தேர்தல் முடிந்தாலும் 3 மாதம் கழித்தே புதிய அதிபர்! அமெரிக்காவில் மட்டும் ஏன் இப்படி! சுவாரசிய காரணம்
வாஷிங்டன்: நமது நாட்டில் சட்டசபைத் தேர்தலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலோ நடக்கும் போது, முடிவுகள் வெளியாகி சில நாட்களில் புதிய அரசு பதவியேற்கும். ஆனால், உலக வல்லரசான அமெரிக்காவில் அப்படி இல்லை. அதிபர் தேர்தல் முடிந்து சுமார் 3 மாதங்களுக்கு பிறகே புதிய அதிபர் பதவியேற்பார். இவ்வளவு காலம் கேப் ஏன்.. இதில் உள்ள சிக்கல் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தியா உட்பட கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் தேர்தல் நடந்தால்.. முடிவுகள் அறிவிக்கப்பட்டு சில நாட்களில் புதிய அரசு பதவியேற்கும். ஆனால், அமெரிக்காவில் மட்டும் அப்படி இல்லை.

11 வார இடைவெளி: தேர்தலுக்கும் புதிய அதிபர் பதவியேற்கும் நாளுக்கும் இடையே சுமார் 11 வாரங்கள் இடைவெளி இருக்கிறது. இது பார்க்க அதிகம் போலத் தெரிந்தாலும், உண்மையில் இது அந்நாட்டு அரசியலமைப்பு அனுமதித்த 16 வாரங்களை விடக் குறைவு. இவ்வளவு நாட்கள் இடைவெளி இருப்பது ஏன் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்கா என்பது decentralized நாடு. அதாவது அங்கு மாகாண அரசுக்கே அதிகாரம் அதிகம். இதனால் முதலில் தேர்தல் தேதி என்பதும் கூட ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொன்று என்றே இருந்தது. 1845ம் ஆண்டு தான் நவ. வாரம் முதல் செவ்வாய்க்கிழமை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அப்போது அமெரிக்கா முழுக்க முழுக்க விவசாய நாடாக இருந்தது. எனவே, அறுவடை எல்லாம் கணக்கில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பின்னணி: தேர்தல் நடந்து முடிந்து நான்கு மாதங்களுக்கு புதிய அதிபர் பதவியேற்க வேண்டும் என்பதே அமெரிக்க அரசியலமைப்பின் சட்டமாக இருந்தது. 1930களில் அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட நிலையில், அப்போது தான் தேர்தல் நடைமுறையைத் துரிதப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. ஏனென்றால் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்டால், அதிபர் பதவியில் இருப்போருக்குப் பெரிய அதிகாரம் இருக்காது. அதாவது பதவி இருக்குமே தவிர அதிகாரம் இருக்காது. இதைக் கருத்தில் கொண்டு 1933ம் ஆண்டு இதற்கான சட்டம் கொண்டு வரப்பட்டது.
நவ. மாதம் தேர்தல் நடைபெறும் நிலையில், அதைத் தொடர்ந்து ஜன. 20ம் தேதி புதிய அதிபர் பதவியேற்க வேண்டும் என்று விதியில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. வெளியே இருந்து பார்ப்போருக்கு 11 வாரங்கள் அதிகம் என்பது போலத் தோன்றும். ஆனால், இதற்கு சில குறிப்பிட்ட காரணங்கள் இருப்பதாக அந்நாட்டைச் சேர்ந்த வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இரண்டு காரணம்: முதலில் அதிகார மாற்றம் என்பது எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் நடக்க வேண்டும். தேர்தலில் வென்ற தலைவரும் அவரது டீமும் ஆட்சி நடத்தத் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அமைச்சர்களை முடிவு செய்வது, பாலிசி முடிவுகளை எடுப்பது, தேசியப் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை தருவது என்று பல்வேறு பணிகள் உள்ளன. அதற்கு இந்த காலகட்டம் தேவைப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
அதிபர் தேர்தல் நடைமுறை: மேலும், உலகின் மற்ற பகுதிகளில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ.. அவர்களே தேர்தலில் வென்றதாகக் கருதப்படுவார்கள். ஆனால், அமெரிக்காவில் மட்டும் அப்படி இல்லை. எலக்டோரல் காலேஜ் முறை அங்குப் பின்பற்றப்படுகிறது. எனவே, அதிகா வாக்குகளை யார் வாங்கியுள்ளனர் என்பதை விட யார் அதிக மாகாணங்களைக் கைப்பற்றி உள்ளனர் என்பதே முக்கியம். இந்த நடைமுறைக்கு சில வாரம் தேவைப்படும் என்பதும் இந்த 11 வார இடைவெளிக்குக் காரணமாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
அதேநேரம் இந்த காலத்தில் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டதாலும், தேர்தலுக்குப் பிறகு இடைவெளி என்பது வன்முறை உருவாகும் வாய்ப்பை தரலாம் என்பதாலும் இந்த இடைவெளியைக் குறைக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்துள்ளன.












Click it and Unblock the Notifications