"ஹார்முஸை திறக்கவில்லை என்றால்.. பேரழிவு நிச்சயம்!" ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
வாஷிங்டன்: வளைகுடாவில் நடக்கும் போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. ஒரு பக்கம் பேச்சுவார்த்தை நடந்தாலும் மறுபுறம் மிரட்டல்கள் மாறி மாறி வந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கிடையே ஈரானுக்கு இறுதி எச்சரிக்கையை விடுக்கும் வகையில், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்கவில்லை என்றால் மிக மோசமான பேரழிவைச் சந்திக்க நேரிடும் எனக் கூறியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 5வது வாரமாகத் தொடர்கிறது. இந்த போரால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் தொடர்கிறது. மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதால் இதனால் சர்வதேச அளவிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. அதாவது வளைகுடா போரின் வலிகளை ஒட்டுமொத்த உலகமும் எதிர்கொள்கிறது.

டிரம்ப்
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வரப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டாலும் கூட அதில் பெரிய பலன் கிடைப்பதில்லை. இதற்கிடையே வளைகுடா போர் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில பகீர் தகவல்களைக் கூறியுள்ளார். ஈரானில் அமெரிக்கா நடத்தி வரும் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவர, தீவிரப் பேச்சுவார்த்தைகள் நடப்பதாக டிரம்ப் தெரிவித்தார். விரைவில் ஓர் ஒப்பந்தம் எட்டப்படும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதேநேரம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை அல்லது ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்படவில்லை என்றால் ஈரான் மீது மீண்டும் அமெரிக்கா மிகப் பெரிய ஒரு தாக்குதலை நடத்தும் என அவர் எச்சரித்தார்.
மிரட்டல்
இது தொடர்பாக ட்ரூத் சோஷியல் பக்கத்தில் பதிவிட்ட டிரம்ப், "ஈரானில் தங்கள் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வர, ஒரு புதிய, நியாயமான பேச்சுவார்த்தையில் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதில் இப்போது பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், விரைவில் ஒரு ஒப்பந்தம் எட்டப்படவில்லை என்றால், அல்லது ஹார்முஸ் ஜலசந்தி உடனடியாக சரக்கு கப்பல்களுக்குத் திறக்கப்படவில்லை என்றால்.. ஈரானின் அனைத்து மின் உற்பத்தி நிலையங்கள், எண்ணெய் கிணறுகள், கார்க் தீவு மற்றும் கடல் நீர் சுத்திகரிப்பு ஆலைகள் ஆகியவற்றை அமெரிக்கா முழுமையாகத் தகர்க்கும்.
இதுவரை நாங்கள் இதன் மீது ஒரு தாக்குதல் கூட நடத்தாமல் இருந்து வருகிறோம். ஈரானின் 47 ஆண்டுக்கால பயங்கரவாத சகாப்தத்தில் எங்கள் பல வீரர்களைக் கொன்றதற்கான பதிலடியாகவே இந்த நடவடிக்கைகள் இருக்கும்" என்று டிரம்ப் பதிவிட்டுள்ளார். மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், டிரம்பின் இந்த போஸ்ட் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
குழப்பம் டிரம்ப்
முன்னதாக கடந்த வாரம் தான் ஈரான் மீதான மின் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் என டிரம்ப் முதலில் மிரட்டினார். பிறகு அவரே திடீரென அடுத்த 10 நாட்களுக்குத் தாக்குதலை நிறுத்தி வைப்பதாகவும் பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக ஏப்ரல் 6ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு எரிசக்தி உட்கட்டமைப்பின் மீதான தாக்குதல்களை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஈரான்
ஹார்முஸ் ஜலசந்தியில் வழக்கமான சரக்கு கப்பல் போக்குவரத்தை ஈரான் அனுமதிக்க வேண்டும் என அமெரிக்கா பிரஷர் போடுகிறது. ஆனால், இந்தியா உட்பட 5 நாடுகளின் சரக்கு கப்பல்களை மட்டுமே ஈரான் அனுமதிக்கிறது. இது போர் காலம் என்பதால் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் நட்பு நாடுகளின் சரக்கு கப்பல்களை ஹார்முஸ் ஜலசந்தியில் அனுமதிக்க முடியாது என ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications