இடியை இறக்க போகும் டிரம்ப்.. வெள்ளை மாளிகையே அதிர போகுது.. உலக நாடுகளுக்கு ஒரு வாரம் தான் டைம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் அடுத்த வாரம் மிக முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்ட இருக்கிறார். புவிசார் அரசியல் நிலைமை இப்போது தான் சீராகி வருகிறது. இந்த நேரத்தில் டிரம்ப் மீண்டும் புயலைக் கிளப்பும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிடுவார் எனச் சொல்லப்படுகிறது. இது சர்வதேச அளவில் வணிகத்தைப் பாதிக்கும் என வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள்.
டொனால்ட் டிரம்ப் இந்தாண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். தொடக்கத்தில் அவர் தொடர்ச்சியாகப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் முக்கியமானது ரெசிப்ரோக்கல் வரி. ஏப்ரல் தொடக்கத்தில் இது குறித்து டிரம்ப் அறிவித்திருந்தார்.

டிரம்ப்
அதாவது அமெரிக்கா மீது மற்ற நாடுகள் அளவுக்கு அதிகமாக வரி செலுத்துவதாகக் குற்றஞ்சாட்டிய டிரம்ப், அதற்குப் பதிலடியாக அமெரிக்காவும் இணையான வரியை விதிக்கும் என்று கூறி இந்த ரெசிப்ரோக்கல் வரியை அறிமுகம் செய்திருந்தார். அமெரிக்காவில் மீண்டும் தொழிற்சாலைகளைக் கொண்டு வரவே இதைச் செய்வதாக டிரம்ப் கூறியிருந்தார்.
ரெசிப்ரோக்கல் வரி
அதன்படி முதலில் எல்லா நாடுகளுக்கும் 10 சதவிகித அடிப்படை வரி விதிக்கப்பட்டது.. இதுபோக கூடுதலாக ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். கம்போடியா மீது அதிகபட்சமாக 49% வரி விதிக்கப்பட்டது.. அதேபோல வியட்நாம் மீது 46%, இலங்கை மீது 44% வரி விதிக்கப்பட்டது.. மேலும், இந்தியா மீது 26% வரியை டிரம்ப் அறிவித்திருந்தார். இது உலகெங்கும் வணிகப் பதற்றத்தை உருவாக்கியது.
இதையடுத்து அமெரிக்காவின் பெடரல் ரிசர்வின் கடன் பத்திரங்களின் வட்டி திடீரென அதிகரிக்க ஆரம்பித்து. பெடரல் ரிசர்வின் கடன் பத்திரங்களின் வட்டி அதிகம் விற்கப்படுவதே இதற்குக் காரணம் என்றும் சீனாவே இதைப் பின்னணியில் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தான் சில நாட்களில் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்த டிரம்ப், எல்லா வரிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். 10% வரை மட்டும் இருக்கும் என அறிவித்தார்.
உலக நாடுகள்
இந்த 90 நாட்களுக்குள் உலக நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும் என்றார். ஆனால், இப்போது வரை பிரிட்டன் மட்டுமே அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தினாலும் கூட இதுவரை எதுவும் இறுதியாகவில்லை.
டிரம்ப் அறிவித்த அந்த 90 நாள் காலக்கெடு அடுத்த வாரம், அதாவது ஜூலை 9ம் தேதியுடன் நிறைவடைகிறது. டிரம்ப் மீண்டும் சில வாரங்கள் வரிகளைத் தள்ளிப்போடலாம் என முதலில் கூறப்பட்டது. இருப்பினும், அதற்கான வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது ரெசிப்ரோக்கல் வரியைக் கொண்டு வரவே போகிறோம் என்பது போலவே பேசியிருந்தார் டிரம்ப்.
வெள்ளை மாளிகை
அதேநேரம் தடாலடியாக மீண்டும் வரிகளை அறிவித்தால் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் நாடுகளுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். இதனால் எந்த நாடுகள் எல்லாம் வர்த்தகப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதோ, அவர்களுக்கு எல்லாம் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படும் என்கிறார் வெள்ளை மாளிகையின் தலைமை பொருளாதார நிபுணர் ஸ்டீபன் மிரான்.! அதாவது பேச்சுவார்த்தையில் ஈடுபடும் நாடுகளுக்குக் கூடுதல் வரி வராது. அதேநேரம் பேச்சுவார்த்தை நடத்தாத நாடுகளுக்கு மட்டுமே கூடுதல் வரி விதிக்கப்படும்.
இந்தியா அமெரிக்கா ஒப்பந்தம்
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த சில வாரங்களாகவே அமெரிக்கா உடன் தீவிரப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா இறுதி செய்யும் என்றே தெரிகிறது. அதேநேரம் இது முழுமையான வர்த்தக ஒப்பந்தத்தமாக இருக்காது என்றும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தமாகவே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications