ஆபாச பட நடிகையுடன் நெருக்கம்! வெளியே சொல்லாமல் இருக்க பணம் தந்த விவகாரம்.. இன்று கைதாகும் டிரம்ப்?
ஆபாச பட நடிகையுடன் தொடர்பில் இருந்த விவகாரம் டிரம்பிற்கு மிகப் பெரிய தலைவலியாக மாறியுள்ளது.
வாஷிங்டன்: ஆபாச பட நடிகைக்குப் பணம் கொடுத்த விவகாரத்தில் இன்று டிரம்ப் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அப்படி நடந்தால் கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் அதிபராக டிரம்ப் இருப்பார்.
அமெரிக்க அதிபராக 2021 ஜனவரி வரை இருந்தவர் டிரம்ப். அமெரிக்க அதிபராக இருந்த போதே இவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதிபர் தேர்தலில் அடைந்த தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் போராட்டத்தைத் தூண்டிவிட்டது எல்லாம் நடந்தது.
அதிபர் பதவியை விட்டுத் தர மாட்டேன் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். இருப்பினும், அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதற்கிடையே அவர் இன்று கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

டிரம்ப்
டிரம்ப் கடந்த காலங்களில் ஒரு பிளேபாயாகவே இருந்துள்ளார். அவர் இளமைக் காலம் முதலே பல்வேறு பெண்களுடன் உறவில் இருந்துள்ளார். மேலும், சில பெண்கள் அவர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டுகளையும் வைத்திருந்தனர். டிரம்ப் தேர்தலில் போட்டியிட்டு வென்ற 2016 காலகட்டத்தில் இந்த செய்திகள் வெளியே வராமல் பார்த்துக் கொண்டார். தேர்தல் ஆண்டில் இதுபோன்ற செய்திகள் வந்தால், தனது இமேஜ் பாதிக்கப்படும். இதனால் வாக்குகள் குறையும் என்று அவர் கருதியதால் தனது தனிப்பட்ட தகவல்கள் பெரியளவில் பகிராமல் இருப்பதைப் பார்த்துக் கொண்டார்.

ஆபாச பட நடிகையுடன் தொடர்பு
இருப்பினும், தேர்தலுக்கு கொஞ்ச காலத்திற்கு முன்பு அமெரிக்காவின் பிரபல ஆபாசப் படப் பிரபலம் ஸ்டோர்மி டேனியல்ஸ் தான் டிரம்புடன் நெருக்கமாக இருந்துள்ளதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இது அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாசப் பட நடிகையுடன் அமெரிக்க அதிபர் வேட்பாளர் நெருக்கமாக இருந்தார் என்று டிரம்ப் எதிர்ப்பாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்து வந்தனர். தேர்தலுக்கு சில காலம் முன்பு வரை ஸ்டோர்மி டேனியல்ஸ் இது குறித்துத் தொடர்ந்து பேசி வந்தார்.

பணம் கொடுத்த விவகாரம்
இருப்பினும், தேர்தலுக்கு ஒரு வாரம் மட்டுமே இருந்த போது அவர் அமைதியானார். அதன் பிறகு இது குறித்து வாயே திறக்கவில்லை. ஏனென்றால் தேர்தலுக்கு ஒரு வாரம் இருந்த போது, தன்னைப் பற்றியும் தன்னுடன் இருந்த உறவு குறித்தும் பேசக் கூடாது என்று ஸ்டோர்மி டேனியல்ஸ் உடன் டிரம்ப் ஒரு ஒப்பந்தம் போட்டார். இதற்காக அவர் 1.30 லட்சம் டாலரும் (இந்திய மதிப்பில் சுமார் ஒரு கோடி) கொடுத்துள்ளார். அந்தத் தேர்தலில் டிரம்ப் வென்று, 4 ஆண்டுகள் அதிபரானது எல்லாம் தனிக்கதை.

எதிராக திரும்பிய வழக்கறிஞர்
ஆனால், இப்போது இந்த விவகாரம் தான் டிரம்பிற்கு எதிராகவே மாறியுள்ளது. அதாவது டிரம்ப் இந்த தொகையைச் சட்டவிரோதமாகத் தேர்தல் நிதியில் இருந்து கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. அப்போது டிரம்பின் வழக்கறிஞராக இருந்த மைக்கேல் கோஹன் இப்போது டிரம்பிற்கு எதிராகவே வாக்குமூலம் அளித்துள்ளார். ஆபாசப் பட நடிகைக்குத் தனது நிதியை முதலில் கொடுத்ததாகவும் அதன் பிறகு அதை டிரம்ப் தரப்பு தனக்குத் திருப்பி அளித்துவிட்டதாக மைக்கேல் கோஹன் வாக்குமூலம் அளித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இன்று நடவடிக்கை
கோஹன் கடந்த வாரம் தான் நீதிமன்றத்தில் டிரம்பிற்கு எதிராகச் சாட்சியம் கொடுத்தார். மேலும், இந்த விவகாரத்தில் நீதித்துறைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன் என்றும் கூறியிருந்தார். டேனியல்ஸுக்குப் பணம் செலுத்தப்பட்டது இதுவரை சரியாகக் கணக்குக் காட்டப்படவில்லை. தேர்தல் நிதியில் இருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது உண்மை என்றால் இது மிகப் பெரிய குற்றமாகவே கருதப்படும். இந்த விவகாரத்தில் தான் டிரம்ப் மீது இன்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குற்றப்பத்திரிக்கை
இன்று இந்த விவகாரத்தில் டிரம்ப் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு சட்ட நடைமுறை பல மாதங்களுக்கு நீடிக்கும். அவர் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், டிரம்ப் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலே அது டிரம்ப் மீதான இமேஜை கடுமையாகப் பாதிக்கும். அடுத்து அவர் 2024ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை அவருக்குப் பலத்த சரிவை ஏற்படுத்தும். மேலும், முன்னாள் அதிபர் மீது இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

கைதாகும் டிரம்ப்?
அதேநேரம் தான் எந்த காலகட்டத்திலும் டேனியல்ஸுடன் தொடர்பில் இருந்தது இல்லை என்றும் தன்னை கண்டு அஞ்சி ஆளும் தரப்பு இந்த நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் டிரம்ப் சாடியிருந்தார். இந்த விவகாரத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்படுவேன் என்று டிரம்பே சில நாட்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனால் ஆளும் தரப்பிற்கு எதிராக மக்கள் பெருந்திரளாகப் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்தார். இருப்பினும், அமெரிக்காவின் பொருளாதார தலைநகராகக் கருதப்படும் நியூயார்க்கில் நடந்த இந்த போராட்டத்தில் மிகக் குறைவான நபர்களே கலந்து கொண்டனர். இதுவும் டிரம்பிற்கு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications