இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் தருவது உண்மைதான்! அம்பலப்படுத்திய அமெரிக்கா
வாஷிங்டன்: பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருவது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே இது தொடர்பாக அமெரிக்கா மிக முக்கியமான ஒரு ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. அதாவது இந்தியா மீது தாக்குதல் நடத்தும் பல தீவிரவாத குழுக்களுக்குப் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாதிகளுக்குப் பாகிஸ்தான் தொடர்ந்து அடைக்கலம் கொடுத்து வருகிறது. இதை இந்தியா பல முறை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினாலும் கூட பாகிஸ்தான் மறுத்தே வருகிறது. இந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தபடி இந்தியா மீது மோசமான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டு வருகிறார்கள்.

முக்கியமான ரிப்போர்ட்
இதற்கிடையே சிஆர்எஸ் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சிப் பிரிவு ஒரு மிக முக்கியமான ரிப்போர்ட்டை சமர்ப்பித்துள்ளது. அதில் பாகிஸ்தான் இன்னுமே தனது மண்ணில் காஷ்மீர் உட்பட இந்தியப் பகுதிகளைக் குறிவைக்கும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளது. பல ராணுவ நடவடிக்கைகள் இருந்த போதிலும், பாகிஸ்தான் மண்ணில் இந்த தீவிரவாத இயக்கங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன என அந்த ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008 மும்பை தாக்குதலுக்குக் காரணமான லஷ்கர்-இ-தைபா, 2001 இந்திய நாடாளுமன்ற தாக்குதலுடன் தொடர்புடைய ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட தீவிரவாத குழுக்கள் பாகிஸ்தானில் இருந்தே இயங்கி வருவதாக CRS ரிப்போர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீவிரவாத குழுக்களுக்குப் பாகிஸ்தான் ஒரு தளமாகவும் பயிற்சிக் களமாகவும் பயன்படுத்தப்படுகிறது.
அதிகரிக்கும் உயிரிழப்புகள்
சமீப ஆண்டுகளில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த 2019ல் தீவிரவாத நடவடிக்கைகளால் பாகிஸ்தானில் ஏற்பட்ட உயிரிழப்புகள் 365ஆக இருந்த சூழலில் கடந்தாண்டு அது 4,001ஆக உயர்ந்து. தீவிரவாத நடவடிக்கைகளால் கடந்த 11 ஆண்டுகளில் பாகிஸ்தானில் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும். பாகிஸ்தான் அடைக்கலம் தரும் பயங்கரவாத குழுக்கள் அவர்களுக்கே எந்தளவுக்கு ஆபத்தாக மாறுகிறது என்பதையே இது காட்டுவதாக இருக்கிறது. இதன் காரணமாகவே பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு என்று பாகிஸ்தானை CRS அறிக்கை கூறுகிறது.
உள்நாட்டு தீவிரவாதம்
அந்த ரிப்போர்ட்டில் மேலும், "2021இல் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததால் ஏற்பட்ட தீவிரவாத எழுச்சியின் பிரதிபலிப்பு இது. பெரும்பாலான பயங்கரவாதக் குழுக்கள் இஸ்லாமியத் தீவிரவாத சித்தாந்தத்தால் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த குழுக்கள் 5 பிரிவுகளாகப் பிரிக்கலாம். சர்வதேச பயங்கரவாதிகள், ஆப்கானிஸ்தான் பயங்கரவாதிகள், இந்தியா-காஷ்மீர் பயங்கரவாதிகள், உள்நாட்டு பயங்கரவாதிகள் மற்றும் பிரிவினைவாத நோக்குடன் இயங்கும் பயங்கரவாதிகள் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் முக்கிய கட்டமைப்புகள் கடுமையாகச் சிதைக்கப்பட்டிருந்தாலும் கூட அது தொடர்ந்து செயல்பட்டே வருகிறது. மேலும், பிற தீவிரவாத அமைப்புகளுடன் கூட்டணியைப் பராமரிக்கிறது. இஸ்லாமிக் ஸ்டேட்-கோரசன் மாகாணம் (IS-KP) சுமார் 4,000-6,000 தீவிரவாதிகளைக் கொண்டுள்ளது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் முழுவதும் செயல்படு தாக்குதல்களை ஏற்படுத்துகிறது. மற்ற தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்களும் இதில் சேர்கிறார்கள் என்பது கவலைக்குரிய விஷயமாகும்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிடிபி
பாகிஸ்தானைக் குறிவைத்து அதன் நாட்டில் இயங்கும் தீவிரவாத அமைப்புகளில் முக்கியமானதாக டிடிபி எனப்படும் தெஹ்ரிக்-இ-தாலிபான் இருக்கிறது. இந்த தீவிரவாத இயக்கத்தில் சுமார் 2,500-5,000 பிரிவினைவாதிகள் இருக்கலாம் எனத் தெரிகிறது. பாகிஸ்தான் அரசைக் கவிழ்த்து ஷரியா சட்டத்தை நிலைநாட்டுவதே இதன் நோக்கம் என அறிக்கை கூறுகிறது. இந்த தீவிரவாத குழு ஆப்கானிஸ்தானில் இருந்தே இயங்குவதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Congressional Research Service (CRS) என்பது அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒரு சுதந்திரமான ஆராய்ச்சிப் பிரிவாகும். சர்வதேச சூழலைப் புரிந்து கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது உதவுகிறது. அதேநேரம் அதன் ரிப்போர்ட்கள் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ கருத்தாகக் கருதப்படுவதில்லை.












Click it and Unblock the Notifications