"பிரதமர் மோடி, அதானி.." டாப் பணக்காரர் ஜார்ஜ் சோரோஸ் சொன்ன அந்த வார்த்தை.. கொந்தளிக்கும் மத்திய அரசு
பிரதமர் மோடி குறித்து ஜார்ஜ் சோரோஸ் கூறிய கருத்துகள் பரபரப்பை கிளப்பியுள்ளது.
வாஷிங்டன்: உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ், இந்தியா குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் கூறியுள்ள கருத்துகள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு மத்திய அரசும் பதிலடி கொடுத்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் ஒருவரான ஜார்ஜ் சோரோஸ், இந்தியா குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் சில பரபர கருத்துகளைத் தெரிவித்தார். இது பெரும் விவாதமாக மாறிப்போனது.
அதானி விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி குறித்து இவர் சொன்ன கருத்து பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தச் சூழலில் மத்திய அரசு இவருக்கு மிகக் கடுமையான பதிலடியும் கொடுத்துள்ளது. யார் இவர் அப்படி என்ன சொன்னார் என்பதைப் பார்க்கலாம்.

ஜார்ஜ் சோரோஸ்
92 வயதான ஜார்ஜ் சோரோஸ் உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவர் ஆவர். யூத குடும்பத்தைச் சேர்ந்த இவரது குடும்பம் ஹங்கேரியாவில் வசித்து வந்தது. இருப்பினும், அங்கு நாஜிக்கள் ஆதிக்கம் அதிகரித்த போது, அவரது குடும்பம் ஹங்கேரியை விட்டு வெளியேறியது. அப்போது அவருக்கு வெறும் 17 வயது தான் ஆகியிருந்தது. 1947இல், அவர்கள் குடும்பம் லண்டன் சென்ற நிலையில், அங்கு ஜார்ஜ் சோரோஸ் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் தத்துவம் பயின்றார்.

யார் இவர்
அதைத் தொடர்ந்து, லண்டன் வணிக வங்கியான சிங்கர் & ஃபிரைட்லேண்டரில் அவர் பணியில் சேர்ந்தார். 1956ஆம் ஆண்டில், சொரெஸ் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றார்.. அங்கு அவர் ஆரம்பத்தில் ஐரோப்பியக் கடன் பத்திரங்களின் ஆய்வாளராக பணியாற்றினார். 1973 தனியாக ஒரு நிறுவனத்தை தொடங்கிய இவர், துணிச்சலான முதலீட்டு முடிவுகளை எடுத்துப் பிரபலமடைந்தார். ஒரு முறை பிரிட்டிஷ் பவுண்டிற்கு எதிராக முதலீடு செய்து $1 பில்லியன் லாபம் ஈட்டினார். இங்கிலாந்தின் வங்கியையே திவால் நிலைக்குத் தள்ளப்பட்டவர் என்ற பெயரையும் பெற்றவர்.

அறக்கட்டளைகள்
இவர் கடந்த 1969 முதல் 2011 வரை முதலீட்டாளர்களின் பணத்தை நிர்வகித்து வந்தார். சொரெஸின் நிகர மதிப்பு $8.5 பில்லியன் (இந்திய மதிப்பில் 70 ஆயிரம் கோடி) ஆகும். ஏழ்மை நிலையில் இருப்போருக்கு உதவ அதிகப்படியான நிதியை நன்கொடையாக வழங்குவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், அவர் ஓபன் சொசைட்டி அறக்கட்டளை நிறுவியுள்ளார். இது ஜனநாயகம், வெளிப்படைத்தன்மை மற்றும் பேச்சு சுதந்திரத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு நிதியுதவி செய்கிறது. இவரது இந்த அறக்கட்டளை இப்போது 70க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறது.

சர்ச்சை பேச்சு
அவர் அரசியலிலும் கூட வெளிப்படையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். பராக் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் மற்றும் ஜோ பிடன் ஆகியோரை ஆதரித்துள்ளார். மேலும், கடந்த காலங்களில் சீனாவின் அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துருக்கியின் ரெசெப் தையிப் எர்டோகன் ஆகியோரை வெளிப்படையாக விமர்சித்துள்ளார். மியூனிக் பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக அவர் பேசிய பேச்சு தான் இப்போது மத்திய அரசுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரதமர் மோடி
அதானி விவகாரத்தைக் குறிப்பிட்ட அவர், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இந்திய நாடாளுமன்றமும் இது குறித்து கேள்வி எழுப்பும் நிலையில், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் விளக்கமளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும், அதானி மீதான பங்கு மோசடி குற்றச்சாட்டுகள் குறித்தும் விளக்க வேண்டும் என்றார். இது இந்திய அரசியலில் மோடியின் பிடியைப் பலவீனப்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தேவையான நிர்வாக சீர்திருத்தங்கள் செய்யும் அழுத்தத்தை இது கொடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மத்திய அரசு பதிலடி
மேலும், இந்தியாவில் ஜனநாயக மறுமலர்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். அவரது இந்தப் பேச்சு சர்வதேச அளவில் பேசுபொருளானது. இதற்கிடையே இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலடி கொடுத்துள்ளார். அதாவது, இந்தியாவின் மீதான தாக்குதலை ஏற்க முடியாதது என்றும் இந்தியாவின் ஜனநாயக செயல்முறைகளில் தலையிட முயற்சிக்கும் வெளிநாட்டுச் சக்திகளுக்கு இந்தியர்கள் ஒற்றுமையாகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications