"இடியாப்ப சிக்கல்!" பைடன் விலகலால் பெரிய குழப்பம்! அப்போ கமலா ஹாரிஸ் வேட்பாளர் இல்லையா? என்ன மேட்டர்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ரேஸில் இருந்து பைடன் அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவர் அடுத்த மாதம் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த நிலையில், கடைசி நேரத்தில் அவர் விலகி இருக்கிறார். அடுத்து அங்கு என்ன நடக்கும்.. அதிபர் வேட்பாளர் தேர்வு எப்படி நடக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவை ஒரு கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும் அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கலாம். ஆனால், அவர்களுக்குக் கட்சிக்குள் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள்.

இதற்காக அங்கே உள்கட்சி தேர்தலும் நடக்கும். உட்கட்சி தேர்தல் என்றால் நமது ஊரில் நடப்பது போல ஒருவர் மட்டும் போட்டியிட்டு பெயரளவுக்கு நடக்கும் தேர்தல் இல்லை. அங்கு நிஜமாகவே பலரும் போட்டியிடுவார்கள். அவர்களில் ஒருவரே அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள்.
50 மாகாணம்: இதற்காக அமெரிக்காவில் உள்ள அனைத்து 50 மாகாணங்களிலும் தேர்தல் நடக்கும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் சென்று பிரச்சாரமும் செய்வார்கள். ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட பலம் இருக்கும். குறிப்பிட்ட மாகாணத்தில் வெல்வோருக்கு அந்த மாகாணத்தின் ஆதரவு கிடைக்கும். அதாவது அதன் பிரதிநிதிகள் குறிப்பிட்ட நபருக்கு ஆதரவாகத் தேசிய மாநாட்டில் வாக்களிப்பார்கள். இதை delegates என்பார்கள். உதாரணமாக கலிபோர்னியாவில் ஜனநாயக கட்சியில் 496 வாக்குகள் உள்ளன. இவர்கள் பைடனுக்காக வாக்களிப்பார்கள்.
4000 பிரதிநிதிகள்: பைடனுக்கு எதிராக ஜனநாயக கட்சியில் யாரும் களமிறங்காத நிலையில், சுமார் 4000 பிரதிநிதிகள் பைடனுக்காக வாக்களிக்க தயாராக இருந்தனர். ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடு அடுத்த ஆகஸ்ட் 19-22 தேதிகளில் நடக்கும் நிலையில், அதில் தான் இந்த பிரதிநிதிகள் பைடனுக்காக வாக்களிக்க இருந்தனர். இந்த நேரத்தில் பைடன் விலகியுள்ளதால்.. அதிபரைத் தேர்வு செய்யத் தேசிய மாநாட்டில் நடக்கும் தேர்தலில் இனிமேல் இவர்கள் யாருக்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம். இதன் காரணமாகவே அங்கு அதிபர் ரேஸில் மீண்டும் போட்டி ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கமலா ஹாரிஸ் தரப்பு இந்த பிரதிநிதிகளைத் தொடர்பு கொண்டு பேச ஆரம்பித்துவிட்டனராம். பெரும்பான்மைக்குத் தேவையான வாக்குகளைத் திரட்டும் முயற்சியில் இப்போது கமலா ஹாரிஸ் இறங்கியுள்ளார்.
கமலா ஹாரிஸ்: அதேநேரம் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் யார் என்பதில் போட்டியும் ஏற்பட்டுள்ளது. கமலா ஹாரிஸ் முன்னிலையில் இருக்கிறார் என்றாலும் அனைவரது ஆதரவும் அவருக்கு இல்லை. ஏனென்றால் துணை அதிபராக அவர் நன்கு செயல்படத் தொடங்கினாலும் கடந்த பல மாதங்களாக அவரது ரேட்டிங் மிக மோசமாகவே இருந்துள்ளது. எனவே இப்போது கமலா ஹாரிஸை தாண்டி கவின் நியூசோம், மிச்சிகன் கவர்னர் கிரெட்சன் விட்மர், கென்டக்கி கவர்னர் ஆண்டி பெஷியர் மற்றும் இல்லினாய்ஸ் கவர்னர் ஜேபி பிரிட்ஸ்கர் ஆகியோர் அதிபர் ரேஸில் உள்ளனர்.
அமெரிக்கத் தேசிய மாநாட்டில் 3,933 பிரதிநிதிகள் மற்றும் 739 சூப்பர் டெலிகேட்டுகள் அதாவது மூத்த பிரதிநிதிகள் என்று 4,672 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களில் பெரும்பான்மை வாக்குகள் யாருக்குக் கிடைக்கிறதோ.. அவர்களே அதிபர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படுவார். எனவே, இங்குப் பெரும்பான்மையைப் பெறும் முயற்சியில் தான் கமலா ஹாரிஸ் இறங்கியுள்ளார்.
பெரும்பான்மை இல்லை என்றால்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, புதிய ரூல்ஸ் வகுக்கப்பட்டுத் தேர்தல் நடத்தப்படும். அதன் பிறகே அதிபராக ஒருவர் தேர்வாவார். இதில் பல சுற்றுகளுக்கு பிறகே ஒருவர் வேட்பாளராகத் தேர்வாவார். ஜனநாயக கட்சியில் கடைசியாக 1952இல் இதுபோல நடந்துள்ளது.
அதேபோல பைடன்- கமலா ஹாரிஸ் இணைந்து 91 மில்லியன் அதாவது ரூ.761 கோடி சேகரித்த நிலையில், அது என்ன ஆகும் என்பது குறித்து இப்போது வரை தெளிவான தகவல்கள் இல்லை. அதிபர் வேட்பாளர் யார் என்பது இறுதியான உடன் இதில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications