உலக வல்லரசுக்கு இப்படியொரு சிக்கலா.. அமெரிக்காவில் 164 வருடமாக 2 கட்சிகள் மட்டும் இருப்பது ஏன்
வாஷிங்டன்: நமது நாட்டில் ஏகப்பட்ட கட்சிகள் உள்ளன. இவர்கள் தான் சட்டசபை, நாடாளுமன்றத்தில் மக்களை பிரிதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.. ஆனால், உலக வல்லரசான அமெரிக்காவில் எப்போதும் இரு கட்சிகள் மட்டுமே இருந்துள்ளன. அங்குள்ள தேர்தல் முறையே அதற்கு காரணமாகும். இது தொடர்பாக நாம் விரிவாக பார்க்கலாம்.
உலக வல்லரசான அமெரிக்கா 1789இல் முதலில் நிறுவப்பட்ட போது, அதற்கான சட்டங்கள் வரையறை செய்யப்பட்ட போது, அதில் கட்சிகளைப் பற்றி எந்தவொரு குறிப்பும் இல்லை.

கட்சிகளே வேண்டாம்: சொல்லப்போனால் அமெரிக்காவை நிறுவியவர்களில் பலருக்கும் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லை. கட்சிகள் என்பவை பாரபட்சமான குழுக்களாகவே இருக்கும் என்றே அவர்கள் கருதினர். குறிப்பாக அமெரிக்காவை நிறுவியவர்களில் ஒருவரான அலெக்சாண்டர் ஹாமில்டன் கட்சிகளை "மிகவும் கொடிய நோய்" எனக் குறிப்பிட்டார். அதேபோல அமெரிக்காவின் முதல் அதிபரான ஜார்ஜ் வாஷிங்டன் கட்சிகள் பயங்கரமான சர்வாதிகாரத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரித்தார்.
அதாவது மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்படுவோர் குறிப்பிட்ட அமைப்பு (கட்சி) சொல்வதை சார்ந்து இருக்கக் கூடாது, ஒரு விவகாரத்தில் எது சரி என கருதுகிறார்களோ அதை ஆதரிக்க வேண்டும் அல்லது தவறு என கருதினால் அதனை எதிர்க்க வேண்டும் என்பதே அவர்களின் கருத்து. இப்படி பலர் எச்சரித்தாலும் அப்போதே நாடாளுமன்றத்தில் இரு குழுக்கள் அல்லது கட்சிகள் உருவாகிவிட்டன.
கட்சிகள்: வாஷிங்டன் அதிபராக இருந்த போதே ஹாமில்டன் தலைமையிலான பெடரலிஸ்ட் கட்சியினர், அவருக்கு எதிராக தாமஸ் ஜெபர்சன் தலைமையிலான பெடரலிஸ்ட் எதிர்ப்புவாதிகள் (அல்லது ஜனநாயக-குடியரசு கட்சியினர்) என இரண்டு பிரிவாக பிரிந்து இருந்தனர். மத்திய அரசும் மாகாண அரசும் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்பது தான் அடிப்படையில் இவர்களுக்கு இருந்த வேறுபாடு.
18ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட உள்நாட்டு போரில் பெடரலிஸ்ட் கட்சி காணாமல் போனது. அதன் பிறகு ஜனநாயக-குடியரசு கட்சி இரண்டாக பிளவுபட்ட நிலையில், ஜனநாயக கட்சி உருவானது. எதிர் தரப்பில் இருந்தவர்கள் விக் என்ற கட்சியை ஆரம்பித்தனர். அவர்கள் 4 முறை ஆட்சியை பிடித்த போதிலும் அக்கட்சியும் சிறிது காலத்தில் காணாமல் போனது. அதன் பின்னரே 1860இல் ஆபிரகாம் லிங்கன் குடியரசு கட்சியை தொடங்கினார். அதன் பிறகு கடந்த 164 ஆண்டுகளில் இந்த இரு கட்சியை தவிர வேறு யாரும் ஆட்சியை பிடித்ததே இல்லை.
எப்போதும் 2 கட்சிகள்: 1860க்கு முன்பும் சரி.. எப்போதும் ஒரு நேரத்தில் அமெரிக்காவில் 2 கட்சிகள் மட்டுமே இருந்துள்ளன. உலக வல்லரசாக அறியப்படும் அமெரிக்காவில் ஏன் எப்போதும் 2 கட்சிகள் மட்டுமே இருக்கிறது. இதர கட்சிகள் இருப்பதில்லை என்ற கேள்வி பலருக்கும் வரும். ஆனால் உண்மை அது இல்லை. அமெரிக்காவில் பல கட்சியினரும் களமிறங்குவார்கள். உதாரணத்திற்கு இந்த அதிபர் தேர்தலில் கூட அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜான் எஃப் கென்னடி மகன் ராபர்ட் எஃப். கென்னடி போட்டியிடுகிறார்.
இதுபோல ஆப்ஷன்கள் இருந்தும் அமெரிக்கர்கள் ஏன் 164 ஆண்டுகளாக இரு கட்சிகளை மட்டும் தேர்வு செய்கிறார்கள் என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இதற்கு அங்கு பின்பற்ற்படும் தேர்தல் முறை காரணமாகும். அமெரிக்காவில் Winner-take-all என்ற முறை பின்பற்றப்படுகிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவை போலவே யார் அதிக வாக்கு வாங்குகிறார்களோ அவர்கள் வெல்வார்கள். அதுதானே சரி... அதிக வாக்கு வாங்கியவர்களே தானே வென்றதாக அர்த்தம் என்று நீங்கள் கேட்கலாம், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது.
சிக்கல் என்ன: அதாவது ஏ, பி, சி என மூன்று பேர் அங்கு தேர்தலில் போட்டியிடுகிறார்கள் என வைத்துக் கொள்வோம். அதில் ஏ மற்றும் பி ஆகியோர் தலா 30% வாக்குகளை பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். சி வேட்பாளர் 35% வாக்குகளை வாங்கியதால் வென்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால் அவருக்கு எதிராக விழுந்த 60% வாக்குகளுக்கு மதிப்பே இல்லாமல் போய்விடும். அதாவது அவருக்கு எதிராக அதிக பேர் இருந்தாலும் வாக்குகள் பிரிவதால் சி வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். இதுதான் முக்கிய காரணம்.
அமெரிக்காவில் குடியரசு கட்சி மற்றும் ஜனநாயக கட்சி மட்டுமே வலிமையான கட்சிகளாக உள்ளன. மற்ற கட்சிகள் எல்லாம் சிறு சிறு கட்சிகள். எனவே அவர்களுக்கு வாக்களித்தால் அது நாம் யாரை தோற்கடிக்க வேண்டும் என நினைக்கிறோமோ அவர்களுக்கு ஆதரவாக போய்விடும் என அமெரிக்க மக்கள் நினைப்பதாலேயே இரு கட்சிகள் மட்டும் மாறி மாறி ஆட்சியை பிடித்துள்ளன. இந்த சிக்கலை களைய அமெரிக்காவில் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருப்பதை போன்ற விகிதாச்சார முறை வர வேண்டும் என்ற குரல்களும் தற்போது அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications