நல்ல காரியம் செய்தீர்கள் சார்...முதல்வர் காரை மறித்து நன்றி சொன்ன மாணவி
முதல்வர் கன்னியாகுமரிக்கு ஆய்வுக்காக சென்றபோது வழி மறித்த மாணவிகளுக்காக தனது கான்வாயை நிறுத்தி நலம் விசாரித்தார். அப்போது முதல்வரிடம் பள்ளிகள் திறக்கப்பட்டதையும் மாணவ மாணவிகளுக்கு முதல்வர் செய்யும் நல்ல விஷயங்களையும் பாராட்டினார் ஒரு மாணவி. அவர் அளித்த புத்தகத்தை பெற்றுக்கொண்டு நன்றி சொல்லி புறப்பட்டுச் சென்றார் முதல்வர்
தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் அவரது செயலில் மிகவும் நிதானத்தன்மை வந்துள்ளதை எதிர்க்கட்சியினரும் அங்கிகரிக்கின்றனர். முதல்வரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் நிதானமாக அனைவரது கருத்தையும் கேட்பதாக அமைந்துள்ளதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

முதல்வராக பொறுப்பேற்கும் முன் தேர்தல் அறிக்கைக்காக கல்வியாளர்கள், துறைசார் நிபுணர்களிடம் நடத்திய ஆலோசனை பின்னர் அவர்கள் ஆலோசனையை நடைமுறைப்படுத்தியதையும் காண முடிந்தது. பள்ளிக்கல்விக்காக மிக அதிகமாக 32000 கோடி ரூபாய் ஒதுக்கியதும், அதற்கென இளைய அமைச்சர் ஒருவரை நியமித்து அவர் மூலம் பல காரியங்கள் செய்து வருவதும் அறிந்ததே.
மாணவ மாணவியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னரே பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசின் நடவடிக்கை காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்டதில் மாணவ மாணவியர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேர்வு நடத்தப்படுவதிலும், பள்ளி மாணவ மாணவியருக்கான வகுப்புகள் நடத்துவதற்கும் கல்வியாளர்கள் ஆலோசனைப்பெற்றே நடைமுறை உள்ளதும் கவனிக்கத்தக்கது.
இந்நிலையில் முதல்வர் சென்னையில் மழைக்கால நிவாரண பணிகளை முடித்த கையோடு கன்னியாகுமரியில் ஏற்பட்ட பாதிப்புகளை காண புறப்பட்டுச் சென்றார். தூத்துக்குடி வரையில் விமானம் பின்னர் தரை மார்கமாக கன்னியாகுமரி சென்றார். முதல்வர் செல்லும் வழியில் பொதுவாக மாணவ மாணவியர் நின்றால் நின்று பேசுவது வழக்கம்.

கன்னியாகுமரி செல்லும் வழியில், தூத்துக்குடி மாவட்ட எல்லையான தோட்டிலோவன்பட்டி விலக்கு அருகே கோவில்பட்டி எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளி மாணவ, மாணவிகள் முதல்வரை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்தனர். மாணவ-மாணவிகளைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், தனது வாகனத்தை நிறுத்தி விசாரித்தார். பள்ளி மாணவி பி.சந்தோஷினி அளித்த வைரமுத்து கவிதைகள் புத்தகத்தைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் மாணவியிடம் நீண்ட நாட்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறந்து பாடம் நடத்துவது குறித்து முதல்வர் கேட்டார். வீட்டிலிருந்து படிப்பது சுலபமாக இருந்ததா? அல்லது பள்ளிக்கு வந்து படிப்பது எளிதாக உள்ளதா? என முதல்வர் கேட்டார்.
அப்போது முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலளித்த அந்த மாணவி, நீண்ட நாட்களாக நாங்கள் ஆன்லைனில் பாடம் கற்று வந்தோம். அது மிகுந்த சிரமமாக இருந்தது, தற்போது பள்ளிகள் திறந்து நேரடி வகுப்புகள் நடப்பதால் உற்சாகமாகப் படித்து வருகிறோம். பள்ளிகளைத் திறக்க உத்தரவிட்டதற்கு நன்றி எனத் தெரிவித்தார். சிரித்தப்படியே அவரது நன்றியை ஏற்றுக்கொண்ட முதல்வர் நன்றாக படிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.












Click it and Unblock the Notifications