100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு.. டிரம்பால் ஆடிப்போன பொருளாதாரம்! பேரழிவு ஏற்படுமாம்.. புது வார்னிங்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது வரிகள் குறித்து தினசரி ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். கடந்த வாரம் வரிகளை அறிவித்த அவர், இந்த வாரம் அதை நிறுத்திவைப்பதாக அறிவித்துள்ளார். என்ன தான் டிரம்ப் வரிகளை நிறுத்துவதாக அறிவித்தாலும் கூட இது சர்வதேச அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கிறது. மேலும், அமெரிக்க மக்களும் கூட இதனால் மிகப் பெரிய பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் திடீரென உலகின் பல்வேறு நாடுகள் மீதும் ரெசிப்ரோக்கல் வரியை அறிவித்தார். இந்தியா, சீனா, வங்கதேசம், இலங்கை என எல்லா நாடுகள் மீதும் டிரம்ப் வரிகளை அள்ளி வீசியிருந்தார். இது சர்வதேச அளவில் ஒரு வணிக பதற்றத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்பட்டது.

இதற்கிடையே கடந்த புதன்கிழமை திடீரென வரி விதிப்பை 90 நாட்கள் நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார். ஆனால், அவர் எல்லா நாடுகளுக்கும் வரியை நிறுத்தவில்லை. சீனா தவிர மற்ற நாடுகளுக்கு வரியை நிறுத்துவதாக அறிவித்த டிரம்ப், சீனாவுக்கான வரியை 100%க்கு மேல் உயர்த்தினார்.
அதிகரிக்கும் வணிக பதற்றம்
மற்ற நாடுகள் மீதான வரியை டிரம்ப் நிறுத்தி வைத்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளிக்கலாம். ஆனால், சீனா மீது டிரம்ப் கடுமை காட்டியுள்ளது வணிக பதற்றத்தை அதிகரிப்பதாகவே இருக்கிறது. மேலும், இதனால் அமெரிக்காவின் சராசரி வரி என்பது நூறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.
டிரம்ப்
அதாவது உலக நாடுகள் மீதான வரியை அறிவித்தது மட்டுமின்றி ஸ்டீல், அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல் இறக்குமதிகளுக்கும் டிரம்ப் தனியாக வரிகளை அறிவித்திருந்தார். இருப்பினும், அமெரிக்க அறிவிப்பால் அந்நாட்டின் கடன் பத்திரங்கள் அழுத்தத்தை எதிர்கொண்டது. வரலாறு காணாத அளவுக்குக் கடன் பத்திரங்களை முதலீட்டாளர்கள் விற்றனர். இது பொருளாதாரத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதாலேயே டிரம்ப் வரிகளை நிறுத்திவைத்தார். ஆனால், சீனா மீதான வரியை மட்டும் அதிகரித்தால்
இப்போது சீனாவில் இருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் பொருட்கள் குறைந்தது 145 சதவீத வரிகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்த போது 380 பில்லியன் டாலர் மதிப்பிலான இறக்குமதிக்கு மட்டுமே வரியை அறிவித்திருந்தார். ஆனால் இப்போது 2.4 டிரில்லியன் டாலர் அமெரிக்க இறக்குமதிகள் அதாவது சுமார் 75% இறக்குமதியைப் பாதிப்பதாக அமெரிக்க வரி வல்லுநர் எரிகா யார்க் கூறியுள்ளார்..
நூற்றாண்டில் இல்லாத வரி
டிரம்பின் நடவடிக்கைகள் உலக நாடுகளைப் பாதிப்பது மட்டுமின்றி, அமெரிக்கர்களையும் கூட கடுமையாகப் பாதிக்கிறது. இது குறித்து யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், "அமெரிக்காவில் இப்போது மக்கள் எதிர்கொள்ளும் சராசரியாக 27 சதவீத வரியை எதிர்கொள்கிறார்கள். கடந்த 1903ம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்கர்கள் எதிர்கொள்ளும் உச்சபட்ச வரி இதுவாகும்" என்றார்.
டிரம்ப் அதிபராகப் பதவியேற்கும் முன்பு கடந்தாண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் சராசரி வரி 2.4 சதவீதமாக இருந்த நிலையில், இப்போது அது 20 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. சீனாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர் மதிப்பிலான பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படுகிறது. அப்படியிருக்கும்போது சீனா மீது 145% வரி போட்டுள்ளதே சராசரி வரி இந்தளவுக்கு உயர முக்கிய காரணமாக இருக்கிறது.

மாபெரும் பொருளாதார மந்தநிலை
1930ஆம் ஆண்டு ஸ்மூட்-ஹாலி சட்டத்திற்குப் பிறகு டிரம்பின் நடவடிக்கைகளால் வரி இந்தளவுக்கு உயர்ந்துள்ளது. 1930களில் இதுபோல வட்டி உயர்த்தப்பட்ட பிறகே அங்கு மிகப் பெரிய மந்தநிலை ஏற்பட்டது. இதனால் பல லட்சம் பேர் வேலை, வீடுகளை இழந்தனர். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வரவே அமெரிக்காவுக்கு பல ஆண்டுகள் ஆனது குறிப்பிடத்தக்கது. மீண்டும் அதுபோன்ற ஒரு நிலை ஏற்படுமோ என்று அமெரிக்க மக்கள் அஞ்சுகிறார்கள்.
இருப்பினும், சீனா மீதான நடவடிக்கைகளில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார். வரிகள் மூலம் அமெரிக்காவுக்குத் தினசரி சுமார் 2 பில்லியன் டாலர் வரை கூடுதலாக வருமானம் கிடைப்பதாக அவர் குறிப்பிடுகிறார். அரசு வருவாய் அதிகரிக்கவும், அமெரிக்காவில் தொழில்துறையை விரிவுபடுத்தி வேலைவாய்ப்பை அதிகரிக்க இதுபோன்ற நடவடிக்கை தேவை என்கிறார் டிரம்ப்.
வல்லுநர்கள் எச்சரிக்கை
ஆனால், சீனா மீதான அதிக வரிகள் அங்கிருந்து வரும் இறக்குமதிகளைக் குறைக்கும் பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். அப்படிக் குறைந்தால் சீன இறக்குமதி மூலம் கிடைக்கும் வரி வருவாய் வரலாறு காணாத அளவுக்குக் குறையும் என்றும் இது வரி விதிப்பிற்கான யோசனையையே நீர்த்துப்போகச் செய்யும் என்றும் டிரம்ப் கட்சியைச் சேர்ந்தவர்களே எச்சரிக்கிறார்கள். இதனால் சீனா மீதான வரிகளையும் குறைக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
டிரம்ப் சுமார் 75 நாடுகள் மீதான வரிகளை நிறுத்தினாலும் கூட சீனா மீது வரிகளை அதிகரித்துள்ளதே இப்போது பேசுபொருள் ஆகியுள்ளது. இதன் காரணமாகவே சர்வதேச பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு நாட்களாகச் சரிந்தது. குறிப்பாக அமெரிக்கப் பங்குச்சந்தை நேற்று கணிசமான சரிவை எதிர்கொண்டது. சீனா மீதான நடவடிக்கையைக் குறைக்காத வரை பங்குச்சந்தை ஆட்டம் காணும் என்றே அஞ்சப்படுகிறது.

பங்குச்சந்தை & தங்கம்
பங்குச்சந்தை மட்டுமின்றி தங்கம் விலையும் கூட சர்வதேச மார்கெட்டில் தாறுமாறாக உயர்ந்துள்ளது. நேற்றைய தினம் அமெரிக்காவில் கோல்ட் ப்யூச்சர்ஸ் 3.5% உயர்ந்து $3,185.50 ஆக இருக்கிறது. அதாவது இந்திய மதிப்பில் ஒரு கிராம் ரூ.9,671ஆக இருக்கிறது. அதாவது சர்வதேச சந்தையில் தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது. அது இந்தியச் சந்தையிலும் இன்று எதிரொலித்துள்ளது.
இருப்பினும், சீனா மீதான நடவடிக்கைகளை டிரம்ப் கைவிட வாய்ப்புகள் குறைவு. ஏனென்றால் டிரம்ப் இதற்கு முன்பு 2016 முதல் 2020 வரை அதிபராக இருந்த போதும் இதேபோல பலரது எதிர்ப்புகளைத் தாண்டி சீனா மீது வரிகளை அறிவித்தார். பலரும் அறிவுறுத்திய போதிலும், அவர் வரிகளைக் கடைசி வரை வாபஸ் பெறவே இல்லை. பதிலுக்குச் சீனாவும் அமெரிக்கா மீது வரி போட்டது தனிக்கதை.. அதன் பிறகு பைடன் வந்த பிறகே இரு தரப்பு நிலைமை சீரானது. இதனால் இந்த முறையும் அதுவே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது, டிரம்ப் 2028 வரை அதிபர் பதவியில் இருக்கும் சூழலில், அதுவரை அவர் சீனாவுடன் இதுபோல மோதல் போக்கையே வைத்துக் கொள்வார் என்று அஞ்சப்படுகிறது.












Click it and Unblock the Notifications