"பெரும் பணக்காரர்கள்.." அசைக்கவே முடியாத அமெரிக்கா! பின்னாலேயே வரும் சீனா.. இந்தியாவுக்கு எந்த இடம்
வாஷிங்டன்: பிரபல ஃபோர்ப்ஸ் இதழ் டாப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் உலகெங்கும் இருக்கும் 77 நாடுகளைச் சேர்ந்த 2640 பெரும் பணக்காரர்கள் உள்ள நிலையில், எந்த நாட்டில் அதிக கோடீஸ்வரர்கள் உள்ளனர் என்பதைப் பார்க்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிஸ்னஸ் இதழான ஃபோர்ப்ஸ் ஒவ்வொரு ஆண்டும் உலகில் இருக்கும் டாப் கோடீஸ்வரர்கள் குறித்த பட்டியலை வெளியிடும். உலகின் அனைத்து நாடுகளை சேர்ந்த பெரும் பணக்காரர்கள் சொத்து மதிப்பு மதிப்பிடப்பட்டு ரேங் செய்திருப்பார்கள்.

இந்தாண்டிற்கான டாப் பணக்காரர்களின் பட்டியலை இப்போது ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. உலகெங்கும் இருக்கும் 77 நாடுகளில் இருந்து சுமார் 2,640 பணக்காரர்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.
இதில் அதிக பணக்காரர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் இடத்தில் வழக்கம் போல அமெரிக்காவே இருக்கிறது. பொதுவாக இந்த பட்டியலில் பெரும்பாலும் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்தாண்டும் அதே நிலைதான் தொடர்கிறது.
உலகில் இப்போது 2640 பெரும் பணக்காரர்கள் இருக்கும் நிலையில், அதில் 25% மேல், அதாவது 735 பேர் அமெரிக்காவில் இருந்தே உள்ளனர். அதிகப்படியானோர் இருந்தாலும் கூட உலகின் மிகப் பெரிய பணக்காரர்கள் அமெரிக்காவில் இல்லை.

உலகளவில் பிரபலமான எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ், பில் கேட்ஸ் அமெரிக்காவில் வசித்தாலும் கூட டாப் பணக்காரர் அமெரிக்காவைச் சேர்ந்தவர் இல்லை. உலகின் பெரும் பணக்காரர் என்ற பட்டத்தை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெர்னார்ட் அர்னால்ட்டு என்பவர் பெறுகிறார்.
கொரோனாவுக்கு பின் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் தள்ளாடி வரும் நிலையில், சாம் பேங்க்மேன்-ஃபிரைட், கன்யே வெஸ்ட் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர்.
அதேநேரம் கூடைப்பந்து வீரர் லெப்ரான் ஜேம்ஸ் மற்றும் கோல்ப் வீரர் டைகர் வூட்ஸ் ஆகியோர் இந்தப் பட்டியலில் முதல்முறையாக உள்ளே வந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக பெரும் பணக்காரர்களைக் கொண்ட நாடாகச் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை குறைந்தே இருக்கிறது சீனாவில் கடந்தாண்டு 539 பெரும் பணக்காரர்கள் இருந்த நிலையில், இப்போது அது 495ஆகக் குறைந்துள்ளது.
இதில் 169 பெரும் பணக்காரர்களுடன் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள பெரும் பணக்காரர்களின் ஒட்டுமொத்த நிகர மதிப்பு $675 பில்லியனாக உள்ளதாக ஃபோர்ப்ஸ் இதழ் கூறியுள்ளது.

இது கடந்த ஆண்டை விட $75 பில்லியன் குறைவாகும். ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பின் மட்டும் கிட்டத்தட்ட 43 பில்லியன் டாலரை இழந்த கௌதம் அதானியின் நிகர மதிப்பு படுவேகமாக சரிந்ததே இதற்கு முக்கிய காரணமாகும்.
அதேபோல அதிக பெரும் பணக்காரர்களைக் கொண்ட நாடுகள் பட்டியலில் ஜெர்மனி நான்காவது இடத்தில் இருக்கிறது. அங்கே கடந்தாண்டு 134 பெரும் பணக்காரர்கள் இருக்கும் நிலையில், இந்தாண்டு அது 126ஆக குறைந்துள்ளது. ஜெர்மனியில் மிகப் பெரிய பணக்காரராக ஸ்வார்ஸ் குழுமத்தின் உரிமையாளர், டீட்டர் ஸ்வார்ஸ் என்பவரின் நிகர மதிப்பு $42.9 பில்லியனாக உள்ளது.
முதல் நான்கு இடங்களில் இப்படி அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜெர்மனி ஆகிய நாடுகள் இருக்கும் நிலையில், 5ஆவது இடத்தில் ரஷ்யா உள்ளது. அங்கே ரஷ்யாவில் மொத்தம் 105 பெரும் பணக்காரர்கள் உள்ளனர். ரஷ்யாவில் இருக்கும் ஒட்டுமொத்த பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு 474 பில்லியன் டாலர் ஆகும்.












Click it and Unblock the Notifications