இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஏற்க மறுத்த ஈரான்.. அடுத்து என்ன நடக்கும்? 3 விஷயங்களுக்கு சான்ஸ்
வாஷிங்டன்: ஈரான் ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால் அந்த நாடே அழிய போகிறது, இப்படி ஒன்று நடக்க நான் விரும்பவில்லை. இருந்த போதிலும் அதுவே நடக்கும் என்று டிரம்ப் பகிரங்கமாக ஈரானை எச்சரித்து இருக்கிறார். ஈரான் மீது என்ன மாதிரியான தாக்குதலை டிரம்ப் தொடுக்க போகிறார் என்பது மிகப் பெரும் விவாதமாக சர்வதேச அளவில் எழுந்துள்ள நிலையில், நாளை ஈரான் விவகாரத்தில் நடக்க கூடிய சாத்தியமான மூன்று விஷயங்கள் என்ன என்பதை இங்கே விரிவாக பார்க்கலாம்.
ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தியது. தற்போது வரை போர் முடிவுக்கு வரவில்லை. ஈரான் போர் நிறுத்த திட்டத்தை ஏற்று உடனடியாக ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் அந்த நாட்டை கற்காலத்திற்கே அனுப்புவோம் என்று எச்சரித்த டிரம்ப், இறுதி கெடு ஒன்றையும் விதித்துள்ளார். டிரம்ப் விதித்த இந்த கெடு இந்திய நேரப்படி நாளை அதிகாலையுடன் முடிவுக்கு வருகிறது.

உச்சம் தொட்ட மோதல்
ஈரான் அதுவரை எங்கள் பேச்சை கேக்காவிட்டல் அந்த நாட்டை ஒரே இரவில் அழித்துவிட போவதாக டிரம்ப் எச்சரித்து வருகிறார். ஈரானில் சிவில் நாகரிகமே இல்லாத நிலை ஏற்படும் என்றும் அந்த நாட்டின் பலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் என்றும் டிரம்ப் எச்சரித்து வருகிறார். டிரம்பின் இந்த மிரட்டலையையடுத்து அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ரத்து செய்வதாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானை காக்க நாட்டில் 1.4 கோடி பேர் உயிர் தியாகம் செய்ய இருப்பதாகவும் ஈரான் அதிபர் கூறினார். ஈரான் - அமெரிக்கா மோதல் உச்சத்தை தொட்ட நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற நிலையே தற்போதைக்கு உள்ளது. அமெரிக்கா - ஈரான் விவகாரத்தில் மூன்று விஷயங்கள் நடக்க வாய்ப்பு உள்ளன. அது பற்றிய விவரம் வருமாறு:-
முதல் விஷயம்:
அமெரிக்கா விதித்த இறுதி கெடு வரை ஈரான் எந்த ஒரு ஒப்பந்தத்தையும் ஏற்றுக்கொள்ளாவிட்டால், அந்த நாட்டின் மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா தொடுக்கலாம். ஈரானின் உள்கட்டமைப்புகள் தவிடுபொடியாக்கப்படலாம். அந்த நாட்டின் பாலங்கள், மின் அமைப்புகள் மீது அமெரிக்கா உக்கிரமாக தாக்கலாம். எண்ணெய் கிணறுகள், முக்கிய ஏற்றுமதி தளங்கள், கார்க் தீவுகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடும்.
இரண்டாவது விஷயம்:
இரு தரப்புக்கும் இடையே மோதல் முற்றி வந்தாலும் பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் சம்மதம் தெரிவித்தால் வாஷிங்டன் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தைக் கடைப்பிடிப்பதையும் கோருவதற்கு வாய்ப்புள்ளது என்று 'வால் ஸ்ட்ரீட் ஜர்னல்' செய்தி வெளியிட்டுள்ளது. எனினும், ஈரான் வெளிப்படையாக பேச்சுவார்த்தை நடக்கவில்லை என்று மறுத்து வருகிறது.
3-வது விஷயம்:
இந்த தாக்குதல் இன்று ஒரு நாள் இரவு தாக்குதலோடு நிற்காமல் இரு தரப்புக்கும் இடையேயான மோதல் பிராந்திய மோதலாக அதிகரிக்கும். ஈரான் அமெரிக்காவின் நட்பு நாடுகளை குறி வைத்து மீண்டும் தாக்க தொடங்கும். இதனால் பொருளாதார தடைகள் எண்ணெய் நெருக்கடி, ஈரானின் எண்ணெய் வளங்களை கைப்பற்றும் முயற்சி என இந்த மோதல் நீண்ட கால ஒன்றாக நீடிக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications