கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன?
ஊட்டி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. கோடை காலங்களில் அவர் தனது தோழி சசிகலாவுடன் இங்கு வந்து தங்குவார்.
இந்த பங்களாவில் அரசியல் தொடர்பாக பல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் முதல்வராக ஜெயலலிதா இருந்த போது கொடநாடு செல்லும்போது இந்த பங்களாவில் குட்டி தலைமைச் செயலகமே இயங்கி வந்தது என சொல்லலாம்.

முக்கிய ஆவணங்கள்
இங்கு முக்கிய ஆவணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளைச் சம்பவம் நடந்தது. அதை தடுத்த காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டார்.

தனிப்படை போலீஸார்
இந்த கொலை, கொள்ளை குறித்து தனிப்படை போலீஸார் விசாரித்து வந்தனர். இதையடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கின் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு நீதிபதி முருகன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள்
அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் சார்பில் ஷாஜகான் மற்றும் கனகராஜ், சிபிசிஐடி சார்பில் விசாரணை அதிகாரி முருகவேல், குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷாஜகான் தன் வாதத்தில் சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கில் புலன் விசாரணையை மேற்கொள்கிறார்கள்.

720 செல்போன் தகவல் பரிமாற்றங்கள்
தனிப்படை போலீஸார் கைப்பற்றிய 720 செல்போன் தகவல் பரிமாற்றங்களின் உண்மை தன்மை அறியும் சோதனையில் சிபிசிஐடி போலீஸார் ஈடுபட்டுள்ளனர். மேலும் தனிப்படை போலீஸார் விசாரித்த சாட்சிகளின் ஆவணங்களை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகிறார்கள். வழக்கின் விசாரணையை மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் வேண்டும் என வாதிட்டார். இந்த வாதத்தை கேட்ட நீதிபதி முருகன் இந்த வழக்கின் விசாரணையை ஜனவரி 27 ஆம் தேதி தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவால் பாதுகாக்கப்பட்டு வந்த முக்கிய ஆவணங்களை எடுக்கவே இந்த கொள்ளை சம்பவம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. 24 மணி நேரமும் மின்சார வசதி கொண்ட இந்த பங்களாவில் கரண்ட் கட் என்பதால் அரிதிலும் அரிது. அப்படியே கட்டானாலும் தானியங்கி ஜெனரேட்டர்கள் உடனே ஆன் ஆகிவிடும். ஆனால் கொள்ளை, கொலை சம்பவம் நடந்த நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. அது போல் சிலரது மர்ம மரணங்களும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த கொலை கொள்ளை சம்பவத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற முக்கிய கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications