டிரம்ப் vs கமலா.. அமெரிக்காவை அலறவிடும் 5 விஷயங்கள்.. அதிபர் தேர்தல் வெற்றியை தீர்மானிப்பதே இவை தான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கும் அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் மற்றும் டிரம்ப் களத்தில் உள்ளனர். தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில் அமெரிக்காவில் இப்போது இருக்கும் ஐந்து மிக முக்கியமான பிரச்சினை குறித்துப் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், அங்கு இந்த முறை பேசுபொருளாக மாறியிருக்கும் ஐந்து முக்கியமான பிரச்சினைகள் குறித்து நாம் பார்க்கலாம்.

பொருளாதாரம்: முதலில் பொருளாதாரம். டிரம்பை பொறுத்தவரை அவர் எப்போதும் தொழிலதிபர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டவர். கடந்த 2017 முதல் 2021 வரை அவர் அதிபராக இருந்த போது டிரம்ப் தொழிலதிபர்களுக்கும் பெரும் பணக்காரர்களுக்கும் அதிகம் வரியைக் குறைத்தார். அதேபோல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரியைக் குறைத்தார். இது மட்டுமின்றி அவர் க்ரிப்டோ கரன்சியை பெருமளவு ஆதரித்தார்.
மறுபுறம் கமலா ஹாரிஸ் மிடில் கிளாஸ் மக்களைக் கவரும் வகையிலான திட்டங்களை முன்வைத்து இருக்கிறார். அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யவே நடவடிக்கை எடுப்பேன் என அவர் வாக்குறுதி அளித்து வருகிறார். பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்கப்படும் அதேநேரம் முதல்முறை வீடு வாங்குவோருக்குச் சலுகை, சிறு குறு பிஸ்னஸ்மேன்களுக்கு உதவும் திட்டங்களை அவர் முன்மொழிந்து வருகிறார்.
புலம்பெயர்ந்தவர்கள்: அடுத்து முக்கியமான விஷயம் புலம் பெயர்ந்தவர்கள் விவகாரத்தில் இருவரது பார்வை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேறுவோரை மிகக் கடுமையாக எதிர்ப்பவர். தான் அதிபரானால் உரிய ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை மொத்தமாக வெளியேற்றுவேன் என்று சொல்லி வருகிறார். இவரது அதிபர் காலத்தில் தான் அமெரிக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் பணி நடந்தது நினைவுகூரத்தக்கது.
கமலா ஹாரிஸை பொறுத்தவரை அவர் இதில் சாப்ட்டான நிலைப்பாட்டைக் கொண்டவர். அவரும் சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்கிறார். அதேநேரம் ஒருவர் ஆவணங்கள் இல்லாமல் இருக்கிறார் என்பதற்காகவே அவர் குற்றவாளி இல்லை என்பது அவரது நிலைப்பாடு. சட்ட விரோதமாகக் குடியேறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இதற்கு தற்போதுள்ள பாலிசியில் மாற்றம் கொண்டு வரப்படும் என்பதும் இவரது நிலைப்பாடு.
கருக் கலைப்பிற்கான உரிமை: அமெரிக்காவில் பெண்களிடையே பெரிய பிரச்சினை இதுதான். கடந்த 2022ம் ஆண்டு கருக்கலைப்பு என்பது பெடரல் உரிமை இல்லை என்று அந்நாட்டு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது. இதனால் சில குடியரசு கட்சி அரசு உள்ள மாகாணங்களில் கருக் கலைப்பிற்கு மொத்தமாகவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கருக் கலைப்பிற்கான தடை என்பதைப் பெண்கள் தங்களின் உரிமை மீறப்பட்டதாகவே பார்க்கிறார்கள்.
டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் கருக்கலைப்பு தடை செய்யப்படலாம் எனச் சொல்லப்படுகிறது. டிரம்பும் இது தொடர்பான கேள்விகளுக்குத் தெளிவாகப் பதில் சொல்லாமல் தவிர்த்தே வருகிறார். மேலும், அவர் மீது ஏகப்பட்ட பாலியல் புகார்கள் நிலுவையில் உள்ளதும் ஒரு பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. மறுபுறம் கமலா ஹாரிஸ் நாடு தழுவிய அளவில் கருகலைப்பை பெண்களின் உரிமையாக நிலைநாட்டும் வகையில் சட்டம் இயற்றப்படும் எனச் சொல்லி இருக்கிறார்.
வெளிநாட்டு பாலிசி: அடுத்து வெளிநாட்டு பாலிசி.. அமெரிக்காவைப் பொறுத்தவரை உள்நாட்டில் கூட அதிபருக்கு லிமிடட் பவர் தான்.. ஆனால், சர்வதேச விவகாரத்தில் அதிபருக்கு உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சர்வதேச பிரச்சினைகளிலும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன என்பது உற்றுக் கவனிக்க வைப்பதாகவே இருக்கிறது.
இப்போது மத்திய கிழக்கில் பதற்றம், ரஷ்யா உக்ரைன் போர், சீனா- தைவான் இடையே மோதல் எனச் சுற்றிலும் பிரச்சினை இருப்பதால் இது ரொம்பவே முக்கியமானது. டிரம்பை பொறுத்தவரை தான் அதிபரானால் எல்லா போரும் மிக விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவேன் எனச் சொல்லி வருகிறார். அதேநேரம் உக்ரைனுக்கு தற்போதைய பைடன் அரசு பெரியளவில் நிதி தரும் நிலையில், அது வீண் நிதி என்றும் அதை நிறுத்துவிடுவேன் என்றும் டிரம்ப் சொல்கிறார். மறுபுறம் கமலா ஹாரிஸ் உக்ரைனுக்கான ஆதரவு தொடரும் என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
உலகின் மற்ற பகுதிகளைக் காட்டிலும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் குரல் வலிமையாக இருக்கிறது. ஏனென்றால் அங்கு அமெரிக்காவின் ராணுவ தளங்கள் பல உள்ளன. அங்கு இஸ்ரேலுக்கும் சுற்றிலுள்ள நாடுகளுக்கும் மோதல் போக்கு நிலவும் சூழலில், இரு தலைவர்களுமே இஸ்ரேல் ஆதரவு நிலைப்பாடு தொடரும் என்பதைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
விலைவாசி உயர்வு: அடுத்து விலைவாசி உயர்வு.. அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உயரத் தொடங்கிய விலைவாசி இன்னும் அமெரிக்காவில் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. இதனால் வேலைவாய்ப்புகளும் அங்குப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த 5 விஷயங்கள் தான் இப்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் மிக முக்கியமான பிரச்சினைகளாக உருவெடுத்துள்ளது.
அதிபர் தேர்தலில் தொடக்கத்தில் என்ன தான் கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருப்பது போல தெரிந்தாலும் தற்போது கடும் போட்டியே நிலவி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளிலும் கூட போட்டி மிக கடுமையாக இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அங்கு 6, 7 மாகாணங்களில் இழுபறி நிலவும் நிலையில், அங்கு யார் வெல்கிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி தோல்வி இருக்கும்.












Click it and Unblock the Notifications