"அணுகுண்டு தெரியுமா.." ஏஐ தொழில்நுட்பமும் அதுபோல தான்.. எச்சரிக்கும் டாப் பணக்காரர் வாரன் பபெட்
வாஷிங்டன்: ஏஐ தொழில்நுட்பம் இப்போது மின்னல் வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், இது தொடர்பாக உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரும் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவருமான வாரன் பபெட்டும் கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில காலமாகவே ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தான் இந்த ஆண்டின் முக்கிய வார்த்தையாக மாறியுள்ளது. நாம் கேட்கும் கேள்விகளுக்குப் பதில், கவிதை எனக் கேட்கும் அனைத்தையும் கொடுத்து சாட் ஜிபிடி தான் இப்போது டிரெண்டிங்கில் உள்ளது.

அதேபோல பல்வேறு துறைகளிலும் ஏஐ சாட் பாட்களின் பயன்பாடும் அதிகரித்துவிட்டது. இப்படி ஏஐ மூலம் பல்வேறு நன்மைகள் இருந்தாலும் கூட இதனால் சில தீமைகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் அஞ்சி வருகின்றனர்.
ஏஐ தொழில்நுட்பம்: குறிப்பாக ஏஐ தொழில்நுட்பம் பல லட்சம் வேலைகளைப் பறித்துவிடும் கவலையும் பரவலாக இருக்கவே செய்கிறது. குறிப்பாக எலான் மஸ்க் உள்ளிட்டோர் இது குறித்து வெளிப்படையாகவே பேசியுள்ளனர். இதனிடையே உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவரும் தலைசிறந்த முதலீட்டாளர்களில் ஒருவருமான வாரன் பபெட்டும் இது தொடர்பாகக் கவலை தெரிவித்துள்ளார்.
தனது நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர், சக்திவாய்ந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவதை அணுகுண்டுடன் ஒப்பிட்டுப் பேசினார். சில காலம் முன்பு, பபெட்டிடம் பில் கேட்ஸ் சாட்ஜிபிடியை காட்டினார். அதை ட்ரை செய்த பபெட் அதன் பரந்த திறன்களால் ஈர்க்கப்பட்டாலும், ஏஐ தொழில்நுட்பத்தைக் கண்டு சற்று பயப்படுவதாக்கத் தெரிவித்திருந்தார்.

நிறுத்த முடியாது: இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "ஒரு தொழில்நுட்பம் எல்லா வகையான விஷயங்களையும் செய்யும்போது, நான் கொஞ்சம் கவலைப்படுகிறேன். ஏனென்றால், ஒரு முறை அதை நாம் உருவாக்கிவிட்டால் அதைத் தடுத்து நிறுத்த முடியாது என்பது எனக்குத் தெரியும், உங்களுக்கும் தெரியும்..
இரண்டாம் உலகப் போரில் அணுகுண்டு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என அனைவருக்கும் தெரியும். அதுபோல ஒன்றாக இது இருந்துவிடக் கூடாது. இத்தனை ஆற்றல் மிக்க ஒன்று அடுத்த இருநூறு ஆண்டுகளுக்கு உலகிற்கு நல்லதாக இருக்குமா.. ஏஐ தொழில்நுட்பம் அனைத்தையும் மாற்றிவிடும். மனிதர்கள் எப்படி நினைக்கிறார்கள் மற்றும் நடந்துகொள்கிறார்கள் என்பதைத் தவிர, அனைத்தையும் மாற்றும்.

அணுகுண்டு: இதை நான் சொல்லவில்லை. அணுகுண்டுக்குப் பிறகு ஐன்ஸ்டீன் இதைத் தான் கூறினார், நான் இப்போது அதையே கூற விரும்புகிறேன். ஏஐ மூலம், மனிதர்கள் எப்படி நினைக்கிறார்கள் மற்றும் நடந்து கொள்கிறார்கள் என்பதைத் தவிர அனைத்தையும் மாற்றிவிட முடியும். அது மிகப் பெரிய ஒரு செயல்" என்று அவர் தெரிவித்தார்.
அதே நிகழ்வில் பேசிய மற்றொரு பெரு முதலீட்டாளரான சார்லி மங்கர், ''செயற்கை நுண்ணறிவு செயல்படும் முறையில் எனக்குத் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளது. இப்போது இருக்கும் தொழில்நுட்பங்களே சிறப்பாக உள்ளதாக நான் நினைக்கிறேன்" என்றார்.
எச்சரிக்கை: சமீபத்தில், ஏஐ தொழில்நுட்பத்தின் காட்ஃபாதர்களில் ஒருவராக அறியப்படும் ஜெஃப்ரி ஹிண்டன், காலநிலை மாற்றத்தை விடச் செயற்கை நுண்ணறிவு மனிதக்குலத்திற்கு "அதிகமான" அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கூறி தனது கவலைகளை வெளிப்படுத்தினார். மேலும், மனித மூளையின் செயல்பாட்டைக் கூட சாட்போட்கள் விரைவில் முந்திவிடும் என்றும் அவர் கூறியிருந்தார்.
இதற்கிடையில், ஏப்ரலில், ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் சாட் ஜிபிடி 4 போன்ற அதிநவீன ஏஐ தொழில்நுட்ப சோதனைகளைக் குறைந்தது 6 மாதங்கள் நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications