ரஷ்யாவை மொத்தமாக முடக்கும் டிரம்ப்! இரவோடு இரவாக அமெரிக்கா முக்கிய அறிவிப்பு.. சிக்கலில் புதின்?
வாஷிங்டன்: உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ச்சியாகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கிடையே இரண்டு மிகப் பெரிய ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை விதித்து அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான மோதல் முடிவுக்கு வராமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த மோதலால் ரஷ்யா, உக்ரைன் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பொருளாதாரப் பாதிப்புகள் எதிரொலிக்கிறது. இதன் காரணமாகவே போரை முடிவுக்குக் கொண்டு வர உலக நாடுகளும் கூட நடவடிக்கை எடுத்து வருகிறது. குறிப்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் கவனம் செலுத்தி வருகிறார்.

பொருளாதாரத் தடைகள்
இதற்கிடையே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷ்யா மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ரஷ்யாவின் மிகப் பெரிய எண்ணெய் நிறுவனங்களான ரோஸ்நெஃப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மீது இந்தத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் டிரம்ப்- ரஷ்ய அதிபர் புதின் இடையே நடைபெற இருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாகத் தகவல் வெளியான மறுநாளே இந்தத் தடை அறிவிப்பு வெளியானது. அமெரிக்க டிரஷரி துறையின் வெளிநாட்டுச் சொத்துகள் கட்டுப்பாட்டு அலுவலகம் (OFAC) இந்தத் தடைகளை அறிவித்தது. இந்தத் தடைகள் குறிப்பிட்ட அந்த இரு ரஷ்ய நிறுவனங்களை மட்டுமின்றி அவற்றின் பல துணை நிறுவனங்களையும் குறிவைக்கின்றன.
டிரம்ப் சொல்வது என்ன
இந்தத் தடை தொடர்பாக அதிபர் டிரம்ப் கூறுகையில், "இவை மிகப் பெரிய தடைகள். ரஷ்யாவின் இரு பெரிய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராகத் தடையை விதித்துள்ளோம்.. அதேநேரம் இந்தத் தடைகளை நீண்ட காலம் அமல்படுத்தும் சூழல் ஏற்படாது என நம்புகிறோம். போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். போரை முடிவுக்குக் கொண்டு வர இதுவே சரியான நேரம் என நான் நினைக்கிறேன்" என்றார்.
உக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் ரஷ்யா தீவிரம் காட்டாததால் இந்தத் தடைகள் விதிக்கப்பட்டதாக அமெரிக்க டிரஷரி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. அதில் மேலும், "இந்த நடவடிக்கைகள் ரஷ்யாவின் எரிசக்தித் துறை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும். இதன் மூலம் ஏற்கனவே பலவீனமடைந்து வரும் ரஷ்ய பொருளாதாரம் சிக்கலை எதிர்கொள்ளும். போருக்குத் தேவையான நிதியைத் திரட்ட முடியாமல் போகும்.
பலவீனமடையும்
அமெரிக்கா தொடர்ந்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வை எட்ட நடவடிக்கை எடுக்கும். ஆனால் அதற்கான முழு பொறுப்பையும் ரஷ்யத் தலைமையே ஏற்க வேண்டும்.. நிரந்தர அமைதி என்பது ரஷ்யா எந்தளவுக்குப் பேச்சுவார்த்தையில் ஈடுபட ஆர்வம் காட்டுகிறது என்பதைப் பொறுத்தே இருக்கும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளுக்கு நிதியளிக்கும் திறனைக் குறைத்து, எரிசக்தி சார்ந்த அதன் பொருளாதாரத்தைப் பலவீனப்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரோஸ்நெஃப்ட் மற்றும் லுகோயில் ஆகிய இரு நிறுவனங்களைக் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிகார வரம்புக்குட்பட்ட இந்த நிறுவனங்களின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்படுகின்றன. இதில் ரோஸ்நெஃப்ட் என்பது ரஷ்ய அரசுடன் தொடர்புடைய ஒருங்கிணைக்கப்பட்ட எரிசக்தி நிறுவனமாகும். இது எண்ணெய் ஆய்வு, சுத்திகரிப்பு மற்றும் சர்வதேச பெட்ரோலிய விற்பனையில் நிபுணத்துவம் பெற்றதாக உள்ளது.
யாருக்கெல்லாம் பாதிப்பு
அடுத்து லுகோயில்.. இது ரஷ்யாவில் உள்ள ஒரு தனியார் பன்னாட்டு நிறுவனமாகும். இது ரஷ்யாவிலும் வெளிநாடுகளிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்கள் மட்டுமின்றி இதன் துணை நிறுவனங்களின் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் இவ்விரு நிறுவனங்களும் 50 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட பங்கை எந்த நிறுவனங்களில் எல்லாம் கொண்டிருக்கிறதோ.. அந்த நிறுவனத்திற்கும் இந்தத் தடைகள் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது...












Click it and Unblock the Notifications