"சாட் ஜிபிடி" வேலைகள் பறிபோகும்.. உண்மையில் பயமாதான் இருக்கு.. உருவாக்கியவரே சொன்ன பகீர் தகவல்
சாட் ஜிபிடியால் வேலையிழப்பு ஏற்படும் என்று பரவலாகக் கூறி வருகின்றனர்.
வாஷிங்டன்: உலகெங்கும் சாட் ஜிபிடி கருவியைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இதனிடையே இதை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவர் இது குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இப்போது எங்குப் பார்த்தாலும் சாட் ஜிபிடி தான் டிரெண்டாகி வருகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இந்த சாட் ஜிபிடி, நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக் எனப் பதில் தருகிறது.
கவிதை கேட்டால் கவிதை சொல்லும், லவ் லெட்டர் எழுதித் தரும் எனப் பல உதவிகளை சில நொடிகளில் செய்து முடிக்கும். அந்தளவுக்கு மிகவும் பவர் புல்லான ஒரு ஏஐ கருவியாக சாட் ஜிபிடி இருக்கிறது.

சாட் ஜிபிடி
இது கல்லூரி தேர்வுகள், போட்டி தேர்வுகள் என்று அனைத்தையும் கூட பாஸ் செய்துவிடுகிறது. இப்படிப் பல உதவிகளைச் செய்தாலும் கூட இது குறித்த அச்சம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. குறிப்பாக இந்த சாட் ஜிபிடியால் மனிதர்கள் வேலையிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கிறார்கள். இந்த சாட் ஜிபிடி நிறுவனத்தால் மனித வேலைகள் பறிபோகும் என்ற அச்சம் அதிகமாகவே இருக்கிறது. இதனால் சாட் ஜிபிடி போன்ற ஏஐ கருவிகளைத் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் கூட எழுந்துள்ளது.

சாட் ஜிபிடி-ஐ உருவாக்கியவர்
இதனிடையே சாட் ஜிபிடி ஏஐ தளத்தை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் நிறுவனர் சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் நேர்காணல் ஒன்றைக் கொடுத்திருந்தார். அதில் சாட் ஜிபிடியால் சில வேலைகள் மாயமாகக் கூடும் என்ற உண்மையை ஒப்புக் கொண்டார். அதேநேரம் மனித படைப்பாற்றல் என்பது வரம்பற்றது என்று குறிப்பிட்ட அவர், நிச்சயம் நாம் புதிய விஷயங்கள் மூலம் கூடுதல் வேலைகளை உருவாக்கலாம் என்று அவர் தெரிவித்தார். மேலும் தனது படைப்பு குறித்துத் தானே கொஞ்சம் அஞ்சுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மிக பெரிய தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு சமூகத்தை மறுசீரமைக்கும் என்றாலும் கூட அதில் சில உண்மையான ஆபத்துகளும் இருக்கிறது என்று அவர் தெரிவித்தார். அதேநேரம் இந்த ஏஐ அமைப்புகள் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு நாம் இதுவரை உருவாக்கியதிலேயே மிகப் பெரிய தொழில்நுட்பமாக இருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "நாம் இங்கே கவனமாக இருக்க வேண்டும், நாங்களே இது குறித்து சற்று அச்சமாகவே உள்ளோம். நான் இப்படிக் கூறுவதைக் கேட்டு மக்கள் மகிழ்ச்சியடையவே வேண்டும்.

தவறான தகவல்கள்
ஏனென்றால் நான் அப்படிச் சொன்னால் நான் பொய் சொல்கிறேன் என்று நீங்கள் நம்ப மாட்டீர்கள். அல்லது தவறான நபருக்கு இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக நினைப்பீர்கள். அதேநேரம் தவறான தகவல்களைப் பரப்ப ஏஐ பயன்படுத்துவது குறித்தே எனக்கு அதிக கவலை இருக்கிறது. இதன் மூலம் மிகப் பெரிய அளவில் பொய்யான செய்திகள் பரப்பக் கூடும் என்று நான் கவலைப்படுகிறேன். இப்போது அவை கம்ப்யூட்டர் லாங்குவேஜ் எழுதுவதில் சிறப்பாக உள்ளன. எனவே, அதை சைபர் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தலாம்.

என்ன சிக்கல்
ஏஐ கருவிகள் மனிதக் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதனால் மனிதர்களை இதை வைத்து என்ன செய்வார்கள் என்று நம்மால் உறுதியாகச் சொல்ல முடியாது. நாங்கள் சில பாதுகாப்பு வரம்புகளை வைத்துள்ளோம். அதேநேரம் இந்த பாதுகாப்பு வரம்புகளை வைத்ததாகச் சிலரும் இருப்பார்கள். இது பிரச்சினையை ஏற்படுத்தலாம். இந்த சமூகம் இதைப் புரிந்து கொண்டு எதிர்வினையாற்ற சில காலம் தேவைப்படுகிறது. இதைக் கையாள்வது புரிந்து கொண்டு ஒழுங்குபடுத்தக் காலம் தேவைப்படுகிறது. சில மனித வேலைகளை இதுபோன்ற ஏஐ கருவிகள் பறிக்கும் சாத்தியம் இருக்கவே செய்கிறது.

பயமாக உள்ளது
ஆனால், எவ்வளவு சீக்கிரமாக நடக்கும் என்பதே கவலையாக உள்ளது. கடந்த இரண்டு தலைமுறைகளாக, மனிதக்குலம் மிகப்பெரிய தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு மாற்றிக் கொள்ளும் என்பதை நிரூபித்துள்ளது. ஆனால் இது வெகு விரைவாக ஓரிரு ஆண்டில் நடந்துவிட்டால் என்ன செய்வது. இது தான் எனக்குப் பயமாக உள்ளது. அதுதான் நமக்கு சிக்கலைத் தரும். மக்கள் சாட் ஜிபிடியை ஒரு கருவியாகப் பார்க்க வேண்டும். இது ஒரு போதும் மக்களுக்கு மாற்று இல்லை.. மனித படைப்பாற்றல் வரம்பற்றது, புதிய வேலைகளும் புதிய வாய்ப்புகளையும் நாங்கள் பார்க்கிறோம்" என்றார்.

யார் இந்த சாம் ஆல்ட்மேன்
இப்போது ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைவராக உள்ள இந்த சாம் ஆல்ட்மேன் செயின்ட் லூயிஸ், மிசோரியில் தனது இளமைக் காலத்தைக் கழித்தவர். மேகிண்டோஷ் கணினி மொழியில் இவர் நிபுணத்துவம் பெற்றார், இதுவே அவரை இந்த இடத்திற்கு எடுத்து வந்துள்ளது. முதலில் அவர் பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் வேலை செய்தார். அதன் பிறகு, ஓபன் ஏஐ நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஓபன் ஏஐ நிறுவனம்
மனிதக் குலத்தை ஏஐ நிறுவனத்தின் அழிவிலிருந்து காப்பாற்றவே இதைத் தொடங்கியதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. எலான் மஸ்கு் இந்த நிறுவனத்தின் இணை நிறுவனராவார். முதலில் இது லாப நோக்கற்ற ஆய்வு நிறுவனமாகவே செயல்பட்டு வந்தது, இருப்பினும், மஸ்க் இந்த நிறுவனத்தில் இருந்த 2018இல் வெளியேறிய நிலையில், 2019இல் இந்த நிறுவனம் லாப நோக்க நிறுவனமாக மாறியது. அதைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களுடன் கூட்டணியும் அமைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications