எமனாக மாறும் ராக்கெட் உதிரி பாகங்கள்! அடுத்த 10 ஆண்டுகளில் ரொம்பவே டேஞ்சர்.. பகீர் ஆய்வு முடிவுகள்
வாஷிங்டன்: விண்வெளியில் இருந்து விழும் ராக்கெட் பாகங்கள் குறித்து முக்கிய எச்சரிக்கை ஒன்றைக் கனடா நாட்டில் உள்ள முக்கிய பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
கடந்த வாரம் சீனாவுக்குச் சொந்தமான ராக்கெட்டின் பகுதிகள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல், பூமியில் விழுந்தது. நல்வாய்ப்பாக அது இந்தியப் பெருங்கடல் பகுதியில் பகுதியில் விழுந்ததால் மோசமான பாதிப்புகள் இல்லை.
இதன் பகுதிகள் மக்கள் வசிக்கக் கூடிய பகுதிகளில் விழுந்து இருந்தால், மோசமான விளைவுகள் ஏற்படு இருக்கக்கூடும். அதேநேரம் ராக்கெட் பாகங்கள் பூமியில் விழுவது இது முதல்முறை இல்லை.
விண்வெளியில் இருந்து பொத்தென விழப் போகும் சீனாவின் ராக்கெட்! எங்கே விழும்? யாருக்கு ஆபத்து?
ஆய்வு
இந்தச் சூழலில் கனடா நாட்டில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை நடத்தி இருந்தது. அதில் விண்வெளியில் இருந்து விழும் ராக்கெட் பாகங்கள் காரணமாக மனிதர்கள் மோசமாகக் காயமடையும் வாய்ப்புகள் அவ்வளவு ஏன் உயிரிழக்கும் வாய்ப்புகள் கூட உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. ராக்கெட் பாகங்களால் உயிரிழப்புகள் ஏற்பட 6-10% வரை வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
தடுக்கலாம்
இதைத் தடுக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஆய்வை முன்னெடுத்த மைக்கேல் பையர்ஸ் கூறுகையில், "உயிரிழப்புகள் பிஸ்னஸின் ஒரு பகுதி என விட்டு விட வேண்டுமா அல்லது அதை தடுக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டுமா என்று முடிவு செய்யும் நிலையில் இருக்கிறோம். உரிய நடவடிக்கை எடுத்தால் இதை நம்மால் தடுக்க முடியும்" என்று தெரிவித்தார்.
சீனா
பெரும்பாலும், விண்வெளியில் இருந்து விழும் ராக்கெட்டின் உதிரிப் பாகங்கள் அதிக வெப்பம் காரணமாக எரிந்து சாம்பல் ஆகிவிடும். இருப்பினும், சில ராக்கெட் பாகங்கள் அதையும் தாண்டி பூமியில் விழும் ஆபத்துகள் உள்ளன. இப்படித்தான் கடந்த மார்ச் 2020ஆம் ஆண்டு சீனாவின் லாங் மார்ச் 5பி என்ற ராக்கெட்டின் பகுதிகள் மேற்கு ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட் பகுதியில் விழுந்தது. இதனால் அங்குப் பல கட்டிடங்கள் மோசமாகத் தேசம் அடைந்தன. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை.
10 ஆண்டுகள்
இது தொடர்பான ஆய்வை தான் கனடா பல்கலைக்கழகம் நடத்தி இருந்தது. அதில் கடந்த 30 ஆண்டுகளாக விண்வெளியில் இருந்து விழுந்த ராக்கெட் பாகங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் அடுத்த 10 ஆண்டுகளில் ராக்கெட் பாகங்கள் கட்டுப்பாடு இல்லாமல் பூமிக்குத் திரும்பும் போது, மனித உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.
6-10% வரை
இரு வேறு முறைகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு உள்ளது. அதில் ராக்கெட் பாகங்களால் சுமார் 6-10% வரை மனித உயிர்களுக்கு ஆபத்து இருப்பது தெரிய வந்து உள்ளது. இதில் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது என்றும் விண்வெளியில் இருந்து விழும் ராக்கெட், வானில் பறக்கும் விமானத்தில் மோதினால் மிக மிக மோசமான விளைவை ஏற்படுத்தும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
பூமியின் தெற்கு நாடுகள்
பெரும்பாலான விண்வெளி ஏவுதளங்கள் பூமியின் வடக்குப் புறத்தில் தான் அமைந்துள்ளன. ஆனால், ராக்கெட் பாகங்கள் விழுவதால் ஏற்படும் ஆபத்து பூமியின் தெற்கு பகுதிகளுக்குத் தான் அதிகம் எனக் கூறப்பட்டு உள்ளது. இதுவரை ராக்கெட் பாகங்கள் விழுந்து உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும் கூட அப்படி நடக்கும் வரை காத்திருக்காமல் இப்போதே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டு உள்ளது.
ஆபத்தை நீக்கலாம்
இப்போது நம்மிடம் இருக்கும் தொழில்நுட்பத்தைக் கொண்டே இந்த ஆபத்தைப் பெருமளவு நீக்கிவிடலாம். சாட்டிலைட்டை விண்வெளியில் நிலைநிறுத்திய உடன் மீண்டும் ராக்கெட் என்ஜினை ஆன் செய்யும் வகையில் வடிவமைக்க வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம் ராக்கெட் மனிதர்கள் இல்லாத பகுதியில் விழுவதை உறுதி செய்யலாம். ஆனால், இதற்குச் செலவு அதிகம் ஆகும் என்பதால் பலரும் யோசிக்கின்றனர் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.