கனடா விவகாரத்தில் ட்விஸ்ட்! இந்தியாவிற்கு எதிராக திரும்பிய அமெரிக்கா, இங்கிலாந்து.. என்ன நடக்கிறது?
வாஷிங்டன்: கனடா தனது நாட்டு தூதர்கள் 41 பேரை இந்தியாவில் இருந்து திரும்ப பெற்ற விவகாரத்தில், இந்தியாவிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் நாடுகள் கருத்துக்கள் தெரிவித்துள்ளன.
காலிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த பிரிவினைவாத தலைவரான 45 வயதான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் இந்திய அரசால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்தார். அவர் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் உள்ளன. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சர்ரேவில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் தலைவராக பதவி வகித்து வந்தார். இந்தியாவின் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) நிஜ்ஜாரின் தலைக்கு ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசாக அறிவித்து இருந்தது,

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி சர்ரேயில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாரா சாஹிப்பின் வாகன நிறுத்துமிடத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த கொலையின் பின்னணியில் இந்திய அரசு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இந்த குற்றச்சாட்டை இந்திய அரசு திட்டவட்டமாக மறுத்தது.
இதனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பபட்ட விவகாரம் சர்வதேச அளவில் சர்ச்சையானது . கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறிய குற்றச்சாட்டுகளை தொடர்ந்த இந்தியா தூதருக்கு சம்மன் அனுப்பியது. அதன்பின்னர் இரு நாடுகளில் இருந்தும் பரஸ்பரம் தூதர்கள் வெளியேற்றப்பட்டனர். விசாக்கள் வழங்குவதும் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், இந்தியாவில் உள்ள தூதர்கள் எண்ணிக்கை கனடா குறைக்க வேண்டும் என்றும் இந்தியா அறிவித்தது. கனடாவில் இந்திய தூதர்களின் எண்ணிக்கை 21 ஆக உள்ள நிலையில், இந்தியாவில் கனடா நாட்டு தூதர்களின் எண்ணிக்கை 62 ஆக இருந்தது. இதன் காரணமாக 41 கனடா தூதர்களை திரும்ப பெறும்படியும், அதற்கு அக்டோபர் 20ம் தேதியை காலக்கெடுவாகவும் இந்திய அரசு நிர்ணயம் செய்த்து.
இந்நிலையில், இந்தியாவின் வலியுறுத்தலை தொடர்ந்து கனடா அரசு இந்தியாவில் உள் தூதர்களில் 41 பேரை அக்டோபர் 20ம் தேதியான நேற்று திரும்ப பெற்றது. இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதலே கனடாவிற்கு மறைமுகமாக ஆதரவாகவே அமெரிக்க செயல்பட்டு வருகிறது. உளவுத்துறை தகவல்கள் தொடங்கி, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற கோரிக்கை வரை அமெரிக்காவின் செயல்பாடுகள் கனடாவிற்கு மறைமுகமாகவே ஆதரவாகவே இருந்து வந்தது.
இந்த சூழலில் அமெரிக்க வெளிவிவகார துறையின் செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர், கனட தூதர்கள் வெளியேற்றம் குறித்து பேசுகையில், "இந்தியாவில் இருந்து கனடா நாட்டு தூதர்கள் வெளியேறியது எங்களுக்கு வருத்தம் அளிக்கிறது. முக்கிய விவகாரங்களை தீர்ப்பதற்கு கனட நாட்டு தூதர்கள் இருக்க வேண்டியது தேவையாக உள்ளது. அதனால், கனடா தூதர்களை குறைக்கும்படி இந்திய அரசு வற்புறுத்த கூடாது என நாங்கள் இந்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தோம். தூதரக உறவுகள் பற்றிய 1961-ம் ஆண்டு வியன்னா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா நடந்து கொள்ளும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றார்.
இதனிடையே நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தில் கனடாவின் குற்றச்சாட்டுகளை அமெரிக்காவும் இங்கிலாந்தும் தீவிரமாக எடுத்துக் கொண்டு பேசி வருகின்றன. இதுவரை எந்த மேற்கு நாடுகளும் வெளிப்படையாக இந்தியாவை கண்டிக்கவில்லை. அதேநேரம் பிரிட்டனும் அமெரிக்காவும் இந்த விவாகரத்தில் இந்தியா விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற ரீதியிலேயே பேசி வருகின்றன.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவில் இருந்து எண்ணற்ற கனடா தூதர்களை வெளியேற்றுவது என்ற இந்திய அரசின் முடிவை எங்களால் ஏற்க முடியாது என்று கூறியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் கனடா விவகாரத்தில் பிரிட்டன் அமெரிக்கா ஆகிய நாடுகளுமே இந்தியாவுக்கு எதிராக திரும்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை பொறுத்தவரை இந்தியாவின் நட்பு அவர்களுக்கு மிகவும் முக்கியம். ஏனெனில் சீனா உலகின் முக்கியமான பொருளாதார மற்றும் ராணுவ சக்தியாக வளருவதை அந்நாடுகள் விரும்பவில்லை. சீனாவை சமாளிக்க இந்தியாவின் தேவை எப்போதும் தேவை. இந்த சூழலில் இந்தியாவை கண்டித்து இங்கிலாந்தும், அமெரிக்காவும் பேசி இருப்பது உலக அளவில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications