"ஒரு மாசம் ஆச்சு.." விண்வெளியில் மாட்டிக்கொண்ட சுனிதா வில்லியம்ஸ்.. பின்னணியில் கார்ப்பரேட் அரசியல்
வாஷிங்டன்: அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் கடந்த மாதம் விண்வெளிக்குச் சென்றார். அவர் ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப இருந்தார். இருப்பினும், இப்போது ஒரு மாதமாகியும் அவரால் பூமிக்கு திரும்ப முடியாத சூழலே இருக்கிறது. இதற்கு என்ன காரணம். அவர் எப்போது பூமிக்கு திரும்புவார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்காவைச் சேர்ந்த முக்கிய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ்.. இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். மேலும், இவர் ஏற்கனவே 2 முறை அமெரிக்காவில் இருந்து விண்வெளிக்குச் சென்று திரும்பியுள்ளார்.

திட்டம் என்ன: இந்தச் சூழலில் தான் சுனிதா வில்லியம்ஸும் புட்ச் வில்மோரும் கடந்த ஜூன் 5ஆம் தேதி சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு வாரத்தில் பூமிக்குத் திரும்புவதே அவர்கள் திட்டமாகும். விண்வெளியில் பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர்கள் ஒரு வாரத்தில் பூமிக்குத் திரும்ப ரெடியாக இருந்தனர். இருப்பினும், சில காரணங்களால் அவர்கள் பூமிக்கு வருவது தாமதமானது.
அதாவது அவர்களை அழைத்துச் சென்ற விண்கலத்தில் உந்துதல் செயலிழப்புகள் மற்றும் ஹீலியம் கசிவுகள் ஏற்படுவது தெரிய வந்தது. எனவே, அதே விண்கலத்தில் அவர்கள் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய நாசா பல்வேறு முயற்சிகளையும் எடுத்துள்ள போதிலும் அதற்குப் பலனில்லை. இதனால் சுனிதா வில்லியம்ஸ் எப்போது பூமிக்குத் திரும்புவார் என்றே தெரியவில்லை.
எப்போது திரும்புவார்கள்: நாசாவும் இதற்கான காலக்கெடு எதையும் நிர்ணயம் செய்யவில்லை. இருப்பினும், ஜூலை மாத கடைசியில் அவர்கள் விண்வெளியில் இருந்து திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "விண்கலம் எங்களை வீட்டிற்கு அழைத்து வரும்.. அதில் பெரியளவில் எந்த பிரச்சினையும் இருக்காது என்றே நினைக்கிறோம். விண்வெளியில் ஜாலியாகவே இருக்கிறோம். இங்கே எங்களுக்கான பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்" என்றார்.
தொடர் ஆய்வு: அதேநேரம் சுனிதா வில்லியமஸ் சென்ற ஸ்டார்லைனரின் என்ன பிரச்சினைகள் என்பதைக் கண்டறியவும் அது பறக்கும் விதத்தை மாற்றியமைக்கவும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஹீலியம் கசிவு விண்கலத்தைப் பாதிக்க வாய்ப்பு உள்ள நிலையில், அதைக் கண்டறிந்து சரி செய்யவும் ஆய்வாளர்கள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
அமெரிக்காவின் நாசா கடந்த சில காலமாகவே தனியார் நிறுவனங்களின் விண்கலம் மூலமாகவே வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் சென்று வருகிறது. அதன்படி இந்த முறை போயிங் ஸ்டார்லைனர் மூலம் அவர்கள் விண்வெளிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் தான் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் vs போயிங்: அதேநேரம் நாசாவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற விண்கலத்தையும் நாசா விண்வெளிக்கு வீரர்களை அழைத்துச் செல்ல பயன்படுத்தி இருக்கிறது. எனவே, போயிங்க் விண்கலத்தை விட்டுவிட்டு ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் அவர்களைப் பூமிக்கு அழைத்து வரலாமே என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. இருப்பினும், இப்போது இதுபோன்ற திட்டம் பரிசீலனையில் இல்லை என்றே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
கார்ப்பரேட் அரசியல்: வீரர்களை விண்வெளியில் இருந்து அழைத்துவர போயிங் விண்கலமே போதும் என்றும் அதேநேரம் வேறு வழியே இல்லை என்றால் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் பயன்படுத்தவும் ரெடியாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அப்படி ஸ்பேஸ்எக்ஸ் மூலம் பூமிக்கு அழைத்து வரப்பட்டால் அது போயிங் நிறுவனத்திற்கு மிகப் பெரிய அவமானமாக அமையும். இதன் காரணமாகவே எப்படியாவது தங்கள் விண்கலத்தை சரி செய்யும் முயற்சியில் போயிங் இறங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications