குணமடைந்த பிறகும் துரத்தும் கொரோனா! இந்த பாதிப்புகள் 25% அதிகம் ஏற்படுகிறது.. எச்சரிக்கும் WHO
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது தான் மெல்லக் குறைந்து வரும் நிலையில், கொரோனா ஏற்படுத்தும் இதர பாதிப்புகள் குறித்து உலக சுகாதார அமைப்பு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகவே கொரோனா பாதிப்பு தான் உலகை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதை முற்றிலுமாக அழிக்க முடிவதில்லை.
முதலில் சீனாவில் தோன்றிய கொரோனா, அடுத்து ஆல்பா, டெல்டா, இப்போது ஓமிக்ரான் என அடுத்தடுத்து கொரோனா அலைகள் தாக்கி வருவதால் உலக நாடுகள் இதில் இருந்து முற்றிலும் விடுபட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இதர பாதிப்பு
இப்போது தான் ஓமிக்ரான் கொரோனா கிட்டதட்ட கட்டுப்பாட்டில் வந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மெல்லத் திரும்பி வருகிறது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடையும் நபர்களுக்கு ஏற்படும் மனரீதியான பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளது. கொரோனா பாதிப்பு கவலை மற்றும் மனச்சோர்வு பாதிப்புகளை சுமார் 25 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

என்ன காரணம்
குறிப்பாக, வைரஸ் பாதிப்பு ஏற்படும் சமயத்தில் 2 வாரங்கள் வரை தனிமையில் இருக்க வேண்டி உள்ளதால் அந்த சமயத்திலேயே மன அழுத்தம் அதிகரிக்கக் காரணமாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்குத் தேவையான மனநலம் மற்றும் உளவியல் சிகிச்சைகளும் போதியளவு கிடைப்பதில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

நடவடிக்கை தேவை
இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், "கொரோனா வைரஸ் மனநலம் சார்ந்து எந்தளவு பிரச்சினையை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நம்மிடம் உள்ள தகவல்கள் வெறும் ஆரம்பம் தான். மனநல சிகிச்சையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால், பாதிப்பு மிக மோசமாக இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

மற்ற காரணங்கள்
தனிமை தவிர வேலை செய்யும் முறை, அன்புக்கு உரியவர்களிடம் பிரிந்து இருப்பது, கூட்டங்களில் பங்கேற்க முடியாமல் போவது உள்ளிட்டவையும் மன அழுத்தம் அதிகரிக்க முக்கிய காரணமாக உள்ளது. தனிமை, நோய்த்தொற்று குறித்த பயம், துன்பம் மற்றும் அன்புக்கு உரியவர்களின் மரணம், நிதி சிக்கல் குறித்த கவலைகள் ஆகியவை தான் கவலை மற்றும் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் முக்கிய காரணங்களாக உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் சோர்வு காரணமாகச் சுகாதார பணியாளர்களிடையே தற்கொலை எண்ணமும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இணை நோய் உள்ளவர்கள்
கொரோனா காரணமாக ஏற்படும் மன ரீதியிலான பாதிப்புகள் இளைஞர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இளைஞர்கள் மத்தியில் தற்கொலை மற்றும் சுய-தீங்கு ஏற்படுத்திக் கொள்வதற்கான ஆபத்து அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது, அதேபோல ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஆஸ்துமா, புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற இனை நோய் உள்ளவர்களுக்கு எளிதாக மனநலம் சார்ந்த பாதிப்புகளும் ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக நாடுகள்
முதலில் இந்த கொரோனா பெருந்தொற்றும் உலக நாடுகளின் மோசமான பொதுச் சுகாதார கட்டமைப்பை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்ததது. அதேபோல இப்போது மனநலம் சார்ந்த சிகிச்சைகளில் எவ்வளவு பற்றாக்குறை இருக்கிறது அதற்கு நாம் எந்தளவு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதையும் விளக்கம் வகையில் உள்ளதாக உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications