"விநாயகர் சிலை + பகவத் கீதை.." விண்வெளிக்கு எடுத்து செல்ல ஆசை! மனம் திறந்த சுனிதா வில்லியம்ஸ்
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் தனது அடுத்த பயணத்தில் விநாயகர் சிலையை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்வெளி சார்ந்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. நாசா மையத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் அதிகம் பணிபுரிகிறார்கள். பலர் விண்வெளி வீரர்களாகவும் உள்ளனர்.

சுனிதா வில்லியம்ஸ்: அதன்படி அமெரிக்காவில் வசிக்கும் மிக முக்கியமான விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவரது தந்தை தீபக் பாண்டியா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சுனிதா வில்லியம்ஸ் ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்குச் சென்றிருந்த நிலையில், மூன்றாவது முறையாக இன்று போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளிக்குச் செல்லவிருந்தார். இருப்பினும், கடைசி நிமிடத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையே அவர் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, குறிப்பாக ஆன்மீகத்தில் இருக்கும் நாட்டம் பற்றி வெளிப்படையாகப் பல கருத்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். எந்த மதம் என்பதைத் தாண்டி பொதுவாக ஆன்மீகத்தில் தனக்கு அதிக ஈடுபாடு இருப்பதாக சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்தார்.
ஆன்மீகம்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனக்கு பொதுவாகவே ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகம். குறிப்பிட்ட மதம் என சொல்ல முடியாது. அனைத்து மதங்களிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. நான் எனது அடுத்த விண்வெளி பயணத்தில் விநாயகர் சிலையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப் போகிறேன். விநாயகர் சிலை எனக்கு அதிஷ்டம் கொடுக்கும் ஒன்றாக நான் கருதுகிறேன்.
விநாயகர் சிலை: எப்போதும் விநாயகர் சிலை தான் எனக்கு அதிர்ஷ்டம் தருவதாக இருந்துள்ளது. இதனால் இந்த முறையும் நான் விநாயகரை என்னுடன் எடுத்துச் செல்ல உள்ளேன். அடுத்த முறை விண்வெளிக்குச் செல்லும் போது விநாயகர் சிலை என்னுடன் இருக்கும் என்பதில் எனக்குச் சந்தோஷம் தான். கடந்த காலங்களில் நான் என்னுடன் பகவத் கீதையை விண்வெளிக்கு எடுத்துச் சென்றுள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.
விண்வெளியைத் தாண்டி வேறு எதில் ஆர்வம் என்ற கேள்விக்கு சுனிதா வில்லியம்ஸ், "எனக்கு மாரத்தான் போட்டிகளில் ஆர்வம் அதிகம்.. நான் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபோது ஒரு மாரத்தான் போட்டியில் விர்ச்சுவலாக ஓடி இருக்கிறேன்" என்றார்.
அச்சம் இல்லை: மேலும், விண்வெளிக்குச் செல்லும் போது கொஞ்சம் பதற்றமாக இருந்தாலும் இப்போது அது பழகிவிட்டதால் புதிய விண்கலத்தில் பறப்பதில் எந்த நடுக்கமும் இல்லை என்று அவர் கூறினார். மேலும், சர்வதேச விண்வெளி நிலையம் கிட்டதட்ட இரண்டாவது வீடு போலத் தான் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் ஏற்கனவே இரண்டு முறை விண்வெளிக்குச் சென்றுள்ள நிலையில், அப்போது அவர் சில சாதனைகளையும் படைத்தார். குறிப்பாக ஒரு பெண் விண்வெளி வீரராக அதிக ஸ்பேஸ் வாக் செய்த நபர் என்ற சாதனை அவர் வசம் தான் இருக்கிறது. அவர் மொத்தம் ஏழு ஸ்பேஸ் வாக் செய்துள்ள நிலையில், சுமார் 50 மணி நேரம் 40 நிமிடங்கள் ஸ்பேஸ் வாக் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications