம் 53 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் தொலைத்த பர்ஸை அவர்கள் திரும்பி அளித்துள்ளனர்.
53 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் தான் தொலைத்த பர்ஸ் மீண்டும் கிடைத்துள்ளதைக் கண்டு அவர் நெகிழ்ந்து போய்விட்டார்.1948ஆம் ஆண்டு முதல் பால் கிரிஷாம் அமெரிக்காவின் கடற்படையில் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அப்போது 1968ஆம் ஆண்டு ஆண்டு ஆபரேஷன் டீப் ஃப்ரீஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இவர் அண்டார்டிகா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளார். அங்கு இருக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கு உதவ இவர் அண்டார்டிக்காவுக்கு அனுப்பப்பட்டார். அப்போதுதான் இவர் தனது பர்ஸை தொலைத்துவிட்டார்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்காவில் இருந்து அந்தக் கட்டடத்தை இடிக்க அமெரிக்க அரசு முடிவு செய்தது. கடந்த 2014ஆம் ஆண்டு கட்டடத்தை இடிக்கும் பணிகளை மேற்கொண்டிருந்தபோது தான் லாக்கரின் பின்புறத்திலிருந்து இந்த பர்ஸை கண்டுபிடித்துள்ளனர்.
இதையடுத்து பர்ஸை அதன் சொந்தக்காரரிடம் திருப்பி அளிக்க வேண்டும் என முடிவு செய்த ஸ்டீபன் டெகாடோவும் அவரது மகளும் சில ஆண்டுகளாகவே பால் கிரிஷாம் தேடியுள்ளனர். சில வாரங்களுக்கு முன்தான் பால் கிரிஷாமின் முகவரி அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
அதன் பின்னரே, பால் கிரிஷாம் வீட்டிற்குச் சென்று 53 ஆண்டுகளுக்கு முன் அவர் தொலைத்த பர்ஸை ஸ்டீபன் டெகாடோ திருப்பி அளித்துள்ளார். 53 ஆண்டுகளுக்கு முன் தான் தொலைத்த பர்ஸ், அதுவும் அண்டார்டிக்காவில் தொலைத்த பர்ஸ் மீண்டும் தனக்குக் கிடைத்ததைக் கண்டு பால் கிரிஷாம் நெகிழ்ச்சியடைந்துள்ளார்.