கிறிஸ்துமஸ் தொப்பி எப்படி விண்வெளியில் கிடைத்தது? பக்கா பிளான்? எழுந்த சர்ச்சை! நாசா கூறிய விளக்கம்!
வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் சுனிதா வில்லியம்ஸ் குழுவினர் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடிய வீடியோவை நாசா வெளியிட்டிருந்த நிலையில், 8 நாள் பயணமாக போகும்போதே கிறிஸ்துமஸ் தொப்பிகள் உள்ளிட்ட பொருட்களை அவர்கள் எடுத்துச் சென்றிருந்தனரா என பலரும் கேள்வி எழுப்பினர். ஸ்டார்லைனர் செயலிழப்பு எல்லாம் திட்டமிட்டு நடத்தப்பட்டதா என யூகங்கள் எழுந்தன. அதற்கு நாசா விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்றனர். அங்கு ஆய்வு நடத்திவிட்டு, ஜூன் 14 ஆம் தேதி பூமிக்கு திரும்பத் திட்டமிடப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் அங்கேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் மேலாக அவர்கள் விண்வெளியில் தங்கி இருக்கின்றனர். வரும் பிப்ரவரி மாதம் தான் அவர்கள் பூமிக்குத் திரும்புவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் காரணமாக அவர்கள் மார்ச் மாதத்தில் தான் திரும்புவார்கள் எனத் தகவல் வெளியானது.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் 6 மாதங்களுக்கு மேலாக தங்கி உள்ள சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது குழுவினர் பூமியில் இருக்கும் மக்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளனர். விண்வெளியில் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் வீடியோ பதிவு ஒன்றை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் அவர்கள் சாண்டா தொப்பி அணிந்தபடி, பூமியில் உள்ள அனைவருக்கும், சர்வதேச விண்வெளி வீரர்களான எங்களின் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வரவேற்கிறோம். கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு நாங்கள் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நாங்கள் 7 பேர் இங்கே இருக்கிறோம். நாங்கள் ஒன்றாக இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாட உள்ளோம் எனத் தெரிவித்திருந்தனர்.
விண்வெளி வீரர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட வீடியோவை வெளியிட்டது பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பல கேள்விகள் எழுந்தன. கடந்த ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற அவர்களுக்கு நீண்ட நாட்கள் அங்கு தங்கியிருப்போம் என தெரியுமா? கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு தேவையான பொருட்கள் எப்படி அவர்களுக்கு கிடைத்தது?
8 நாட்கள் மட்டுமே ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் சென்ற அவர்களிடம் கிறிஸ்துமஸ் தொப்பிகள் எப்படி கிடைத்தன? கிறிஸ்துமஸ் பொருட்களை அவர்களுக்கு டெலிவரி செய்தது யார்? அல்லது முன்பே இதையெல்லாம் முடிவு செய்து தான் நாசா அவர்களை அனுப்பியதா? என சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
மக்கள் மத்தியில் பல்வேறு யூகங்கள், சந்தேகங்கள் எழுந்த நிலையில், அவற்றிற்கு நாசா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம், கிறிஸ்துமஸ் தொப்பி, கிறிஸ்துமஸ் மரம் மற்றும் கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள் ஸ்பேஸ் எக்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், மற்றும் குக்கீஸ் உள்ளிட்ட உணவுகளும் இருந்தன.
அவற்றோடு சில அறிவியல் ஆய்வுக்கான பொருட்களும் இருந்தன. 3 டன் எடை கொண்ட ஸ்பெஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் அவை அங்கு கொண்டு செல்லப்பட்டது. சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் இப்படி பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன என நாசா கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications